உரையாடலுக்கான முன் வரைபு
அண்மைக்காலமாக முகநுால் பக்கங்களில் கவிதை குறித்து ஸ்டேடஸ் துணுக்குளால் புரட்சி செய்யும் சிலரை எனது தோழர்கள் அடையாளம் காட்டினர். அவற்றை வாசித்தபோது மனம் மிகச் சோர்வாக மாறிப்போனது. கவிதை குறித்த உரையாடல் என்பது, எனது சக தோழர்களான மிஹாத்,மஜீத் போன்றவர்களுடன் உரையாடும் போதிருந்த உத்வேகமும் புரிதல்களுமற்ற புதிய தலைமுறையைச் சந்திப்பதுபோன்று உணர முடிந்தது.
எங்கள் ஊரில், எங்கள் தலைமுறையைச் சேர்ந்த சிலரிடம் என, அன்று நிலவிய வானம்பாடி முகாம்களின் கவிதைச் செயல்களோடு குறைவான தொடர்புகளே இருந்தன. ஈழத்து வாழ்வு போரை மாத்திரமே மையப்படுத்தியதாக அமைந்திருந்த ஈழத்து அரசியல் மற்றும் இலக்கியம் சார்ந்த நிறுவனங்களும், அப்போது முக்கியமாக கருதப்பட்ட இலக்கியச் செயற்பாட்டாளர்களும் உருவாக்கியிருந்த பெருங்கதையாடலினுள் நவீன கவிதைகளும் மூழ்கிக்கிடந்த உச்சமான காடகட்டம் அது. அரசியல் கருத்தோ, இலக்கியச் செயற்பாடோ குறித்த ஒரு வகைமைக்குள் அடைபட்டுக்கிடப்பதை, இறுகி நிறுவனமாக மாறி தனிப்பெரும் உண்மையாக புனையப்பட்டிருந்த காலத்தில், அதிலிருந்து உடைத்துக்கொண்டு வெளியே செல்ல வேண்டிய தேவைகளை உணர்ந்து செயல்படத் தொடங்கிய காலத்தின் நீட்சியில் சில தோழர்களும் இணைந்துகொண்டனர்.
எனவே, ஈழத்து நவீன கவிதை, அரசியல் கருத்து நிலைப்பாடுகளின்மீது அதிக அக்கறைகொண்டிருந்தது. அவற்றின் மீது அதிருப்தியுடன் சிந்தித்துக்கொண்டிருந்த, செயல்பட்டுக்கொண்டிருந்த காரணத்தால், தோழர்கள் அனைவரிடமும் ஏற்பட்ட புதிய சிந்தனையை நோக்கிய தேடலும், உரையாடலும் மிகுந்திருந்தன. பின்நவீனத்துவம் சார்ந்த புரிதல் பல வழிகளிலும் எங்களால் அக்கறைகொள்ளப்படும் ஒன்றாக அமைந்திருந்தது. பின்நவீனத்துவத்தின் அரசியல் மற்றும் கருத்தியல் சார்ந்த கூறுகளை இலக்கியப் பிரதிகளில் பாவிக்க, எங்களுக்குத் தெரிந்த எங்களால் உருவாக்கப்பட்ட பல வழிமுறைகளை செயல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
ஆயினும், இதற்கு அத்தியவசியமானதாக கருதிய ஒரு விசயத்தை உணர்ந்துகொண்டோம். தமிழ்க் கவிதையின் வரலாறு, நவீன கவிதையின் வரலாறு, நவீன கவிதையின் இயங்கு முறை, அதன் உள்ளலகுகள், என தமிழில் கவிதையாகப் பயன்படுத்தப்பட்ட பிரதிகளையும், கவிதை குறித்து வெளிப்படுத்தப்பட்ட கருத்து நிலைகளையும் ஆழமாக அறிய வேண்டிய தேவை ஏற்பட்டது. அவற்றிடையே இணக்கமாக இருந்த ஒற்றுமைகள் வேற்றுமைகள் என அனைத்தையும் ஆழமாக புரிந்துகொள்ளும் தேவையை உணர்ந்து செயல்படத் தொடங்கினோம். அந்தத் தேடல் எங்களுக்குள் உருவாக்கிய புரிதல்கள் விரிவானவை. அவற்றை மேலோட்டமாக முன்வைப்பதினுாடாக, நவீனம் கடந்த கவிதையை நோக்கி எப்படி நகரமுடிந்தது என்பதை அறியலாம்.
தமிழில் பாரதியோடு நவீன கவிதை தொடங்கினாலும், மணிக்கொடி காலத்தில் ஓரளவு முயற்சிக்கப்பட்டிருந்தது. அதன் பின் சில காலம் தாமதித்து 1959 களில் எழுத்து இதழின் வழியேதான் பெரும் உரையாடல்களை உருவாக்கியது. கவனத்தை பெறத்துவங்கியது. அதன் பின்னர் 1971ம் ஆண்டு வெளிவந்த வானம்பாடிகளின் இயக்கத்தால் மக்கள் மயப்படுத்தப்பட்டது.
ஈழத்தைப் பொறுத்தமட்டில், நவீன கவிதை குறித்த பிரக்ஞை 70களின் இறுதிப்பகுதியில்தான் அதிக கவனத்தைப் பெற்றது. 1942ம் ஆண்டு ஈழகேசரியில், ந.பிச்சமூர்த்தி வழியில் உருவான நவீன கவிதை “வரதரால்” எழுதப்பட்ட போதும், மரபான செய்யுள் வடிவத்திற்குள் நவீன சிந்தனையினை புகுத்தி கவிதையை பின்தொடர முடியும் என்றே ஈழத்தில் நம்பிக்கொண்டிருந்தனர். பாரதியிடம் உருக்கொண்ட தேசிய உணர்வு மற்றும் தமிழ் தேசிய உணர்வு என்ற இரண்டு அம்சங்களில் தமிழ்த் தேசிய உணர்வை கவிதைச் செயலாக வரித்துக்கொண்ட பாரதிதாசனையே ஈழத்தில் அதிகமாக பின்பற்றத் தொடங்கியிருந்தனர். பின்நாட்களில் அதுவே, ஈழத்தின் அரசியல் நிலவரமாக மாறிப்போன மொழியை மையப்படுத்திய “தேசியவாதத்திற்கு” உறுதுணையாகவும் அமைந்துபோனது.
நவீன கவிதையின் வடிவம் சார்ந்த பிரக்ஞையின்றி, அந்த வடிவத்தை கைவிடுவதற்கான தேவையின் பின்னால் இருந்த நவீன சிந்தனையின் சுதந்திரத்தை அவாவும் நிலைப்பாட்டை புரிந்துகொள்ளாமல் அடைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட வடிவத்திற்குள் நவீன சிந்தனையை சுதந்திரமாக நடமாட வைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் திளைத்திருந்த ஈழத்து இலக்கியச் செயற்பாட்டாளர்கள் நவீன கவிதையின் வடிவம் பற்றி அக்கறைகொள்ளாமலே கடந்து சென்றனர். நவீன கவிதை தமிழில் நுழைந்தபோது அதிகமான எதிர்ப்புகளை வெளிப்படுத்தியவர்கள் தங்களை மார்க்சியவாதிகளாக அழைத்துக்கொண்டவர்கள்தான். அதற்கு அடுத்தபடியாகத்தான் பண்டிதர்கள் (பாரம்பரிய தமிழ்க் கவிதைக்கு ஏதோ சிக்கல் ஏற்பட்டுவிட்தாக கருதிக்கொண்ட) எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர். கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில், அது பிரச்சாரமாக மாற வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. வடிவமும், கருத்துக்களும் ஒன்றிணைந்த வகையில் ஏற்படும் மாற்றத்தைத்தான் நவீன கவிதையின் அடித்தளம் என்பதை அப்போது புரிந்துகொள்ள ஈழத்து இலக்கியச் செயற்பாட்டாளர்களால் முடியாது போயிருந்தது. அதே நேரம் ஈழத்தில் அன்றிருந்த அதிகமான இலக்கியச் செயற்பாட்டாளர்கள் மார்க்சியச் சார்புடையவர்களாகவும் இருந்தனர். ஆகையால், நவீன கவிதையை அதன் முழுப்பரிமாணத்தில் புரிந்துகொள்ள அவர்களின் சிந்தனை இடந்தரவில்லை.
