இளையராஜாவை முன்வைத்து
இளையராஜா தனது இசை குறித்து மிகையான ஒரு மதிப்பீட்டை உருவாக்கியதே அவர் செய்த பெருந்தவறு. வேறு எந்த இசையமைப்பாளர்களும் அப்படியில்லை. எல்லாக் காலத்திற்குமான இசைக் கடவுள் என நம்பத் தொடங்கிவிட்டார். அவரைச் சூழ இருந்த சினிமா உலகம் அவரை அப்படி ஆக்கவிட்டது.
இசை என்பது சப்தங்களை வைத்துச் செய்கின்ற கலைப் பொருள் என்பதை மறந்துவிட்டார். சப்தங்ளைக் கொண்டு செய்யும் அனைத்தும் இசையிலும் தாக்கம் செலுத்தும். இதைத் தெளிவாகச் சொல்வதெனில், தொழில் நுட்ப வளர்ச்சி சப்தங்களை புதிய புதிய பரிமாணங்களில் உருவாக்கும் என்பதைப் புரிந்துகொள்ள மறந்துவிட்டார். அல்லது அதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்.
இசைக்கருவிகள் என்பதும் கூட, சப்தங்களுக்கு புதிய உள்ளடக்கத்தைக் கொடுக்கும் தொழில்நுட்பச் செயற்பாடு என்று ஏன் அவருக்கு உணரமுடியாது போய்விட்டது?
பலவகையான இசைக்கருவிகள் இருக்கின்றன. உருவாக்கப்படுகின்றன எனில், அது சப்தங்களை மேலும் புதிதாகவும், வித்தியாசமாகவும் மாற்ற வேண்டிய மனித உள்ளுணர்வின் உந்துதல் வழி நடந்தேறும் ஒன்று. இசையின் மூலப்பொருளே சப்தங்கள்தான். அந்த சப்தங்களின் ஊடாகவே இசையில் ஏற்படும் சப்தமின்மைகளும் கூட மறைந்திருக்கும் சப்தங்களாகவே இருக்கும். இசையைப் பொறுத்தவரைச் சப்தங்களும், மௌனங்களும் இரண்டறக்கலந்த ஒன்று.
தொழில்நுட்ப வளர்ச்சியின் வழியாகவே, மேலும் பல சப்தங்களை உருவாக்கவும், செம்மைப்படுத்தவும், இசைக்கோர்வையை மேலும் மேலும் துல்லியமாக ஒழுங்குபடுத்தும் வாய்ப்பு உருவாகிறது. மிக நுண்ணிய சப்தங்களை உருவாக்கவும், கேட்கவுமான தொழில் நுட்பங்கள் உருவான பிறகு, இசை தனது உள்ளடக்கத்தை மாற்றத் தொடங்குகிறது. அந்த மாற்றமே கடந்தகாலத்தில் இருந்த சப்தங்களின் உலகிற்கு புதியதொரு கேட்டல் முறையும், அதனூடாக மனித மனங்களில் நுண் தளத்திலான உணர்வுகளையும் கிளரச் செய்யும் இசை உணர்தல் முறையும் பரீட்சயமாகிறது.
