தேநீர் அருந்துகிறேன்
ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு
என் ஞாபகத்தின் கதவுகள்
ஒரு நெடுஞ்சாலையை
எனது நாக்கில் திறக்கிறது
மரத்தால் ஆன கப்பல்களில்
இந்தியாவிலிருந்து
தேயிலை புறப்பட்டது
0000000000000000
மரத்திலிருந்து உதிர்ந்த இலை
விழுந்து கொண்டிருக்கிறது
உற்று பார்க்கிறேன்
அந்த இலை எனது வாழ்வாக
உருமாறிக்கொண்டது
நிலத்தில் விழும் முன்பே,
வாழ்வை எழுதிக்கொண்டிருந்த
பிரமிளின் இறகு,
பறவையாகி இலையைக் கவ்விக்கொண்டது
மீண்டும் மரத்தின் உச்சிக்கு
எடுத்துச் சென்றது
அந்த மரத்தின் உயரத்தை
எவராலும் கற்பனை செய்யமுடியாது
பறவை வாய்திறந்து பாடவில்லை
சிறகடிப்பதை நிறுத்தவில்லை
நான் வாழ்ந்துகொண்டு சாகிறேன்
செத்துக்கொண்டு வாழ்கிறேன்
என்னை பற்றி சிறிதும்
கவலையின்றி இருக்கிறது பறவை
அந்த இலையின்மீது
உங்கள் கண்கள் இருக்கட்டும்