செய்யுள்களுக்குள் நவீன சிந்தனையை அடைத்து, அந்த “டப்பாவை” நவீன கவிதையாக வளர்த்துச் செல்ல எடுத்த முயற்சிகள் சில பத்தாண்டுகளிலேயே கலகலத்துப் போய்விட்டது என்பது வேறு விசயம். ஆயினும் என்ன, தமிழ்த் தேசியவாதம் மேலெழுந்த எண்பதுகளில் கூட, செய்யுள் என்ற அடைக்கப்பட்ட விதிமுறைகளுடன் கூடிய டப்பாவை துாக்கி எறிந்துவிட்டு, வடிவத்தை மாற்றிக்கொண்டாலும் கருத்துக்களை (உள்ளடக்கத்தில் பிரச்சாரத்தை நுழைத்தல்) அதிகளவாக திணிக்கும் பணியைக் கைவிடவில்லை. பிரமிள், சோலைக்கிளி போன்ற சில கவிஞர்கள் இதற்கு விதிவிலக்கு. மொழிசார்ந்த தேசியவாத உணர்வெழுச்சியின் பிரச்சார வேலைகளை முன்னெடுப்பதே ஈழத்து நவீன கவிதைகளாக முன்னிறுத்தப்பட்டன. இது நீண்ட காலம் தொடர்ந்தது. மொழிசார்ந்த தேசியவாதத்தை முன்னெடுத்த போது, அதற்குள்ளேயே அமுங்கிப்போயிருந்த, வர்க்கரீதியான, இனத்துவ ரீதியான, சமூகரீதிலான மக்கள் கூட்டங்களும், பால் சார்ந்த (பெண்) வேறுபாடுகளும் மொழிசார்ந்த தேசியவாத அலையில் அடக்குமுறைக்குள்ளாவதும், புறமொதுக்கப்படுவதும் கவனிப்பாரற்று புதைந்துகொண்டிருந்தன. அப்படிப் புதைந்துகொண்டிருந்த சமூகங்களும், மக்கள் கூட்டங்களும் சுதாகரித்துக்கொண்டு தங்கள் பொதுத்தன்மைகளை ஒரு எதிர்க்குரலாக வெளியே கொண்டுவந்தன. மொழிவழித் தேசியம் என்ற இலட்சியத்தை அம்மொழிப்பரப்பிற்குள்ளே இருந்து சிதைக்கும் வேலைகளாக, துரோகங்களாக இவை பார்க்கப்பட்டன. மொழிவழித் தேசியத்தை அதன் இலட்சியத்தை அடைவதற்கு, பிற சமூகங்கள், மக்கள் கூட்டங்கள் மீதும் நிகழ்த்தப்படும் அதிகாரங்களையும், வன்முறைகளையும் சகித்துக்கொள்ள வேண்டும் என்ற பாசிச கோசங்கள் மேலெழுந்தன. அந்தப் பாசிச கோசங்கள் நியாயப்படுத்தப்பட்டன.
மொழிவழித் தேசியவாதம் பாசிசமாக மாறி நிற்பதைப் புரிந்துகொள்வதற்கு ஏற்ற கருத்தியல் தளம் ஈழத்தில் அறிமுகமாகவில்லை. அவை குறித்த வாசிப்புக்களும், உரையாடல்களும் கவனத்திற் கொள்ளப்படவில்லை. மொழிவழித் தேசியவாதம் பாசிசமாக உருப்பெற்ற நிலையில்தான், அதற்கெதிரான எதிர்க்குரல்கள் மெல்ல மெல்ல மேலெழுந்தன. அந்தக் குரல்களும் “தேசியம்” என்ற தோற்றுப்போன
அல்லது பாசிசத்தன்மைகொண்ட கருத்துநிலைகளையே மாற்றீடாக கருதிச் செயல்படத் தொடங்கின. இதற்குச் சிறந்த உதாரணமாக ஈழத்தில் தமிழை தாய்மொழியாகக் கொண்ட,மதரீதியாக வேறுபட்ட முஸ்லிம்களின் அரசியல் செயற்பாட்டை புரிந்துகொள்ள முடியும். அதே நேரம் மலையகத் தமிழர்களும் தங்களை தனித்த தேசிய உணர்வுகளோடு இணைந்த சமூகமாக உணர்ந்துகொள்ளத் தலைப்பட்டனர். இதைப் புரிந்துகொள்ளத்தான் பின்நவீனத்துவம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இது அரசியல்ரீதியாக ஈழத்து தமிழ் மொழிப்பரப்பில் நடந்த பாசிச உருவாக்கத்தை புரிந்துகொள்வதற்கும், அதை தற்காலிகமான வழிகளில் தீர்க்கவுமான உள்ளடக்கத்தை பின்நவீனத்துவம் கொண்டிருக்கிறது. அதிகாரத்திற்கு எதிராக, அரசியல் இலட்சியங்களால் வடிவமைக்கப்பட்டு நம்பப்பட்ட கருத்தியல்களுக்கு எதிராக செயல்படும் ஒரு வழியைத் திறந்துவிடக்கூடியது.
ஆயினும், பாரதிதாசன் வழியில் ஈழத்திற்குள் நுழைந்த தனித்தமிழ் அல்லது மொழிவழியில் உருப்பெற்ற பற்று, தமிழ்த் தேசியவாத அரசியல் இலட்சியத்தின் கலப்பும், மார்க்சிய யதார்த்தவாதத்தில் முங்கி தோய்ந்துபோயிருந்த ஈழத்தின் இலக்கியப் பொதுமனமும் இணைந்த புள்ளியிலிருந்து, இலக்கியம் புரிந்துகொள்ளப்படும் பொதுவான நிலைப்பாடு மேலெழுந்திருந்தது. அந்தவகையில் ஈழத்து கவிதை பிரச்சாரத்தன்மை மேலோங்கிய ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. கவிதையில் அகமியின்( அகத்தின்) பாற்பட்ட கவனம் குறைவடைந்திருந்தது. இந்த நிலைப்பாடு தமிழ்நாட்டுக் கவிதைகளில் இருந்து வேறுபட்ட ஒரு தோற்றத்தை உருவாக்கியது. தமிழ்த் தேசியவாத அரசியல் இலட்சியம் என்பது தீவிரத்தன்மையை நோக்கி ஈழத்தில் வேரூன்ற வேண்டிய சமூகத் தேவையை அனேகமாக அனைவரும் விரும்பி ஏற்றுக்கொண்டமையால், குறித்த அரசியல் இலட்சியத்திற்கு துணையான கருவியாக இலக்கியங்கள் மாறிப்போயின. அதிலும், அளவில் சிறிதாகவும், அதிகம்பேரால் எழுதக்கூடியதுமாக கவிதை இருந்தமையால் முற்றாக கவிதை அரசியல் இலட்சியத்தின் சேவகராக மாற்றம் பெற்று உற்பத்தி செய்யப்பட்டு பெருகின.
கவிதையை தனித்த ஒரு இலக்கியம்சார் வகையினமாக கருதும் மனநிலை கீழ் நிலைக்குச் சென்று, அரசியல் இலட்சியத்தை துாண்டக்கூடிய துணைக் கருவியாக மாறிப்போனது. அப்படி மாறிப்போனதன் காரணமாக, புற மற்றும் அக அனுபவங்களை கவிதை என்ற தனித்தன்மை கொண்ட ஒரு வடிவத்தில், அதற்கே உரிய தனித்தன்மைகளை அக்கறை கொள்ளும் தேவையும், உழைப்பும் பொருட்படுத்தப்படாமல், அரசியல் இலட்சியத்தை வெளிப்படுத்தும் இழைகள் கவிதை என முன்வைக்கும் பிரதிகளில் ஒப்பீட்டளவில் கலந்திருக்குமானால் போதுமானது என்ற ஒரு நிலைவரை சென்றுவிட்டது.
தமிழ்நாட்டில், உருவான நவீன கவிதைகள் ஆரம்பத்தில் அகமியை (அகத்தை) அதிக அக்கறைகொண்டிருந்தன. வானம்பாடிகளின் காலத்தில் புறத்தை (யதாரத்த்தம் என நம்பப்பட்டவைகளை) நோக்கி திசைமாறியிருந்தன. எனினும், அந்தக் கவிதைகள் அலங்காரமான சொற்களை அதிகம் பயன்படுத்தின என்ற குற்றச்சாட்டுகள் அப்போது முன்வைக்கப்பட்டன. 70 களில், நவீன கவிதையின் இரு கிளைகளுக்கிடையில் பெரும் விவாதங்கள் நடந்தேறின. உன்னதமான நவீன கவிதை முகாமாக கருதப்பட்ட “கசடதபற” மற்றும் வானம்பாடிகள் முகாம்களுக்கிடையில்தான் இந்த விவாதங்கள் நடைபெற்றன. வானம்பாடிகள் போல ஈழத்து கவிதைகளும் புறத்தை (யாதார்த்தம் என் நம்பப்பட்ட) அதிக அக்கறை கொண்ட போதும், அலங்காரமான சொற்களை ஈழத்து கவிதைகள் கொண்டிருக்கவில்லை. அதே நேரம் தமிழ் நாட்டின் உன்னத கவிதை முகாமைப்போல, கவித்துவ வசனங்கள் (?) போன்றவற்றையும் கவனத்திற்கொள்ளவில்லை. அதற்கு மாறாக உரைநடையை அக்கறைகொண்டது. பேச்சோசையின் இழைகளை அதிகம் கலந்து வெளிப்பட்டது. அதாவது, செய்யுள் வடிவத்திலிருந்த ஓசை அமைப்பின் இறுக்கமற்ற நெகிழ்ந்த தன்மையை கையெடுத்திருந்தது. அதன் வழியாக மரபான தமிழ்க் கவிதையின் பழமை ஏக்கத்தை தொடர்ச்சியாக பேண முயன்றது.