சப்தங்களை வைத்து கற்பனை செய்யும் ஆற்றலும், அதன் வடிவ அமைப்பும் ஒரு கலைஞனின் ஆற்றலோடு தொடர்பு பட்டது. அந்த சப்தங்களை வைத்து ஒரு உலகத்தைக் கற்பனை செய்யும் ஆற்றல் மட்டுமே இங்கு போதுமானதல்ல. அந்தக் கற்பனையைச் செய்வதற்கு அவருக்குப் பரீட்சயமான சப்தங்கள் அதிகம் இருக்க வேண்டும். அதிகம் என்று நான் சொல்வது என்னவெனில், விதம் விதமான சப்தங்களோடு பரீட்சையம் இருப்பவர்கள், அத்தனை சப்தங்களைக்கொண்டும் தனது இசையைக் கற்பனை செய்கிறார்கள். செய்யவும் முடியும். குறிப்பான கொஞ்ச நஞ்ச சப்தங்களை மட்டுமே தேர்வு செய்பவர்கள் எத்தனை ஆற்றலுள்ளவர்களாக இருந்தாலும் அவர்களின் இசை என்பது குறிப்பிட்ட சப்தங்களால் ஆனதாகச் சுருங்கிவிடுகிறது. அனைத்து சப்தங்களையும் கொண்டு தனது இசையைக் கற்பனை செய்யுமளவு தனது இசை உள்ளுணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இளையராஜா மிகக் குறுகியளவான சப்தங்களோடுதான் அதிக நெருக்கமானவராக இருந்தார். தொழில் நுட்பத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட மிகக் குறைவான கருவிகள் எழுப்பும் சப்தங்களை மட்டுமே எடுத்துக்கொண்டார். அவற்றிலும் அந்தக் கருவிகளின் வகைமைகள் குறித்து அக்கறைகொள்பவராக இருக்கவில்லை. அதனால்தான், தனது இசை இயற்கையானது என்றும், கம்பியூட்டர்கள் முதற்கொண்டு பல கருவிகள் உருவாக்கும் சப்தங்களைச் செயற்கையானது என்றும் வெளிப்படையாகவே அறிவித்துக்கொண்டார். அவர் சொல்லும் இயற்கையான இசை என்பது கூட அன்றையக் காலங்களிலும் அதற்கு முன்பும் இருந்த, அல்லது அவருக்குக் கிடைத்த இசைக்கருவிகளால் உருவாக்கப்பட்ட சப்தங்களை வைத்து கற்பனை செய்த இசைதான். அதை மறந்தார். அல்லது அவரின் நிலைமை அவரை அப்படிச் சொல்லும் நிலைக்கு இட்டுச் சென்றது.
அவரிடம் அபரிமிதான இசைக் கற்பனை செய்யும் ஆற்றல் இருந்தது என்பதை மறுக்கமுடியாது. ஆனால், அவரின் கற்பனையில் உருவாகின்ற சப்தங்களின் ஒழுங்கமைப்பு மட்டுமேதான் இசை என சின்னப்பிள்ளைத்தனமாகவும், பிடிவாதமாகவும் வலியுறுத்துவது அத்தனை ஏற்புடைய ஒன்றல்ல. அவர் திரைப்படங்களுக்கு இசையமைக்க வந்த இரண்டு வருடங்களில், அவரே ஸ்டீரியோ ஒலி அமைப்பைத் தனது பாடல்களில் பயன்படுத்தியதாக பெருமை அடித்துக்கொண்ட சம்பவங்கள் அதிகம் பேருக்குத் தெரிந்ததுதான். அதைப்போல், 1986ம் ஆண்டு கம்பியூட்டரின் உதவியோடு அல்லது அந்தக் கருவியால் உருவாக்கப்பட்ட சப்தங்களையும், அந்தக் கருவியால் சப்தங்களை ஒருங்கிணைத்துப் பாடலை உருவாக்கியும் பகிரங்கமாக அறிவித்தார். அப்போது அவருடன் திலீப்குமார் அதாவது இன்று ஏ.ஆர்.ரஹ்மான் என அழைக்கப்படும் இசையமைப்பாளரின் உதவி இருந்தது என்றும் தகவல்கள் உண்டு.
தொழில் நுட்ப வளர்ச்சியை இசையுருவாக்கத்தில் எப்போதும் பயன்படுத்திய இளையராஜா, அதிலும் கம்பியூட்டர் வந்த பிறகும் அதையும் பயன்படுத்தும் நிலையை ஏற்றுக்கொண்டார். ஆனால் தொழில் நுட்ப வளர்ச்சியை புரிந்து அதனோடு செயற்படமுடியாது போன தனது இயலாமையை மறைப்பதற்காக, பிற்காலத்தில் இயற்கையான இசை. செயற்கையான இசை என்றெல்லாம் கதையளக்கத் தொடங்கினார். இசைக்கற்பனை செய்யும் ஆற்றல் மட்டுமே போதாது, அவற்றோடு தொடர்புடையதாக ஏற்படும் மாற்றங்களையும் புரிந்துகொண்டு பயணிக்க வேண்டும். அவரால் அப்படிப் பயணிக்க முடியாது போய்விட்டது. அதுதான் அவரை ஒரு இசைமேதை என்ற இடத்தைவிட்டு துாக்கிவீசிவிட்டது.
