இந்த கேள்வியை பின்னர் கேட்டுக் கொள்ளலாம் என நினைத்தாலும் தொடர்ந்து இதுகுறித்து சிந்தனை வந்து கொண்டேயிருக்கிறது. அதனால் தான் இக்கடிதம்.
முன்பு ஒருமுறை இலக்கியத்தின் வழி ஒருவர் செல்லாத நிலங்களை காணவியலுமா என கேட்டிருந்தேன். அதற்கு தளத்தில் இலக்கியத்தில் நிலக்காட்சிகளை காணுதல் என்ற தலைப்பில் மிக நீண்ட பதிலொன்றை அளித்தீர்கள். அதன் பிறகு தான் என் ஐயம் நீங்கியது. ஆனால் வேறொரு கேள்வி முளைத்திருக்கிறது.
இலக்கியம் ஒரு வாசகனுக்கு, அவன் கண்டிராத நிலங்களை, வாழ்க்கை சூழலை, உச்ச தருணங்களை, மெய்மைகளை கற்பனையில் சமைத்த வாழ்வின் மூலம் வழங்குகிறது. கற்பனையின் வழி அது சாத்தியம் என்பதே இலக்கியம் என்னும் கலையின் அடித்தளம். இன்று ஒரு வாசனாக என் அறிதல்களில் ஒன்றானது என்று இதை என்னால் முன்வைக்க இயலும்.
நான் அதிகமாக அறிந்த ஒரேயொரு பெருநாவலாசிரியர் தாங்கள் தான். உங்கள் சொற்களின் வழி சென்று பிற ஆசிரியர்களை அறிய சென்று கொண்டிருப்பவன். தாங்கள் பெரும் வாசகரும் கூட. அத்தோடு பெரும் பயணியும்.
ஒரு இலக்கிய வாசகன் கட்டாயம் பயண செய்தாக வேண்டும் என்பது இலக்கியத்தை மறுப்பதாக சென்று முடியும். ஆனால் பெரும் நாவல்களின் ஆசிரியன் கட்டாயம் பயணம் செய்பவனாக தான் இருக்க வேண்டுமா ? குறிப்பாக மானுடர்களை அவர்களின் நிலத்தில், வரலாற்றின் பெருங்களத்தில் வைத்து நோக்கும் ஆசிரியன்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் இப்படி சொல்லும் போதே தஸ்தாயெவ்ஸ்கி நினைவிற்கு வருகிறார். அவரோ பனித்துளியின் வழி சூரியனை நோக்குபவர். மிகச்சிறு கால அளவையும் நில எல்லையையும் உருபெருக்கி மானுடத்தின் என்றுள்ள வினாக்களான தகிக்கும் சூரியனை ஆராய்கிறார். இன்னும் டால்ஸ்டாயை வாசிக்காததால் அவர்குறித்து தெரியவில்லை.
இந்த கேள்வியை கேட்டு முடித்தவுடன் எனக்கு தோன்றுவது, இலக்கிய வாசகன் சொற்களில் இருந்து காட்சிகளை கனவுகளை உருவாக்கி கொள்ள முடியும். ஆனால் நாவலாசிரியர் காட்சிகள் இல்லாது எப்படி சொல்லோவியம் தீட்ட முடியும் ? அதன் பொருட்டு தான் பயணங்கள் மேற்கொள்கிறார்களா ? ஒருவேளை இந்த கேள்விகள் எல்லாம் பிழையாக கூட இருக்கலாம். என் புரிதலில் ஏதோ பிரச்சினை உள்ளது என்பது மட்டும் தெரிகிறது. இது பதிலளிக்க தகுதியானது தான் என்றால் விடை சொல்லவும் ஜெ.
அன்புடன்
சக்திவேல்