சங்கக் கவிதைகள் அன்றைய வாழ்விலிருந்து துாரமாகியிருக்கவில்லை என்றொரு கருத்தை அனேகமான விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். ஆயினும், அன்று கவிதை புனிதப்படுத்தப்பட்ட ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கவில்லை. (ஆனால், அதை எழுதிய கவிஞர்கள் கடவுளின் நேரடி கட்டளைகளின் பணிப்பிலேயே எழுதினர் என்று சொல்லப்பட்டது) கவிஞர்கள் புனிதப்படுத்தப்பட்டிருந்தனர்.
கவிதை என்பது ஒரு உன்னதமான அம்சமாக மாற்றப்பட்ட காலமாக “எழுத்து“ இதழ்க்காலம் இருந்தது. மணிக்கொடி காலத்திலேயே இந்த கவிதையை உன்னதமாக ஆக்கும் மனநிலையின் தொடக்கம் உருப்பெற்றது. கவிதையும் மனித உற்பத்திகளில் ஒன்று என புரிந்துகொள்வதற்கு மாற்றமாக, அதைப் “படைப்பாக” கருதப்பட்டது. ஏற்கனவே, “படைப்பு” என்ற செயலை கடவுளின் தன்மை கொண்டதாக கருதிவந்திருந்தனர் என்பதை இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். ந.பிச்சமூர்த்தி கவிதையை ஒரு ஆன்மீகச் செயற்பாடாக கருதினார். உள்ளொளி, தரிசனம், என வகைப்படுத்தி புற(யதார்த்த) உலகுசார் செயற்பாட்டுக்கு அப்பால் அகத்தில் நிகழும் பவித்திரமான மாற்றமாக கருதினார். க.நா.சு, வெங்கட்சாமிநாதன் போன்றவர்கள் இதை தொடர்ந்தனர். அல்லது அதன் கருத்தியல் பிரதிநிதிகளாக நின்று கவிதையை தீர்மானிக்கத் துணிந்தனர் எனலாம்.
ந.பிச்சமூர்த்தி கவிதையை ஆன்மீகச் செயற்பாடாக உணர்ந்தபோதும், எழுத்து சிற்றிதழ் கவிஞர்கள், மனதின் பிராந்தியத்தில் நடந்தேறும் சிக்கல்கள், கருத்துக்கள் அவற்றை மொழிமூலம் வெளியே கொண்டுவரும் செயற்பாடாக கருதினர். இதில் பிரமிள் சற்று வேறுபட்டு, யதாரத்தத்திற்கு அப்பாற்பட்ட மானிடப் புரிதலாக முன்வைத்தார். அனைவரும், புறத்தை (புறச் சூழலை) கவிதையை வெளிப்படுத்தும் இடமாக கருதினர். அதுபோல், அனைத்தும் அகத்தில் நிகழுகின்ற ஒன்றாக புரிந்துகொண்ட போதும், அகத்தில் நிகழும் ஆன்மீக புரிதலாகவும், அகத்தில் நிகழும் அதிசயமான மானிடப் புரிதலாகவும், அகத்தில் நடந்தேறுகின்ற பிரச்சினைகள், உணர்வுகளின் கூட்டமைப்பாகவும்தான் வேறுபடுத்தி புரிந்துகொண்டனர். ஒட்டுமொத்தமாக சமூக வெளியிலிருந்து பிரிக்கப்பட்ட மனப்பிராந்தியத்தைத்தான் கவிதை என்ற உன்னதமான ஒரு உற்பத்தி நிகழ்வு நடந்தேறும் தொழிற்சாலையாக கருதினர். சமூகச் சூழல் என்பது மனதின் பிராந்தியங்களில் மாயமாக நிகழும் கவித்துவ அனுபவங்களை வெளியேற்றி பிறருக்கு கொடுக்கும் ஒன்றாகவே கருதினர். சமூகச் சூழல் என்பது, அகத்தின் தேவைகளை, அதிசயங்களை பார்வைக்கு வைக்கும் ஒரு இடமாக கருதினர் என்று கூருக்கமாக சொல்லிவிடலாம்.
இதன் காரணமாகவே, செறிவூட்டப்பட்ட சொற்கள், தேர்ந்தெடுத்த வாக்கியங்கள், செதுக்கப்பட்ட மொழி, இவற்றினுாடாகத்தான் மனதின் அதிசயங்களை வெளிப்படுத்த முடியும் என நம்பினர். இதனால், தமிழ் மொழியிலுள்ள அனைத்து சொற்களும் கவிதையை வெளிப்படுத்த தகுதியற்றது என்ற மறைமுகமான ஒரு நிலைப்பாட்டை முன்வைத்தனர். எனவே, கவிதையை வெளிப்படுத்த அல்லது, கவிதையை சுமந்துகொண்டு இருக்கக்கூடிய மொழி என்ற பிரத்தியேகமான ஒரு மொழிபற்றிய கதைகள் உருவாகின. அதைத்தான் கவிதை மொழி என்றே வரையறுத்தனர். இதில் கவிஞர்களிடையே உடன்பாடுகளும், முரண்பாடுகளும் இருந்தாலும் “கவிதை மொழி” என்ற ஒன்றை அனைவரும் நம்பினர். ஏற்றுக்கொண்டனர்.
இதன்காரணமாகத்தான், சமூக செயலை அதாவது புறத்தை அதிகம் அக்கறைகொண்ட வானம்பாடிக் கவிஞர்களின் கவிதைகளை புறக்கணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அக மனதின் மாயவித்தைகளை, உன்னதமான கவிதை என்ற ஒன்றை நம்பியிருந்த கவிஞர்களுக்கும், இலக்கியச் செயற்பாட்டாளர்களுக்கும் வானம்பாடிகளின் கவிதைகள் நெருக்கமானதாக அமைந்திருக்கவில்லை. அகமனதின் பிரத்தியேக அம்சங்களால் வானம்பாடிகளின் கவிதை உருவாகவில்லை. அதே நேரம், கவிதைமொழி என நம்பியிருந்த ஒன்றை முற்றாக வானம்பாடிகள் கைவிட்டிருந்தனர். ஆனால், ஈழத்து கவிதைகளும் புறத்தை (சமூக
யதார்த்தம் என நம்பப்படுவதை) அக்கறைகொண்டிருந்தபோதும், உரைநடையும், பேச்சோசையும் கலந்த கவிதைகளிலிருந்து வானம்பாடிகள் வேறுபட்டிருந்தனர். எடுத்துரைப்பு முறையில், அலங்காரமான சொற்களும், பழைய மரபுக்கவிதையின் யாப்பில் இருந்த “ஓசை” ஒத்திசைவையும் வானம்பாடிகள் கொண்டிருந்தனர்.
அகமனதின் பிராந்தியத்தில் நடந்தேறும் உணர்வுகளின் புதிர்களை, செறிவூட்டப்பட்ட தேர்ந்த சொற்களையும், செதுக்கப்பட்ட வாக்கியங்களையும், மென்மையான குரலில் ரகசியமாக மனதோடு உரையாடும்படி படைப்பாக்கித் தருவதே நவீன கவிதை என நம்பி, அதையே வலியுறுத்தி,அப்படி அல்லாதவைகள் கவிதைகளே அல்ல என்று ஒரு பொது மனநிலையை உருவாக்கி அதையே “அழகியலாக” தமிழ் நவீன கவிதை என்ற பெயரில் முன்னிறுத்தியவர்களுக்கு, வானம்பாடிகளின் கவிதைகளும், ஈழத்து நவீன கவிதைகளும் கவிதைகளாக இருந்துவிடவில்லை. இந்த உன்னதமான கவிதை பற்றி தமிழ் மனப் பிரக்ஞை என்பது சிற்றிதழ் வழியாக வளர்த்தெடுக்கப்பட்ட ஒன்றுதான். ந.பிச்சமூர்த்தி தொடங்கி, பிரமிள், சுரா, பிரம்மராஜன்,யுவன் சந்திரசேகர், ஜெயமோகன் வரை ஏன் இன்றைய இளம் தலைமுறையினர் பலரிடமும் இந்த உன்னதமான மனநிலை பழைய அளவில் இறுக்கமாக இல்லாத போதும் இன்றும் தகித்துக்கொண்டே இருக்கின்றன.