ஒருகாலகட்டத்தின் இசையாக மட்டுமே பார்க்கக் கூடிய இசையாக அவரின் பாடல்கள் பண்பு மாற்றம் பெற்றுவிட்டன. அதற்கான காரணம் அவரின் இசைக் கற்பனையின் போதாமை அல்ல. புதிது புதிதாக உருவாகும் சப்தங்களையும், சப்தங்களின் பன்மையான இடத்தையும் உணர்ந்து, அவற்றைக்கொண்டு தனது இசைக் கற்பனையினுாடு இணைக்க முடியாமல்போன இடம்தான், அவரை ஒரு மேதை என்ற இடத்தைவிட்டுக் கீழிறக்க உதவியது.
ஒரு பாடல் உருவாக்கத்தில் தொழில் நுட்பத்தின் பங்கு உண்டு என்பதை அவரின் தோதுக்காக மறைக்க முனைந்த இடம்தான் அவர் ஒரு காலகட்டத்திற்குரிய இசைக்கான நபராக மாறவேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஒரு பாடலுக்கான சப்தங்களை உருவாக்குவது தொடங்கி, அதைப் பதிவு செய்தல், அந்தப் பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல் என அனைத்திலும் தொழில் நுட்பத்தின் பங்குதான் அதிகம் இருக்கிறது. இவற்றை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு, தொழில் நுட்பத்தை வெறுப்பதாகவும், அதனூடாக உருவாக்கப்படும் இசைக்கற்பனையை வெறுப்பதும் ஒரு மேதையின் வேலையாக இருக்காது.
காலம் கடந்தும் இளையராஜாவின் பாடல்கள் கேட்க முடியாததாக மாறிவிட்டது என நான் சொல்வதாக இதை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. 1986ம் ஆண்டு வரையான அனேகபாடல்கள் இன்றும் கேட்கக் கூடிய இசைக் கற்பனையை தனக்குள் பொதித்துவைத்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால், மாறிவிட்ட இசைக் கலாச்சாரத்தில், இசைக்கற்பனையின் புதிய புதிய திசைகள் திறந்துவிடப்பட்ட இணைய உலகில், புதிய சபதங்களையும், பாடலை உருவாக்கும் தொழில்நுட்பங்களின் புதிய செயற்பாடுகளும் நிறைந்துவிட்ட காலத்திலும், உலகளாவிய பலவகை இசைகளை நுகரும் வாய்ப்புக்களும் உருவாகிவிட்ட நிலையிலும், இசையை உணரும் உள்ளுணர்வுகளில் பன்மையான உள்ளடக்கங்கள் உருப்பெற்றுவிட்ட இன்றைய நிலையில் – பழைய புளித்துப்போன,கேட்டுக் கேட்டுத் திகட்டிவிட்ட அதிலும் மிகக் குறைவான இசைக் கற்பனையைக் கொண்டுவந்து இதுதான் உன்னத இசை என அடம்பிடிப்பது சின்னத்தனமான ஒன்று.
தமிழ் திரையிசையிலே மாற்றங்கள் வந்துவிட்டன என்பதற்கான உதாரணமே, இளையராஜாவை தற்போது திரைப்படங்களுக்கு இசையமைக்க யாரும் கூப்பிடுவதில்லை என்பதிலே புரிந்துவிடக் கூடியதுதான். இதற்குப் பெரிய விவாதங்கள் அவசியமில்லை.
