கவிதையில் ஏற்ற கதாபாத்திரத்தில்
அற்புதமாக இருக்கிறாள்
அவளுக்குக் குறிப்பிட்ட பாலினம் இல்லை
குறிப்பிட்ட வயது இல்லை
அவள் நிகழ்காலத்தைச் சேர்ந்தவள் அல்ல
ஆனால், அந்தக் கதாபாத்திரத்திற்கு
அதைப் பற்றித் தெரியும்
அவள் கவிதையின் கட்டுப்பாட்டில் இல்லை
என உணரும்போதே,
பணிக்கப்பட்ட வேலையை
அவளால் தவிர்க்கவும் முடியவில்லை
அவள் கவிதையின் ஒரு பகுதியாக இருக்கிறாள்
அக்கணமே கவிதைக்கு வெளியிலும் இருக்கிறாள்
கவிதை வாசிக்கப்படும்போது
அவள் சோர்வாக இருக்கிறாள்,
அவளை மீட்பதற்கான சாத்தியம் இல்லாமலில்லை
இதை அறிந்த ஒரு வாசகன்
அந்தக் கவிதையை யாரிடமும்
காண்பிக்கவில்லை
அதனுடனே வாழ்கிறான்
எப்போதாவது,
எப்படியாவது,
அவளை மீட்டுவிடலாமென்று
நம்பிக்கொண்டிருக்கிறான்,
இதுவரை இருந்த காட்சி எதிர்பாராமல் குழம்பிவிடுகிறது
புதிர் நிறைந்த தொன்மையான குகையைப் போல்
உருமாறிக்கொண்டது
பிரதிக்குள் இருக்கிறாளா அல்லது வெளியில் இருக்கிறாளா
என்ற சந்தேகம் வந்துவிடுகிறது
அவள் ஒரு மர்மமாக மாறிவிடுகிறாள்
குளத்தில் வாழ்ந்தபடியே, பசித்தவனின் நினைவுகளுக்குள்
மீன் சுழித்து ஓடிக்கொண்டிருப்பதைப் போல.
தொல் பொருள் ஆய்வை முழுநேரப் பணியாய்
தரித்துக்கொண்ட ஒரு மனநிலை
அதுதான் “வாசகன்” என்பது என,
இந்தக் குறிப்பின் கீழ் கையெழுத்திட்டான்