பேச்சுமொழி, உரைநடை, கருத்துக்களை நேரடியாகப் பரிமாறிக்கொள்ளுதல் போன்றவற்றை உன்னத கவிதை முகாமைச் சேரந்தவர்கள் புறமொதுக்கினாலும், அகமனப் பிராந்தியத்தில் உழல்பவர்கள் என வானம்பாடிகள் நவீன கவிதையின் மற்றக் கிளையினரை புறமொதுக்கியபோதும், இரண்டு முகாம்களிலும் அவர்கள் புறமொதுக்கிய பண்புகள் இருக்கவே செய்தன. கவிதையை தீர்க்கமாக வரையறுத்து முன்வைத்தபோதும், அந்த வரையறைகளை மீறி இரு முகாம்களின் கவிதைகளினுள்ளும் இந்தப் புண்புகள் வெளிப்பட்டு நின்றன. அதற்கான காரணம், கவிதை என்பது மொழியாலான ஒரு நிகழ்வு என்பதே. ஆனாலும், உன்னத கவிதை முகாமை அகமனதின் பாற்றபட்டதாகவும், வானம்பாடிகள் முகாமை புறமயப்பட்டதாகவும் வரையறுத்து புரிந்துகொள்ளவே தமிழ் ஆய்வாளர்கள் முயற்சித்தனர்.
பின்நவீனத்துவம் தமிழைச் சந்தித்த போது, அகம் புறம், என்ற எதிரிணைகள் பற்றிய உடன்பாடுகளும்,முரண்பாடுகளும் நவீன இலக்கியவாதிகளின் கரிசனையிலிருந்து சற்றுத் துாரமாகின. எந்த வரையறைகளுக்குள்ளும் சிக்காமல் மிச்சங்களாக ஆக்கப்பட்ட சமூகங்களும், பொதுத் தன்மையினடியாக வரையறுக்கப்படும்போது,அதற்குள் சிக்கலாக அமைந்த சமூக பிரக்ஞைகளும், கருத்தியல்ரீதியலான முரண்பாடுகளும் மேலுக்கு வந்தன. நவீன கவிதையின் அழகியல் என சொல்லப்பட்ட ஒரு அம்சம், பலவகையான அழகில் உண்டு, குறித்த ஒரு அழகியலே அனைவருக்குமான அழகியல் அல்ல. என்று தலித் அழகியல், பெண்களின் அழகியல், சிறு சமூகங்களின் அழகியல், தனித்தனி நபர்களின் அழகியல் என பன்மைத் தன்மை நிரம்பியதாக மாற்றமடைந்தது. புறத்தில் (சமூக வெளியில்) பொதுத் தன்மையோடு புரிந்து வரையறுக்கப்பட்ட அனைத்தினுள்ளும் வன்முறைகளும், புறமொதுக்குதல்களும் உண்டு என்பதை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தது. ஆண்களின் சிந்தனையால் வரையறுக்கப்பட்ட பெண்கள் என்பதற்கு அப்பால், அப்படி வரையறுக்கப்பட்ட பெண்கள் என்பது சமூகத் தன்னிலைகள்தானே ஒழிய, சார்புநிலை கொண்ட துணைப் பாத்திரங்கள் அல்ல என்பது மேலுக்கு வந்தது. எனவே, நவீன இலக்கிய வெளியில் உருவாகியிருந்த பொதுவான இலக்கிய மனநிலை என்பது பன்மைத் தன்மைகொண்டதாக பேசுபொருளானது.
இதுவே இலக்கிய அரசியலாகவும், பன்மையான இலக்கியச் செயற்பாடுகளுக்கான தேவையாகவும் மாறி, இலக்கியத்தை ஒருவகை அரசியல் செயற்பாடாக மாற்றிவிட்டிருக்கிறது. அகத்தின் உற்பத்தியாக இருந்தாலும், புறத்தில் மையம் கொண்ட இலக்கியப் பிரதிகளாக இருந்தாலும், அந்தப் பிரதிகள் பன்மையான அம்சங்களை, கருத்து, அழகியல், என அனைத்திலும் கவனிக்கத் தொடங்கியது. இதுபோல், எந்த அம்சங்களைக் கொண்டும் ஒரு இலக்கியப் பிரதியை உருவாக்க முடியும் என்ற நிலைக்கு இந்தப் புரிதல்கள் வழிவகுத்திருக்கின்றன. ஒரு இலக்கியப் பிரதி கொண்டிருந்கும், அரசியல், அழகியல், எடுத்துரைப்பு முறைமைகள் போன்றவற்றில் “பன்மை”த் தன்மையை வெளிப்படுத்திய போதிலும், கவிதைப் பிரதி உருவாக்கத்தில் பன்மையான நிலைப்பாட்டை அக்கறைகொள்ளவில்லை.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான விசயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது அகம் – புறம் என்று இரு முரண்ணிலையாக மட்டுமே நவீன கவிதை வெளியில் புரிந்துகொள்ளப்பட்டிருந்தன. அகத்திலும், புறத்திலும் இருந்த பன்மையான அம்சங்கள் தனித்தனியாக கவனத்திற்கொள்ளப்படவில்லை. அதற்குரிய கருத்து நிலைகள் தமிழில் விரிவாக பேசப்பட்டிருக்கவில்லை. சர்ரியலிசம் என்ற பேச்சு நவீன கவிதை வெளியில் பேசப்பட்டிருந்த போதும், அதை முழுமையாக உள்வாங்கி ஒரு கருத்தியல் சார் கவிதை இயக்கமாக வளர்த்தெடுக்கப்படவில்லை.
அகத்தில் உருவாகும், கனவுகள், பிறழ்வான எண்ணங்கள் ( அன்றைய சமூக மதிப்பீட்டை வைத்து பிறழ்வான எண்ணங்களாக கணிக்கப்பட்டன. உண்மை அவை மனதின் உற்பத்திதான்) போன்றவைகளும் யதார்த்தமானவைதான், புறச் சூழலில் காணக்கிடப்பவைகள், அவற்றின் துாண்டுதலில் உருவாகும் செயல்கள் மாத்திரமேதான் யதாரத்தமானதல்ல என்ற குரல்கள் விரிவாக தமிழில் பேசப்படவில்லை. ஆனால், கவிதைகளில் அகத்தில் உருவாகும் மாயமான புரிதலுக்கும், சமூக ஏற்புக்களாக கருதப்பட்ட தரப்படுத்தப்பட்ட நிலைப்பாடுகளுக்கும் புறம்பாக இருக்கும்படியான படிமங்கள், உருவகங்கள் பாவிக்கப்பட்டனவே தவிர அவற்றைக் குறித்த பேச்சுக்கள் விவாதிக்கப்படவில்லை. அதுவும், கவிதையை மய்யப்படுத்தி ஆழமாக உரையாடப்படவில்லை.
சிக்கமன் ஃபிரைட் மற்றும் கால் யுங் போன்றவர்களின் உளவியல் சார்ந்த கருத்துக்களின் தாக்கத்தில் மேற்கில் உருவாகி இலக்கியத்திலும், கவிதையிலும் விவாதிக்கப்பட்ட ஒன்றுதான் சர்ரியலிசம். அடக்கப்பட்ட ஆசைகளின் இருப்பிடாக கருதப்படும் நனவிலி மனதின் “மாயமான” வெளிப்பாடுகளையும், கனவின் விசித்திரமான பண்புகளையும் மொழியின் வழியாக சமூகமயமாக்கும் கவிதைச் செய்முறைக்கு சர்ரியலிசம் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆக,அகத்தின் பிரக்ஞையான வெளியிலிருந்தும், பிரக்ஞையற்ற (நனவிலி) வெளியிலிருந்து புறச்சூழலை நோக்கி செயற்படும் அசைவியக்கத்தையும் யதார்த்தமானதுதான் என்றும், அவைகூட கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றுதான் என்றும் வலியுறுத்திய கருத்தியல் சார் இலக்கிய மரபைச் சார்ந்தது சர்ரியலிசம்.