1976களில் இளையராஜா புதிய இசைக் கற்பனையோடு வந்தார் என்பது உண்மைதான். அப்போது கூட சில பாடல்கள் ஜி.கே.வெங்கடேஸின் பாடல்களை நினைவூட்டாமலில்லை. எனினும், அதைக் கடந்து இளையராஜா என தனித்துத் தெரிவதற்கான இசைக்கற்பனைகள் நிறைந்த பாடல்கள் அதிகம் இருந்தன. அது 1986வரை மேலோங்கியிருந்தது. அதன் பிறகு அவரது இசையில் மிகச் சிறிதளவான இசைக்கற்பனை கொண்ட பாடல்களே அவரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. எந்த இசைக்கற்பனை உள்ளீடாக இருந்த பாடல்கள் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்தோ அதை நெருக்கமுறும் ஒரேவகை இசைக் கற்பனை கொண்ட பாடல்களையே 1986களுக்குப் பிறகு அதிகம் உருவாக்கினார் என்பதுதான் உண்மை.
திரையிசையைப் பொறுத்தவரை, வெறும் இசைமட்டுமே பாடலாக இருந்துவந்ததில்லை. பாடல் வரிகளின் ஈர்ப்பும், புதுமையும் கூட மக்களால் ரசிக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்தவகையில் வைரமுத்துவோடு இணைந்து இளையராஜாவின் இசைக் கற்பனை ஏற்படுத்திய மாயங்கள் முழுமையான பாடல் என்ற ரசனை வெளியை உருவாக்கியது. ஆனால், 1986களிக்குப் பிறகு ஈர்ப்பான, புதுமையான கவிதை வரிகளையும் இழந்தது. இசைக் கற்பனையின் புதுமைகளையும் இழந்தது. ஆனால், மக்கள் ரசித்த சிலவகை இசைக் கற்பனைகளையே மீண்டும் மீண்டும் அள்ளி வீசிக்கொண்டிருந்தார். அதுவும் ஒருவகை சலிப்பை மக்களிடம் ஏற்படுத்தித்தான் இருந்தது. அதனால்தான், 86களுக்குப் பிறகு அதிகமான இசையமைப்பாளர்களின் பாடல்கள் இளையராஜாவின் செல்வாக்கையும் மீறி மக்களின் தேர்வாக மாறியிருந்தது. மக்கள் அந்தப் பாடல்களுக்கும் தமது ரசனையின் வெளியில் இடம் கொடுக்கத்தொடங்கினார்கள்.
மனோஜ் கியான், ஹம்சலேகா, தேவேந்திரன், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், என ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள் இளையராஜாவால் கட்டிப்போட்டு வைத்திருந்த இசை நிலப்பரப்பிற்குள் நுழைந்து மக்களின் இசைரசனையில் தாக்கம் செலுத்தக் கூடியதாக இருந்தது. 1976 தொடக்கம் 1986 வரை பல இசையமைப்பாளர்கள் இருந்தபோதும் இளையராஜாவே செல்வாக்குச் செலுத்தினர். அந்தக் காலகட்டத்தில் மிகச் சிறந்த பாடல்கள் இளையராஜா அல்லாத பலரிடமிருந்து வெளிவந்தன. எனினும், இளையராஜாவே மேலோங்கியிருந்தார். அதற்கான காரணம், பல.அதில் முக்கியமானது அவரின் அந்தக் காலகட்ட இசைக் கற்பனையின் ஆழமான வீச்சுத்தான். ஒவ்வொரு பாடலிலும் புதிய கற்பனையை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார். இளையராஜாவுக்குப் போட்டியாக மிகச் சிறந்த பாடல்கள் சிலவற்றை எம்.எஸ்.வி, வி.குமார், கேவி.மகாதேவன், சந்திரபோஸ் போன்றவர்கள் தந்துகொண்டிருந்தனர். சங்கர் கணேஷை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இளையராஜாவுக்கு அடுத்ததாக இதே காலகட்டத்தில் மிகச் சிறந்த தனது பல இசைக் கற்பனைகளைப் பாடலாக்கித் தந்துகொண்டிருந்தவர் இவர்.(பல தழுவல் பாடல்களையும் தந்தவர் என்றும் சொல்வர்)
