கைவிடப்பட்டிருந்த கட்டிடமொன்றுடன்
நெடுநேரமாக ஏதோவொரு கதையைச்
சொல்லிக்கொண்டிருந்தது மழை.
அப்போது இரவுதான்
நனைந்தபடி மெதுவாக நுழைந்தேன்
உணவகத்தின் தேநீர் மேசைபோல
மனதை அடிக்கடி துடைத்துக்கொண்டேன்
மறையும் ஏதோவொன்றைத் துரத்தியபடி
கண்கள் ஓடிச் சென்றன
பெரும் இரைச்சல் அங்கு நிலவுவது தெரியும்
அது, காதுகளை அடைவதில்லை
தான் விரும்பிய இடங்களிலெல்லாம்
கட்டிடம் கதவுகளைத் திறந்து காட்டியது
ஒன்றன்பின் ஒன்றாக
அறைகள் நகர்ந்து என்னைச் சுற்றிவளைத்தன
எதிர்பாராமல், ஒரு அறைக்குள்
இழுக்கப்பட்டேன்.
அதன் அடித்தளம் புதையத்தொடங்கியது
அச்சத்தில் கத்தினேன்.
நெடுநேர வாதாட்டத்தின் பின்
கைவிடப்பட்டேன்
இதே கற்பனையை அருகில் தோன்றி
இன்னொருவரும் விவரிக்கத் தொடங்கினார்
இருவரின் கற்பனைக்கிடையிலும்
போக்குவரத்துச் சூழல் உருவானது.
இப்படித்தான் ஒரு நாள் அவருடைய
கற்பனைக்குள் போன நான் திரும்ப முடியாதபடி
போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
என்னை அமுக்கி வைத்திருந்தது எதுவோ
அதிலிருந்து மீண்டு கண்விழித்தேன்
கட்டிடத்தோடு கதைசொல்ல
மழை வந்து கொண்டிருக்கிறது
தூரத்தில் நின்று பார்க்கவே
இன்று முடிவெடுத்தேன்.
இதில் சிதைந்த கட்டிடம் நானாகவும்
மழை மனமாகவும் இருக்க,
மற்றவர் என்பது உங்களில் எவராகவுமிருக்கலாம்