சர்ரியலிசம் என்பது, பிரக்ஞையான மனம் என்றும் பிரக்ஞையற்ற மனம் என்று அகத்தை மய்யப்படுத்தி உருவாக்கப்பட்ட பிரிவுகளில் ஒன்றான நனவிலி மனதின் செயற்பாடுகளும் யதார்த்தமானது எனச் சொன்னதினுாடாக, அகத்தை மய்யப்படுத்தி உருவாகி நின்ற ஏற்றத் தாழ்வைச் சுட்டிக்காட்டியதோடு, தாழ்வான நிலையில் வைத்துப் பராமரிக்கப்பட்ட நனவிலி மனதின் உற்பத்திகளையும் சமூகவெளிக்கு தள்ளி சமூக உண்மையாக மாற்றியமைக்க முயற்சித்தது. ஆயினும் கூட ஏற்கனவே எதிரெதிரானதாக ஏற்கனவே பிரிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்பட்ட அகமும் புறமும் இணைந்திருக்கும் புள்ளிகளை அக்கறைகொள்ளவில்லை.
இதேபோல்தான், புறச்சூழலை உற்பத்தியை அடிப்படையாக வைத்து, முதலாளி – தொழிலாளி என இரண்டாகப் பிரித்து புறமொதுக்கப்படும் தொழிலாளர்களின் பக்கம் நின்று தன்னை முழுமையாக வெளிப்படுத்தியது மார்க்சியம். பின்நவீனத்துவம் அகம் புறம் என பிரிக்கப்பட்டிருந்த இரண்டு பகுதிகளுக்கிடையிலான இணை புள்ளியை கண்டுபிடித்து முன்வைத்ததோடு, அகத்திலும் புறத்திலும் இரு பகுதிகளாக இருந்த பிளவை மறுத்து, அவற்றின் பன்மைத் தன்மையான நிலைப்பாடுகளை முன்வைத்தது. அதாவது “தொழிலாளி” இடத்தில், தேவைக் கேற்ப, பெண்கள், சிறு சமூகங்கள், தலித்கள், கீழ்திசை
நாடுகளைச் சேர்ந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், ஓரினப்பாலுறவாளர்கள், நோயாளிகள், பைத்தியக்காரர்கள், குற்றவாளிகள், என சமூகத்திலுள்ள பன்மையான புறமொதுக்கப்பட் மக்கள் கூட்டத்தை, கருத்து நிலைகளை, இலக்கியச் செயற்பாடுகளை இருத்தி அதற்கெதிரான மய்யங்களையும், அதன் அடக்குமுறை மற்றும் வன்முறைகளையும் வெளியே கொண்டு வந்தது. இவற்றின் பக்கம் நின்று குரல்கொடுக்கத் தொடங்கியது.
லகான் தனித்த சுயம் என்ற ஒன்றில்லை. சுயம் என்பதே, புறச் சூழலின் அசைவியக்கத்தால் வடிவமைக்கப்படும் ஒன்று என முன்வைத்த விசயங்கள் பின்நவீனத்துவ புரிதலின் அடியாக புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. எனவே, அகம் என்பது தனித்ததும், நிலையானதுமான ஒன்றல்ல. பன்மையானது, பல சுயங்களின் குவிமையம். சுயம் மாற்றமடையக்கூடியது. புறச் சூழலில் பன்மையான அம்சங்கள் இருப்பதைப்போன்று, அகச் சூழலும் பன்மையானது என்ற கருத்தை வெளிப்படுத்தி நிற்கிறது. சர்ரியலிசம் அகத்தை இரண்டாகப் பிரித்தது. மார்க்சியம் புறத்தை இரண்டாகப் பிரித்தது. அதிலிருந்து பிற்படுத்தப்பட்ட (அறிதல் முறைகளாலும், அதிகார விளைவுகளினாலும்) பகுதியின் பக்கம் நின்று கவனத்தை ஈர்த்தது. பின்நவீனத்துவம், அகத்தையும், புறத்தையும் பன்மையானதாகக் கண்டது. அந்தப் பன்மையான அம்சங்கள் அனைத்திலும் பிற்படுத்தப்பட்ட பக்கம் நின்று தனது கதையாடலை முன்வைத்தது.
சர்ரியலிசத்தின் முக்கிய அம்சமான நனவிலி மனதை புறச் சூழலுக்கு அறிமுகப்படுத்துதல் என்ற கருத்தை பின்நவீனத்துவம் மறுத்தது. நனவிலி மனதின் அனைத்து உற்பத்திகளையும் புறச் சூழல்மீது பிரயோகிக்கும்போது வன்முறை சார்ந்த அம்சங்களும் வெளிப்பட இருக்கும் வாய்ப்பை மறுத்தது. அதாவது நனவிலி மனதின் பிறழ்வான உற்பத்திகளில், அடக்கி வைக்கப்பட்ட ஆசைகளில் உள்ள வெறுப்பு, கோபம், போன்றவைகள் மற்றமைகளை பாதிக்கக் கூடியது எனவே, அவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டிய தேவையை முன்வைத்தது. யாதார்த்தவாதம் எதிர்பார்த்ததைப்போல், முற்றாக நனவிலி மனதை புறக்கணித்துவிடாமலும், சர்ரியலிசம் சொல்வதுபோல் நனவிலி மனதை முழுமையாக வெளிப்படுத்தாமலுமான ஒரு நிலைப்பாட்டை எடுத்தது.
லக்கான் சொல்வதுபோல், புறச் சூழலின் துாண்டுதலால், அகத்தில் இருந்து ஒர செயல் உருவாகிறது என்ற போதும், அந்தச் செயல் உருவாவதற்கான இடம் என்பது “இயல்பூக்கமானது” என்கிறது. இயல்பூக்கம் என்பது விலங்கு நிலை. பாதிப்பற்றவகையில் மனிதச் சிந்தனையால் வடிவமைத்து செலாக மாற்றுவதே விலங்கு நிலையிலிருந்து பரிணாம வளர்ச்சி நிலையை எட்டுவதாகும். இயல்பூக்கம் என்ற வகையில் அதன் அனைத்து பகுதிகளையும் புறச் சூழலுக்கு கொண்டுவர முடியாது. பிறருக்கு பாதிப்பற்ற வகையான ஒன்றாக மாற்றியமைக்கும் செயல்முறைதான் சிந்தனை என்கிறது.
எனவே, புறச் சூழலும், அகச் சூழலும் ஒன்றிலிருந்து மற்றது தனித்த எந்தத் தொடர்புமற்ற ஒன்றல்ல. ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளது. அதாவது புறமும் அகமும் ஒரே அம்சத்தின் இரண்டு பகுதிகள். இரண்டு பகுதிகளிலும் மனிதச் சிந்தனை இன்னும் அறியாத, கண்டுபிடிக்காத அம்சங்கள் உண்டு. எனவேதான், அகமும் புறமும் இணைந்த நிலையிலான மனித உற்பத்திகளில் ஒன்றுதான் கவிதை. அந்த உற்பத்தி ஒரு பொருளாக தாங்கப்பட்டு இருக்கும் இடம்தான் மொழி.
மொழி என்பது மறு உற்பத்தி செய்யப்படும்போது அர்த்தம் தருவதாகவும் (பலவகைாயான) புதிதாக உற்பத்தி செய்யப்படும்போது அர்த்த மற்றதாகவும், இரண்டையும் இணைத்து உருவாக்கும்போது அர்த்தத்தை ஒத்திப்போடு ஒன்றாகவும் இருக்கிறது. இதில் அர்த்தத்தை ஒத்திப்போடும் அமைப்பைக்கொண்ட அனைத்தும் கவித்துவ ஆற்றல் கொண்ட ஒன்றாக மாறிவிடுகிறது. கவித்துவ ஆற்றல் என சொல்லும்போது, புதிர் தன்மையைச் கூறவில்லை. புதிர் என்றால் அது அதற்கான விடையை அவிழக்கக் கூடியது என்ற நிலைப்பாட்டை உணர்த்திவிடும். பன்மையான அர்த்தங்களை உருவாக்கக் கூடியது.அந்த அர்த்தங்கள் அனைத்துமே தெளிவான குறிப்பீடுகளாக இணங்காண சவாலானதாக அமைவதைக் குறிக்கும்.
உலகளவில் பின்நவீன கவிதை என்ற ஒன்று வரையறுக்கப்பட்டிராத போதும் ( வரையறுத்தலுக்கு இடந்தராத பின்நவீனத்துவம் எப்படி கவிதையை வரையறுக்கும்) அதன் அடித்தளம் என்பது, மாயமான அகமும், தெளிவான அறிதலுக்குட்பட்டது என நம்பப்படும் புறயதார்த்தமும் கலந்த ஓர் புரிதல் முறையில் தங்கியிருக்கிறது என எடுத்துக்கொள்ள முடியும்.