எப்படியிருந்தாலும் இளையராஜாவின் வேகமும், இசைக்கற்பனைகளின் வித்தியாசங்களும் மற்றவர்கள் தன்னோடு போட்டியிட முடியாத இடைவெளியிலேயே வைத்திருந்தது. இன்னும் சில புதிய இசையமைப்பாளர்கள் மிகச்சிறந்த இசைக் கற்பனையோடு தனது இசைப் பயணத்தை ஆரம்பித்தபோதும்,மிகச் சிறந்த பாடல்களைக் கொடுத்த போதும் அடுத்த படம் கிடைக்காமல் மறைந்துபோக வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்குப் படம் கிடைக்காமல் போனதற்கு இளையராஜாவின் அதிகார வலைப்பின்னலே காரணம் எனப் பலர் கூறியிருக்கின்றனர். அவை சாத்தியமானதும் கூட. இதற்கான ஆதாரங்கள் இல்லை. எனினும், ஊகிக்கப் பல வாய்ப்புகள் உண்டு. அப்படியான பல இசையமைப்பாளர்களில் எஸ்.வி.ரமணன் (உருவங்கள் மாறலாம்) கே.ரவி(ஸ்பரிசம்), எனப் பலரைச் சுட்டிக்காட்டலாம். இதில் கே.ரவி மிக முக்கியமானவர். “ஊடல் சிறு மின்னல்” “ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து” போன்ற பாடல்களைச் சொல்ல முடியும். இவை அதிக வரவேற்பை பெற்ற போதும் தொடர்ந்து படங்கள் கிடைக்கவில்லை.
ஆனால், 1986 களுக்குப் பிறகு இந்த நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. அதற்கான காரணம் நான் மேலே குறிப்பிட்தைப் போன்று இளையராஜாவின் இசைக் கற்பனை வற்றிக்கொண்டு போனதுதான். ஒரே வகைத்தன்மைகொண்ட பாடல்களை அதிகம் உற்பத்தி செய்ததுதான். இதே நேரம் தன்னுடைய இசையில்லாமல் திரைப்படங்கள் வெற்றிபெற முடியாது என்ற “இடுவம்பு” தலைக்கேறியிருந்ததும் மிக முக்கியம். பல இயக்குநர்களோடும், தாயரிப்பாளர்களோடும், தேவையில்லாமல் முட்டிக்கொண்டார். தன்னையே தமிழ்சினிமா நம்பியிருக்க வேண்டும் என்ற வெளிப்படையானதும்,மறைமுகமானதுமான கட்டளைகளை மையமாக வைத்துச் செயல்படத் தொடங்கினார். அவரின் இசைக்கற்பனை பலவீனமாகிக்கொண்டு வரும் காலங்களில் இப்படி தான்தோன்றித்தனமான இவரது நடவடிக்கைகள், ஆற்றல்மிக்க கலைஞர்களுக்கு தெரியாமலிருக்க முடியாது. பாலச்சந்தர், மணிரத்னம் போன்றவர்கள் இவருடைய இசைக் கற்பனையின் வீழ்ச்சியையும், இவரின் தான்தோன்றித்தனமான நடத்தைகளையும் அறியாமலிருக்கவில்லை. இளையராஜாவில்லாமல் தமிழ் சினிமா இல்லை என்ற இடுவம்பை அவருக்கே புரியவைக்க வேண்டிய தேவை அந்தக் காலகட்டங்களில் இருந்தது என்பது உண்மைதான்.
