தெரு ஆடுகிறது
காத்துக்கு வளைந்து நிலத்தைத் தொட்டு
எழுந்து வரும் மரங்களைப்போல
தெருவோரக் கட்டடங்கள்
அசைந்தாடி அச்சமூட்டுகின்றன
சட்டென்று உணர்ந்த முதல் பார்வையில்
இப்படித்தான் தோன்றியது.
நிதானித்து நிமிர்ந்து பார்த்தால்
அவன்தான் ஆடிக்கொண்டு வருகிறான்
இந்தச் செக்கல் நேரத்தில்
அவனுடைய கடமை அது
தெருவின் இருமருங்கையும்
சிக் சக் அடித்து
பாம்புபோல ஊர்ந்துகொண்டு வருகிறான்
நிற்பதற்கு இரண்டுகால் போதாது
இடையிடையே கைகளும் அவனுக்கு உதவுகின்றன
பெருந்துயரம், முகத்தின் பள்ளத்தாக்கில்
காட்டுத் தீயாக பரவிக்கொண்டிருந்தது
என்ன மச்சான் இவ்வளவு சோகமாக
இருக்கிறீங்க என்றேன்
ஏதாவது உதவி செய்யட்டுமா என்று
எனது ஆருயிர் நண்பன் கேட்டான்
அதனால்தான் இத்தனை சோகம் என்றான்
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.
இந்தக் காலத்தில்
உதவிக்கு முன்வருவதே நல்ல மனம்தானே என்றேன்.
அதன் பிறகுதான்,
ஏத்துக் கட்டி இறைப்பதைப்போல
நாக்கினால் சொற்களை அள்ளி எறிந்தான்
இப்படித்தான் முன்பும்
ஒரு நண்பன் உதவ முன்வந்தான்
வாங்கிப் பழக்கமில்லை ஆதலால்
எப்படிச் சமாளிப்பதென்று தெரியவில்லை
என் நிலமையைப் பார்த்து உதவுவதாக
நினைத்துக்கொண்டேன்
நண்பர்களாகிவிட்டோம்தானே என்று சொல்லி
சில தேவைகளுக்கும் உதவினான்
நானும் உடலையும் மூளையையும்
அவனுக்காகத் திறந்துவிட்டேன்
எதிர்பாராமல் கீழே விழுந்தவன்
எழுந்து, இடுப்பில் சொருகியிருந்த
குவாட்டரை கபக் என்று ஒரே மூச்சில்
வாய்க்குள் கொட்டிவிட்டு
கதையைத் தொடர்ந்தான்
அத்தனை நிறைவெறியிலும்
ஒரு கெட்ட வார்த்தையைக்கூட காணவில்லை
முதலில் உதவி என்று சொல்லப்பட்டது
மெல்லக் கருணை என்று மாற்றப்பட்டது
பின், கடன் என்று கணக்குக் காட்டத் தொடங்கினான்
தேத்தண்ணீர் குடிச்ச கணக்கு
குச்சிமிட்டாய் திண்ட கணக்கு என
கல்கியின் பொன்னியின் செல்வன்
நாவலைப்போல பகுதி பகுதியாக
கணக்குக் கொப்பிகள் நிறைந்தன
உடலில் விஷம் ஏறுவதைவிட வேகமாக
அவனுடைய நூலகம்
நான் பட்ட கடன்களின் தொகுப்புக்களால்
நிறைந்துவிட்டன
ஒரு கட்டத்திற்குமேல்,
நான் திட்டமிட்டு கொள்ளையடித்ததாகச் சொன்னான்
கந்து வட்டிக்கு விட்டவனிடமிருக்கும்
கருணையைக் கூட காணல
அவன் மட்டும்தானே சொல்கிறான்
என்று ஓர் ஆறுதலாவது இருந்தது.
அந்த ஆறுதல் நீடிக்கவில்லை
கண்ட நிண்ட தெரு நாய்களெல்லாம்
என்னைக் கண்டால் குலைக்கத் தொடங்கியது
இப்படித்தான், குடிச்சிக்கிட்டிருக்கும்போது
ஒருநாள் “நீ காசுக்குப் படுக்கிற அளவுக்கு
போய்விட்டயாமே” என்று மட்டும் கேக்கல
ஆனால், ரகசியமானது என நம்பியிருந்த
மசிர் மட்டையையெல்லாம்
உழறிக்கொட்டினான்
இவனுக்கு எப்படித் தெரியும் என்று
ஒரு கணம் திமித்துப் போனேன்
அன்றிலிருந்து, யாராவது நெருங்கி
உதவி ஏதும் செய்யட்டுமா என்றால்
தலைதெறிக்க ஓடுவது பழகிவிட்டது
இப்பயெல்லாம் ஓட முடியாது என்பதால்
முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு
அழுதுவிடுகிறேன் என்று கூறி,
பழையபடி தெருவை ஆட்டிக்கொண்டு
அசைந்தாடும் கட்டடங்களின் நடுவே
சிறகில் வெடில் பட்ட பறவைபோல
தாழப் பறந்தபடி மிதந்துகொண்டிருந்தான்
வீட்டை அடையும்முன்
எந்தச் சந்தியிலும் சதிமகுத்து
வந்துவிடக்கூடாது என்று பிராத்தித்துக்கொண்டேன்
எனது வெறி எப்போது முறிந்தது என்று
நினைவில்லை.
ஏதாவது உதவி வேண்டுமா என்று
கேட்டபடி யாராவது உங்களிடம் வரலாம்
எச்சரிக்கையோடு இருங்கள்