அதாவது மாயம் – அதற்கு முற்றிலும் எதிரானதாக கருதப்பட்ட யதார்த்தமும் சந்திக்க சாத்தியமுள்ள புரிதலை உருவாக்கும் இடம். இதை எளிமைப் படுத்திக் கூறுவதானால் “மாய யதார்த்தம்” என்று சொல்லிவிடலாம். இந்த மாய யதார்த்தம் என்பது உலகளவில், பல வகையில், பல காரணங்களுக்காக இலக்கியப் பிரதிகளில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. பல நேரங்களில் பல விமரசகர்கள் இந்த மாய யதார்த்தத்தை ஃபென்டாஸி ( கற்பனாவாதமாக) புரிந்துகொண்டுமிருக்கின்றனர். இலக்கியச் செயற்பாட்டாளர்களும் இதேவகையில் புரிந்துகொண்டிருக்கின்றனர். உண்மையில் இரண்டும் பண்பளவில் வேறுபட்டது.
கலைகளாக மனிதன் நம்பும் பலவற்றில், மொழி சார்ந்தவைகள் மட்டும்தான் அகத்தினுள் நுழைந்த கணத்திலேயே உற்பத்திச் செயலுக்கு தயாரான நிலையைக்கொண்டிருக்கிறது. சிந்திக்கிறது. அதன் பிறகே மனதின் பரப்பெங்கும் பரவுகிறது. ஏனைய புலன் சார்ந்தவைகள் உதாரணமாக இசை (ஒலிகள்) மனதின் பரப்பெங்கும் பரவிய பின்னரே அதிலிருந்துதான் உற்பத்திக்கு ஏதுவான நிலையை எடுக்கின்றன. அகம் என்பது மொழியை குறியீடாக உணர்வதற்கு, அந்த மொழி ஏற்கனவே பிறிதொரு குறியீடாக இருப்பதற்கும் இடைப்பட்ட சிந்தனை உற்பத்திக்கான அவகாசம்தான் அது. ஏற்கனவே வழங்கப்பட்ட அர்தங்களைச் சுமந்துகொண்டுதான் அகத்தினுள் மொழி நுழைகிறது. அதிலிருந்த நடைபெறும் உற்பத்தியின் வழியாகத்தான் உணர்தல் நிலைக்கு நகருகிறது. ஆனால், ஒலிகளோ நேரடியாக உணர்தல் நிலையிலேயே நுழைகின்றன. அந்த வகையில் ஏனைய கலைகளில் இருந்து மொழியில் உருவாகும் கலை சவாலான ஒன்றாக மாறிவிடுகிறது. உற்பத்தி உழைப்பை (சிந்தனையை) அதிகம் துாண்டுகின்றன. மொழியில் இருக்கும் சொற்கள் பன்மையான அர்த்தங்களை உருவாக்குவது மாத்திரமன்றி, புதியதும் மாயமானதுமான அர்தத்தை ஒத்திப்போடும் வேலையையும் செய்வதால், எப்போதும் சவாலான ஒன்றாகவே இருக்கிறது. அர்த்தத்தை ஒத்திப்போடும் வேலையை செய்யும் பிரதிகள் சிந்தனைக்கான சவாலைக் கோருவதனால், கவிதையை நெருங்கிவிடுகின்றன. நவீனத்துவ வாதிகள் இதை பரீட்சய நீக்கம் என்று சொல்லுவர். நமக்கு பழக்கப்பட்ட அர்த்தத்தை உடனடியாக தரும் ஒன்றை, மழக்கமற்ற அர்த்தத்தை தரக்கூடிய மர்மம் நிறைந்ததாக ஆக்குதல் என்று சொல்லுவர்.
இதை மட்டுமே வைத்துக்கொண்டு, கவிதைப் பிரதியை அடையாளம் காண முடியாது. கவிதை என்பது சிந்தனை சார்ந்த உழைப்பு. மொழியை அதன் குறிப்பீடுகளை மாற்றியமைத்து புதியதொரு அறிதல் வெளியை முன்வைப்பது. இப்படிச் சொல்வது கூட வரையறுப்பதுதான் எனினும், புதிதாக வரையறுப்பது , புதிய கோணத்தில் வரையறுப்பதுடன், குறித்த வரையறைதான் நிலையானது என்ற நிறுவனப்படுத்தப் பட்ட புரிதலில் இருந்தும் வெளியேறுவதுமாகும். இந்த வகையில் பார்த்தால் நவீன தமிழ்க் கவிதையின் அடித்தளத்தில் நிறுவனமயப்பட்ட இரண்டு அம்சங்கள் உட்சரடாக ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம். தமிழ் நாட்டைச் சேர்ந்த நவீன கவிதைகள், அகவெளியை நீண்டகாலமாக முன்னிலைப்படுத்தி வந்திருக்கின்றன. ஈழத்து நவீன கவிதைகள் புறச் சூழலை முன்னிறுத்தி வந்திருக்கின்றன. எனவே, தமிழ் நாட்டில் பின்நவீன வரவோடு புறச் சூழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவையை
உணர்ந்து கவிதைகள் வெளிப்பட்டன. தலித் கவிதைகள், பெண்ணியக் கவிதைகள், இஸ்லாமிய வெளியின்மாற்றுக் குரல்கள் என்று இன்னும் பலவற்றைக் கூற முடியும்.
ஈழத்தைப் பொறுத்தமட்டில், புறச் சூழலுக்கு மாற்றாக அகத்தை அதிக கவனம் கொள்ளும் கவிதைகள் வெளிவந்திருக்க வேண்டும். அதுவும் யுத்தத்தின் சாரமாகவே வாழ்வை பார்க்கத் துாண்டிய இலட்சியவாத அரசியல் முன்வைப்புக்கள் அதிக தாக்கத்தை கொண்டிருந்தமையாலும், அந்த இலட்சியவாதம் திடீரென சிறு கனவைப்போல, ஒரு மாயைப்போல அகத்தின் நம்பிக்கையிலிருந்தும், புறத்தின் செயல்களிலிருந்தும் மறைந்துபோனதினாலும், இத்தனைகாலம் மறந்து கைவிட்டிருந்த வாழ்வை அதன் பன்மையான கோணங்களிலிருந்தும் பார்க்க வேண்டிய தேவை உருவானதினாலும் அகத்தை நோக்கி நவீன கவிதைகள் சென்றுவிட முடியாத நிலை ஏற்பட்டது. ஆயினும், அகவெளியையும், புறச்சூழலையும் இணைத்து உற்பத்தி செய்யப்படும் மாய யதார்த்தத்தை இயங்குவெளியாகக் கொண்ட கவிதைகள் உருவாகின. கடந்த இருபது ஆண்டுகளாக கணிசமான அளவு மாய யதார்த வெளியை அக்கறை கொண்ட கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. இதுவரை நவீன கவிதைகளை மையப்படுத்திய ஆய்வுகள் ஈழத்தில் வெளிவரவில்லை. வரலாற்றுத்தகவல்களைத் தொகுத்து தரும் முயற்சிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. புத்தக மதிப்புரைகள், முன்னுரைகள் மாத்திரமே கணிசமான அளவு எழுதிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. விமர்சன முறைமையிலுள்ள போதாமைகள் ஈழத்தின்புதிய நவீன கவிதைகள் அல்லது தமிழின் விரிந்த பரப்பிற்குள் நவீன கவிதை என நம்பப்பட்ட பண்புகளைக் கடந்த நவீன கவிதைகள் பற்றிய விமர்சனங்கள்,ஆய்வுகள் இல்லை என்றே சொல்ல முடியும். விமர்சனம் என்பது பல்வேறு தளங்களில் ஆராயப்பட வேண்டிய ஒன்று. நுட்பம் சார்ந்து மொழிகாட்டும் அனுபவமாக (தரிசனம்) மாத்திரமே விமர்சனம் சுருங்கிப்போனது தமிழ் நவீன கவிதைப் புரிதலில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் என்றே கூற வேண்டும்.