அந்த தேவையை எப்படி மிகச் சரியாக இளையராஜாவுக்கு உணர்த்தினர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதை உணர்த்துவதற்கான காலம் அப்போது கனிந்திருந்தது. இளையராஜா அல்லாத பல இசையமைப்பாளர்களின் பாடல்களை முன்புபோல் இல்லாது மக்கள் காதுகொடுத்துக் கேட்கும் நிலை உருவாகியிருந்தது. அதை இளையராஜாதவிர ஆளுமைகொண்ட பல திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் உணர்ந்திருந்தனர். அதை இளையராஜாவுக்கு உணர்த்தும் வேலையை கே.பாலச்சந்தர் அவர்களே செய்தார்.
80களின் இறுதிக்காலத்தில், பல இசையமைப்பாளர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறந்த பாடல்களைக் கொடுத்துக்கொண்டிருந்தனர். இந்தப் பாடல்கள் இளையராஜாவின் ஆரம்பக்கால பாடல்களோடு ஒப்பிட்டால், இசைக் கற்பனை மிகக் குறைவானதுதான். ஆனால், இந்தக் காலத்தில் இளையராஜா கொடுத்துக்கொண்டிருந்த பாடல்களோடு ஒப்பிட்டால் அவற்றுக்கு நிகரானவை என்பதில் மாற்றமில்லை.
இந்தவகை இசைக் கற்பனை இளையராஜாவை காலியாக்கக்கூடியதல்ல என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. அதே நேரம் 15 ஆண்டுகளுக்கு மேலாக இளையராஜா அரசாட்சி செய்யும் எல்லைக்குள் பலரின் நெருக்கத்தையும், நுண்ணளவிலான அதிகாரத்தையும் ராஜா தம்வசம் வைத்திருந்தார். அதுபோல், கடந்தகாலங்களில் அவர் உற்பத்தி செய்த எத்தனையோ பாடல்களின் கற்பனைகளில் மக்களும் மிதந்துகொண்டிருந்தனர். அதனால், இன்றைய இளையராஜாவின் (80களின் கடைசிப் பகுதி) இசைக்கு நிகராக வேறு எவர் பாடல்களை உற்பத்தி செய்தபோதும் அவை மக்களால் ரசிக்கப்பட்டாலும் இளையராஜாவுக்குக் கொடுத்த இடத்தை திரும்பப்பெறவில்லை. அது சாத்தியமற்றதாகவும் இருந்தது. ஆனால், இளையராஜாவின் பாடல்கள் போல மற்றவர்களின் பாடல்களும் மக்களின் மனங்களில் இடம்பிடிக்கத் தொடங்கின. இளைராஜாவுக்காக மட்டுமே திறந்து வைத்திருந்த மனதின் கதவுகளை மற்றவர்களுக்காகவும் திறக்கத் தொடங்கியிருந்தனர் என்பதுதான் உண்மை.
இந்த நேரத்தில்தான் இளையராஜாவின் இசைக் கற்பனையின் இழைகளை எடுத்து வேறுவகையில் மெருகேற்றி சற்று வேறுபடும் இசைக்கற்பனைகளோடு தேவாவின் உள்நுழைவு நடக்கிறது. ஆனால், தேவா இன்னுமொரு அம்சத்தையும் இளையராஜாவிடமிருந்து எடுத்துக்கொண்டார். அது 1982களில் தொடங்கி இளையராஜா உருவாக்கிய போர்ன் இசைக் கற்பனை. (வழிசல் இசை). காமத்தைப் பாடல்களில் கற்பனை செய்யக் கூடாது என்பதல்ல எனது கருத்து. அதை ஆபாசமானதாகக் கொண்டுவரக்கூடாது. காமத்தைக் கலையாக உருவாக்க வேண்டும். இங்கு ராஜா காமத்தை போர்னோ ஆபாசமாக மாற்றிக்கொண்டிருந்தார்.( நிலாக்காயுது நேரம் நல்ல நேரம் பாடலின்இரண்டாம் இடையிசை) கலையாக மாற்றிய பாடல்களும் உண்டு. பாடகர்களை படுக்கையறை முக்கல் முனகல்களில் ஈடுபடுத்தும் வேலையையும் செய்தார். (அண்மையில் ஆபாசப்பாடல்கள் என ஒரு இசையமைப்பாளருக்கு எதிர்ப்பும் தெரிவித்தார்.இது என்னவகை முரண்?)
இந்த போர்னோ இசையையும் தேவா கையெடுத்தார். அதைப்போல கானாப்பாடல்களை கணிசமான அளவு உருவாக்கினார். கானாப்பாடல் இளையராஜாவிடமிருந்து எடுக்கவில்லை. ஆக, இளையராஜாவின் இசைக்கற்பனையிலிருந்து எடுத்த இழைகளை விதம் விதமாக மெருகேற்றி அவற்றுக்கு புதிய முகங்களை உருவாக்கினார். இளையராஜா தனது இசைக் கற்பனையிலிருந்து செய்ய மறந்த அம்சங்கள் இவை. அதனால்தான் சொல்கிறேன். தனது இசையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் புரிதல் இல்லாமல் இளையராஜா இருந்தார். அதைப் புரிந்துகொண்டவர்கள் ராஜா தனது இசைக்குச் செய்திருக்க வேண்டிய வேலைகளைத் தேவாவும் இன்னும் பலரும் செய்து கவனத்தைப்பெற்று ராஜாவோடு இணைந்து பயணிக்க முடிந்தது.
புதுப்புது அர்த்தங்கள் படத்தின்போது ராஜாவின் தான்தோன்றித்தனமான மனநிலைக்கும் கே.பாலச்சந்தருக்கும் ஏற்பட்ட முறிவு, தளபதி படத்தின்போது மணிரத்தினத்திற்கும் ராஜாவின் “தான்தோன்றி மனநிலைக்கும்“ ஏற்பட்ட பிளவு என இளையராஜா களத்தில் பின்தங்கியிருந்தார். கே.பாலச்சந்திரன் புதிய படங்கள் மூன்று அறிவிக்கப்பட்டன. அந்த மூன்று படங்களிலும் இளையராஜா இல்லை. வழமைபோல இளையராஜா இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்ற இவ்வம்போடுதான் இருந்தார். அந்த மூன்று இசையமைப்பாளர்களும், அண்ணாமலை (தேவா), அழகன்(மரகதமணி) ரோஜா(ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து இளையராஜா என்ற பெயரே திடீரென கீழே விழுந்துவிட்டது. மரகதமணி அதிக தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைக்காத போதும் முக்கியமான இசையமைப்பாளராக வந்துவிட்டார். 2023ம் ஆண்டின் ஆஸ்கார் விருதைக் கூடப் பெற்றுவிட்டார். அதுபோல் ரஹ்மானும் ஆஸ்கார்விருதைப் பெற்றுக்கொண்டவர்.
தமிழர்களுக்கு இளையராஜாவின் இசைதான். அதைத்தவிர வேறு எதுவுமில்லை என்ற வீறாப்போடு இருந்த இளையராஜா அடையாளமே அற்ற ஒருவராக ஆக்கப்பட்டுவிட்டார். அவருடைய வாழ்நாளில் அதிகப் படங்களுக்கு இசையமைத்த ஆண்டு 1992. அதே ஆண்டுதான் அவருடைய திரைப்பட இசை வாழ்க்கையின் சாவு மணியும் ஒலித்தது. அதுவும் கம்பியூட்டர் மணி.