தமிழ்நாட்டைப்பொறுத்தமட்டில், புறச்சூழலை கவனத்திற்கொண்டு பின்நவீனத்துவ அரசியல் புரிதலின் வழியாக உருவான கவிதைகள் இன்று வியாபித்திருக்கின்றன. பின்நவீனக் கருத்தியல் அரசியல் சார்ந்து விவாதிக்கப்பட்ட அளவு, கவிதையியல் (கவிதை மேக்கிங்) சார்ந்து விவாதிக்கப்படவில்லை. நிறப்பிரிகைகூட இதற்கு விதிவிலக்கல்ல. பின்நவீனத்துவத்தின் ஆரம்ப நிலை என்பது, தமிழ்நாட்டுச் சூழலில் அரசியல் சார்ந்துதான் முன்வைக்கப்பட வேண்டிய தேவை இருந்தது. அதனடியாகத்தான் தலித் இலக்கியச் செயற்பாடும், பெண்ணிய இலக்கியச் செயற்பாடும் புதிய திசைகளைத் திறந்து வெளியே வந்தன. அங்கிருந்த சமூகச் சூழல் என்பது அரசியல் பன்மைத் தன்மைக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டிய நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். தமிழின் நவீன கவிதை வரலாற்றை ஆழமாக நோக்கினோம் என்றால், கவிதை மேக்கிங் அதாவது, கவிதையின் உள்ளமைப்பு, எடுத்துரைப்பு முறை, உள்ளிட்ட கவிதை சாய்வுகொள்ளும் அரசியல் என அனைத்திலும் கவனம் செலுத்தி புதியதொரு கவிதைப் பிரதியை அல்லது கவிதைப் பிரதிகளை உருவாக்க வேண்டிய தேவை உணரப்பட்டிருக்கவில்லை. அதற்கான விவாதங்கள் நடைபெற்றிருக்கவில்லை. உரைநடையில் கவிதைகளை எழுதுதல் மற்றும் நவீன கவிதையா மரபுக்கவிதையா போன்ற விவாதங்கள் தான் நடந்தேறியிருக்கின்றன. நவீன கவிதை என்பதும் பன்மையான வகைமைகளில் உருவாக்கப்பட வேண்டிய தேவையை முன்வைத்து, அதன் கட்டமைப்பில் புதிய கோணங்களை கவனத்திற்கொள்ளவில்லை என்பது தெரியவரும்.
ஈழத்தை எடுத்துக்கொண்டால், நவீன கவிதை மரபுக்கவிதை போன்ற விவாதங்கள் கூட நடக்கவில்லை. குறித்த அரசியல் இலட்சியத்தை முன்வைக்கிறதா இல்லையா என்றுதான் கவிதை குறித்த அதிகபட்சக் குறிப்புகள் கூட (கட்டுரைகள்) கிடைக்கின்றன.
தமிழின் விரிந்த பரப்பிற்குள் நவீன கவிதை மனம் என்பது மற்றமையை அக்கறைகொள்ளாத, பன்மைத் தன்மையை ஏற்க மறுக்கின்ற புரிதலினடியாகவே அதிகம் வளர்ந்து வந்திருக்கின்றன. தமிழின் விரிந்த பரப்பிற்குள் ஊருவாகி நிற்கின்ற அனைத்து வேறுபாடுகளையும் கவனத்திற்கொள்ளாது, அவற்றை பொதுமைப்படுத்தும் முயற்சியில் இறங்கும்போது, பல அம்சங்கள் புறக்கணித்து கைவிடப்படும் நிலை ஏற்படுகின்றன. அந்த பொதுமைப்படுத்தல் ஒரு நிறுவனமாக மாறி வேறுபாடுகளைக் கொண்டவற்றின் மீது அதிகாரமாக கவிந்து அடக்குகின்றன. ஆக, பன்மையான வேறுபாடுகளையும் கவனத்திற்கொண்டு அவற்றுக்கான இடம் வழங்கப்பட வேண்டும். அதே நேரம், எந்தவொரு கலையும் பொதுத் தன்மைகளால் வரையறுக்கும்படி நிறுவனமயப்படுத்தப்படுவதற்கு எதிராகவும் செயல்பட வேண்டும். அப்படி செயல்படுவதென்பது, புதிதாக கலைப்படைப்புகளில் முயற்சிப்பதுதான். புதிதாக முயற்சிப்பதென்பது கருத்துக்களில் ஏற்படுத்தப்படும் புதிய விசயம் மாத்திரமல்ல. வடிவம், எடுத்துரைப்பு முறைமை என அனைத்திலும் அந்த மாறுதல்களை உற்பத்தி செய்வதுதான். அதற்கான உழைப்பு என்பது, நீண்ட காலமாக கவிதை என நம்பப்படும் பண்புகளிலும், கட்டமைப்புக்களிலிலும் இருந்து விலகிச் செல்லும் சிந்தனை உழைப்பை பற்றியது. தமிழின் நவீன கவிதை அதிகமும் என்ன சொல்கிறது என்ற கருத்தை நோக்கித்தான் வினையாற்றி வந்திருக்கின்றன. என்ன செய்ய முற்படுகிறது என்று ஓரளவு பின்நவீன வருகைக்குப் பின் விவாதிக்கப்பட்டிருக்கிறது. எப்படி தன்னை கவிதையாக நிகழ்த்திக்காட்டுகிறது, ஏற்கனவே உள்ள கவிதை என்ற நம்பப்படும் கட்டமைப்பிலிருந்து விலகிச் செல்கிறது என்று பேசப்பட்டிருக்கவில்லை. ஏற்கனவே உள்ள கவிதை கட்டமைப்பிலிருந்து விலகினால், விலகும் பிரதி கவிதையல்ல என்று முடிவெடுக்கும் மனநிலையையே அதிகம் வெளிப்படுத்தி வந்திருக்கிறோம்.
நாவல், சிறுகதை, என பிற இலக்கிய வடிவங்களிலும், இசை, சினிமா, கட்டிடக்கலை போன்ற பிறகலைகளிலும் அவற்றிற்கான மேக்கிங் பண்புகள், உத்திகள், கருத்து நிலைகள், நொன்லீனியர் அமைப்பு மற்றும் எடுத்துரைப்பு போன்ற அம்சங்களில் ஏற்பட்ட புதிய கரிசனங்கள் கவிதைகளில் குறைந்தளவிலேயே உள்ளெடுக்கப்பட்டு முயற்சிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அரசியல் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றன. தலித் கவிதை இயக்கத்தின் மிக முக்கியமான முன்னோடியான என்.டி.ராஜ்குமாரின் கவிதை ஒன்றை,அது தனக்குள் உட்பொதித்து வைத்திருக்கும் பின்நவீன அரசியலை,அதிலுள்ள சிக்கல்களைக் கூட நுண்ணிய அளவில் கவனித்து எனது “அத்துமீறும் வாசிப்பு” என்ற நுாலில் பதிவுசெய்திருக்கிறேன். நவீன கவிதை மனதைக் கடந்த இன்றைய கவிதைகள், சில அதன் அரசியலை அக்கறை கொள்கிறது. சில அதன் புதிய அழகியலை அக்கறைகொள்கிறது. மிகச் சில கவிதைகளே இவற்றோடு இணைத்து கவிதை மேக்கிங் என்ற வகையில், எடுத்துரைப்பு முறை, உத்திகள், வடிவமற்ற வடிவங்களையும் கவனத்திற்கொள்கின்றன. அத்தோடு, அகத்தையும், புறத்தையும் இணைத்த மாய யதார்த்தத்தை கவிதையின் அடித்தளமாக மாற்றிச் செயற்படுகின்றன. குறித்த பின்நவீன புரிதலின் கோணத்திலிருந்து விமர்சிக்கப்படவும், ஆய்வு செய்யப்படவும் வேண்டியதே ஒழிய, அவற்றின்மீது வெப்புசாரங்களையும், அந்தக் கவிதைகளைப் புரிந்துகொள்ள முடியாத தமது இயலாமைகளை வாந்தி எடுப்பதற்கு முயற்சிக்க வேண்டியதில்லை.