இசையிலும் மாற்றங்கள் ஏற்படும். ஏனெனில், சப்தங்களை வைத்துத்தான் இசைக் கற்பனையே சாத்தியம் என்பதும், தொழில் நுட்பங்களின் காலத்திலும் மாற்றத்திலும் இசை நெருங்கிய உறவை,அல்லது பிரிக்கமுடியாத உறவைக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடியாத ஒரு எல்லையில் தனது மனதிற்குள்ளாக வாழ்ந்துகொண்டிருந்தார் என்பதுதான் இதன் அடிப்படை. தான்தான் இசை.தன்னைத்தாண்டி இசையில்லை என்ற மாயக் கனவில் திளைத்திருந்த இளையராஜாவை ஒரு கம்பியூட்டர் வந்து தெளியவைத்தது. அந்த அதிர்ச்சியும், வெப்புசாரமும், தீராக் கோபமும் இன்னும் இளையராஜாவைவிட்டுப் போகவில்லை. அந்த வெஞ்சத்தை வைத்துக்கொண்டுதான் அவர் இன்றும் பல பொது நிகழ்வுகளில் கூட நடந்துகொள்கிறார். ஆனால், இதற்கு முன்பிருந்த இசையமைப்பாளர்கள் இப்படி நடந்துகொள்ளவில்லை.
தமிழின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான ஜி.ராமநாதன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, கேவி. மகாதேவன், சுப்பையா நாயுடு போன்ற இசை மேதைகள் தங்களின் பங்களிப்புக்களை மறக்காமலும், இசையின் புதிய மாற்றங்களை உள்வாங்கியும் நடந்துகொண்டனர். அவர்கள் மேதைகள். இளையராஜா அப்படி நடந்துகொள்ளத் தவறிவிட்டார். இசையில் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்பதை மறுப்பதினூடாக தனது இசையையே எல்லாக் காலத்திற்குமான இசையாக நினைத்துப் பேதலித்துப்போய்விட்டார். இப்படி மறுப்பவர் எப்படி மேதையாக இருக்க முடியும்?
இளையராஜாவின் தற்கொலைப்படை உறுப்பினர்களாக இருக்கும் பலர் கலை இலக்கியவாதிகளாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மாற்றங்கள் எதுவும் நடக்காது என நம்பும் எவரும் கலைஞர்களாகவும், இலக்கியவாதிகளாகவும் இருக்க முடியாது. சமகாலத்தைத் தனது வாழ்வு மற்றும் புரிதல் முறைக்குள் கொண்டுவராத எவரும் நுாதனசாலைகளில் வைத்துவிடக்கூடிய கலைகளையே உருவாக்குகின்றனர். சமகாலம் என்பது இன்று உலகு தழுவியதாக ஆக்கப்பட்டிருக்கிறது. அனைத்துக்கலைகளும் கூட அப்படிப்பட்டதுதான். உலகில் எந்தப் பகுதியும் அங்கு நடந்தேறுபவையும் மனிதர்களுக்கான அம்சங்கள்தான். இதில் உலகளாவிய தன்மை இருப்பதுபோல,தனித்தன்மைகளும் இருக்கின்றன. இந்த இரண்டிலும் எதுவொன்றைத் தேர்வு செய்தாலும் சிக்கலானதுதான். தனித்தன்மைக்குத் தேவையான இடமும்,உலகு தழுவிய தன்மைக்குத் தேவையான இடமும் வாழ்வில் நாம் நம்மை அறியாமலே வழங்கியிருப்பதைப்போல, கலை இலக்கியங்களுக்கும் வழங்கும் புரிதல்தான் இன்று அவசியமான ஒன்று. இன்று சமகாலம் என்பது இதுதான்.
இளையராஜா அண்மைக்காலங்களாக வெளிப்படுத்தும் அம்சங்களும், பொதுவெளியில் நடந்துகொள்ளும் முறைகளும் “எனது இசையைவிட்டு ஏன்போனீர்கள்” என்ற கோபத்தை மக்கள்மீது எறிவதாகத்தான் எண்ண இடமுண்டு. அத்தனை அசிங்கமாக அவையுள்ளன. தனது இசை பற்றிய அவரது மிகைாயான பிடிவாதங்களும், அவரது இன்றைய இசையும் மிகத்தொந்தரவானது. அதே நேரம், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்காளாக நபர்களை உருவாக்கும் மனநிலை மிக மோசமான விளைவுகளை உருவாக்க வல்லது. கலைஞர்களை மதிப்பது வேறு. அதற்காக விமர்சிக்கக் கூடாது என எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவரான மனவியாதிதான்.