ஈழத்தைப் பொறுத்தமட்டில் கவிதை குறித்த ஆய்வுகளோ, விமர்சனங்களோ தகவல்களை ஒன்றிணைத்தல். அல்லது ஒரு அரசியல் இலட்சியத்தை ஏற்றி வாசித்தல் என்றளவிலேயே சுருங்கிப்போயிருக்கின்றன. சில இளம் இலக்கியச் செயற்பாட்டாளர்களுக்கு, எல்லாம் ஒன்றுபோல் தெரிகின்ற ஒரு நோய் தாக்கியிருப்பதை உணர முடிகிறது. அரண்ட கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என ஒரு முதுமொழி உண்டு. அதுபோலதான் கவிதை விசயத்திலும் இவர்களுக்கு நிகழ்கிறது. அனைத்தையும் பொதுமைப்படுத்தி பார்க்கும் நவீனத்துவ புரிதலின் வியாதி இது. பின்நவீனத்துவம் அதை வேறு கோணத்தில் புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. ஒவ்வொன்றுக்குமிடையிலான வித்தியாசங்களை நுண்ணளவுவரைச் சென்று அவதானிக்கத் துாண்டுகிறது. “காப்பி அடித்தல்” என்ற பெயரில் நவீனத்துவம் அணுகிய புரிதலை,
இன்டர்டெக்சுவாலிட்டி என்ற கோணத்தில் முன்வைத்திருக்கிறது. ஒரே ஒரு சொல்லைக் கூட பலர் பயன்படுத்தும் போது, பல பிரதிகளில் (கவிதை, சிறுகதை, நாவல்) உள்ளெடுக்கும்போது, பல சூழலில் பாவிக்கும்போது, அந்தக் குறித்த சொல்லுக்கு ஒரே அர்த்தம் இருப்பதில்லை என்கிறது. இது குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது. எல்லாம் ஒன்றுபோல் தெரியும் வியாதி பீடித்திருக்குமானால் இன்னும் அவர்கள் நவீனத்துவ சிந்தனைக்குள் சிக்கித்தவிக்கின்றனர் என்றுதான் அர்த்தம். ஒரே சொல்லில் கூட பன்மையான அர்த்தங்களையும், ஒவ்வொன்றிலும் உள்ள வேறுபாடுகளையும் கவனிக்க முடியுமாக இருந்தால், அந்த வியாதி தீர்ந்துவிட்டது என்றும் அர்த்தம். இந்த வியாதியை அதிகம் பொருட்படுத்தத் தேவையில்லை என நினைக்கிறேன். ஆயினும், ஈழத்து ஸ்டேடஸ் வித்துவான்களுக்கு சிறியதொரு விசயத்தை சொல்ல விரும்பகிறேன். இது தமிழ்நாட்டை சேர்ந்த இலக்கியச் செயற்பாட்டாளர்களுக்கானது அல்ல.
மிகையான மனப் பதட்டம் (மனவெழுச்சி), ஏதோவொன்றுக்கு ஆதரவாக குரல் ( அதன் அரசியலைப் பேசுவதில்லை) கொடுப்பது போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும் விமர்சனக் கோபம் போன்றவை உள்ளடங்கிய, நமது கவிதைப் பாரம்பரியத்தின் மிகப் பழமையான தேவையற்ற சுமையை இன்னும் சுமக்கவே விரும்புவதுபோல அதிகம் கவிதைகள் வெளிவருகின்றன.
இதுவொரு, முக்கியமான வரிந்திப் பாரம் சுமப்பதே ஆகும்.
எளிய முறையில், சூட்சுமமாக குறிப்புணர்த்தும் வசனங்களை, குறைவான சொற்களால் உருவாக்குவதுமான நிலையை தமது தார்மீகக் கடமையாக, நமது பழைய நவீன கவிதைகள் பொறுப்பேற்றிருந்தன.
இப்படியாக, நவீன கவிதைக்கான ஒரு வரையறை மறைமுகமாக உருப்பெற்றது. ஒன்றிலிருந்து மற்றயது எப்படி வேறுபடுகிறது என்பதை வாசிப்பதற்காக அவை பயன்படாமல், ஏதாவதொன்றை தவிர்த்துவிடுவதற்கே அதிகம் பயன்பட்டது.
நமது பழைய நவீன கவிதைகள், எப்படியான வேலைகளைச் செய்ய முற்பட்டதோ, அல்லது அவைகளின் எந்த வகையான உள்ளடக்கங்களையும், வடிவ (புற மொழி எடுத்துரைப்பையும்) நிலையையும் அளவுக்கதிகமாக இன்று பாவனை செய்கிறதோ அவைகளை நான் நவீனம் கடந்த கவிதை (பின்நவீன) எனக்கூறத் தயங்குகிறேன்.
தற்போது, அவைகளின் தேவைப்பாடு குறைந்துவிட்டது என்பதையே கருத்திற்கொள்கிறேன். அவை அதிகம் மலிந்துவிட்டது என்பதாலும் எனது தயக்கம் நீடிக்கவே செய்கிறது.
மிகை உணர்வெழுச்சி நிறைந்த சொற்கூட்டங்களே கவிதை எனப் பயிலப்படும் பொதுஜன வெளியும், கறாரான வரண்ட ஒருவகை எடுத்துரைப்புக்களும், தேர்ந்து பொறுக்கிய சொற்களும்( கவிதைக்கு உகந்தது அல்ல என பல சொற்கள் ஒதுக்கப்படுவதினுாடாகத்தான் இந்தத் தேர்வு நிறைவடைகிறது) எளிமையான எடுத்துரைப்புக்களும், ஏதோ ஒரு விமர்சனமும் (சமூகக் கோபம் என ஏதாவது) மொழியில்பீச்சியடிக்கப்பட்டு, மனமொழியாய் மாறிவிட்டது (கவிதை மொழி) என்பதாக ஒருவகை, மயக்கப் புனைவு வரிகளும் ஒரு பிரதியை நிரப்பும்போது, அவசரமாக அதைக் கவிதை என அழைக்க வசதியாக இருந்தது. அல்லது வசதியாக உணர வாய்ப்பைத் தந்தது. நமது பழைய நவீன கவிதைகளின் குறுக்கு வெட்டு முகம் இதுதான்.
இந்தப் பழைய அறிவுறுத்தல்களுக்கமைவாகவே, இன்றும் கவிதைகளை எதிர்பார்ப்பது மோசமான பிடிவாதம்தான். இது கவிதைகளின் பல் தன்மைகளை மறுக்கும் ஒரு தரித்திரியம் பிடித்த நிலைதான். கவிதை குறித்த பயில்தல்கள் அதிகமும், பல் வகையான கவிதைகளை அதன் உருவாக்கத்தை கட்டுப்படுத்தும் வழிகளை பரிந்துரைப்பதாகவே இருக்கின்றன.
காலாவதியாகிப்போன பழைய நவீன கவிதைகளைப் பின்பற்ற உந்துதல் அளிப்பதாகவே, இன்றைய கவிதைப் பயில்தல்களும், விருப்பங்களும் அக்கறைகொள்கின்றன. அவைகளைக் கடந்து செல்ல அனுமதிப்பவையாக இருக்கவில்லை. நமது பழைய நவீன கவிதைகள் மாதிரி இல்லையே- என்பதும், அதுபோல எவை இல்லையோ அவைகள் கவிதைகளே அல்ல என்று பொருள்தரும்படியே பயிலப்படுகின்றன. ஆகவே, பழைய நவீன கவிதைகளின் விரல்களைப் பிடித்துக்கொண்டே இன்றையப் பயணம் தொடரப்பட வேண்டும் என்கின்ற மறைமுகக் கட்டளையை பிறப்பிக்கிறது.அல்லது நம்பகிறது.
எதுவித முன்னனுபவமுமின்றி ஒன்றை எதிர்கொள்வதற்கு நிகராகவே இருக்கக்கூடியதுதான் கவிதைச் செயல் என்பதே. அங்கு அனைத்தும், அந்தக்கணங்களில் எதிர்கொள்ளப்பட வேண்டியதே. ஏலவே உள்ள படிப்பினைகளினால் கடந்து சென்றுவிடும் ஒரு பயணமல்ல அது. அது முன்னுதாரணமற்றது. பழைய வழிமுறைகளைக்கொண்டு கடந்து விடத்தக்க ஒரு செயல் அல்ல.
அனைத்தும், அந்தந்தத் தருணத்தில் வழிமுறைகளை உருவாக்கி எதிர்கொள்ள வேண்டியது. ஒவ்வொரு கவிதைப் பிரதியும், புதிது புதிதாகவே தனக்கான சவால்களை உருவாக்குகின்றன. அதை எதிர்கொள்வதும் புதிது புதிதான வழிமுறைகளை உருவாக்குவதினுாடாகவே சாத்தியமானது. அதைப்போல இது, இதைப்போல அது என சோடிபிடித்து “மாட்டுப் பொணையல்” சேர்ப்பதைப்போல் சிந்திப்பதிலிருந்து வெளியேறி, வித்தியாசங்களையும், வேறுபாடுகளையும், கவிதையினுள்ளே உருவாகி நிற்கும், வன்முறைகள், உட்பட ஒரு பிரதி தன்னை எப்படி கவிதையாக நிகழ்த்திக் காட்டுகிறது என்ற கோணங்களில் இருந்து புரிந்துகொள்ள முயல்வது புதியதோர் உரையாடலுக்கான வாய்ப்பை வழங்குவதோடு, கவிதை உருவாக்கத்தில் புதிய திசைகளை நோக்கி சிந்திக்கவும் வழியை ஏற்படுத்தித் தரும்.
இது நவீன கவிதை, நவீனம் கடந்த கவிதையை நோக்கி எப்படி நகர்ந்திருக்கிறது என்பதை மேலோட்டமாக சுட்டிக்காட்டும் ஒரு கட்டுரைமாத்திரமே. உரையாடலை தொடர்ந்தால் விரிவாக பேச வாய்ப்பாக இருக்கும்.