இன்று அரசியலைப் புரிந்துகொள்ள அவசியமான ஒன்று.
இன்றைய உலகில் அரசியல் என்பது, கருத்து நிலைகளால் அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலையைக் கடந்திருக்கிறது. அதைப் புரிந்து கொள்ள populism என அண்மைக்காலங்களில் விவாதிக்கப்படும் ஜனரஞ்சகவாதம் தொடர்பான புரிதல்கள் அவசியமான ஒன்று. 19ம் நுாற்றாண்டில், அமெரிக்கா,ரஷ்யா போன்ற நாடுகளில் முளைவிட்டாலும், இன்று உலகெங்கும் அதிகாரத்தைக் கைப்பற்றும் முக்கியமான ஒரு விசயமாகப் பரவியிருக்கிறது என்கின்றனர்.
இந்த ஜனரஞ்சகவாதம் இடதுசாரிகள், வலதுசாரிகள் என அனைத்துத் தரப்பினராலும் அணிதிரட்டப்படுகின்ற ஓர் அரசியல் செயல்முறைக்கு உதவியாக இருக்கிறது. சில வேளை அல்லது அதிகமாக direct democracy உடன் இணைத்துப் புரிந்துகொள்ள முயல்கின்றனர். என்னவொரு விசயம் என்றால், ஜனரஞ்சகவாதத்தை வரையறுக்க முடியாதிருப்பது என்பது, உண்மையில் பின்நவீனத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.
தாராளவாத ஜனநாயகம் உண்மையில் ஒரு "பிரதிநிதித்துவ" ஜனநாயகம்; வரலாற்று ரீதியாக அதன் தேர்தல் இயல்பை மையமாகக் கொண்டது (உடனடியாக சர்வஜன வாக்குரிமை அல்லது பங்கேற்பு என்ற கருத்தாக்கத்தில் இல்லாவிட்டாலும்), இது பிரதிநிதித்துவச் செயல்முறையை அடிப்படையாகக் கொண்டது.
பிரதிநிதித்துவ ஜனநாயகம் இன்று நான்கு முக்கிய பண்புகளை முன்வைக்கிறது:
“(அ) பிரதிநிதிகளின் தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்படும் மக்களின் இறையாண்மை;
(ஆ) சுதந்திரமான உறவாகப் பிரதிநிதித்துவம்;
(இ) அவர்களின் பெயரில் பேசும் மற்றும் செயல்படும் பிரதிநிதிகள் மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான பொறுப்பை உறுதி செய்யும் ஒரு தேர்தல் பொறிமுறை;
(ஈ) அரசியல் சமத்துவத்தின் மீதான பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் உலகுதழுவிய வாக்குரிமை.
எவ்வாறாயினும், பிரதிநிதித்துவ ஜனநாயகம், கட்டாய ஆணைக்கும் இலவச ஆணைக்கும் இடையிலான முரண்பாட்டைத் தவிர்ப்பதற்காக மட்டுமே செயல்படுகிறது.
இருப்பினும், கட்சிகள் தங்கள் நம்பகத்தன்மையையும் பிரதிநிதித்துவத்தின் நியாயபூர்வமான தன்மையையும் இழந்தால் என்ன நடக்கும்? இந்தச் சந்தர்ப்பங்களில், பல்வேறு போக்குகள் வெளிப்படுகின்றன, அவை பெரும்பாலும் ஜனரஞ்சகம் என்ற லேபலின் கீழ் சாராம்சப்படுத்தப்படுகின்றன. "'மக்களில் ஒரு பகுதியினர்' அல்லது முழு மக்களும் தாங்கள் விருப்பங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உணராத போதெல்லாம், ஒருவிதத்தில் ஏதோ ஒருவிதமான எதிர்வினைகள் எழுகின்றன, அதற்கு ஜனரஞ்சகவாதம் என்று பெயரிடப்பட்டது"
ஆக, ஜனரஞ்சகவாதம், இறுகிப்போயுள்ள பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்பைப் பொறுப்புக் கூறலுக்குள்ளாக்குவதற்கு அவசியம் என்றபோதும், இலங்கை போன்ற பௌத்த தேசியவாத்தால் தலைகளை நிரப்பி வைத்திருக்கும் பெரும்பான்மை மக்களைக் கொண்ட நாட்டில், “மக்கள்” என அழைக்கப்படுவதோ, “ஜனரஞ்சகவாதம்” எனக் குறிப்பிடுவதோ, காலங்காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் சிறு சமூகங்களை மேலும் அதிகார நீக்கம் செய்வதற்கே உதவுதாக இருக்கும்.
இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, கோட்டாபயவின் அரசியல் வெற்றி. மக்கள் எழுச்சி என இன்று அடையாளம் காணும் ஒன்றுக்குள் இன்னும், பௌத்தத் தேசியவாதம் பதுங்கியிருக்கிறது. ராஜபக்ஷக்கள் பௌத்தத் தேசியவாதத்தினதும், பெரும்பான்மை மக்களின் ஜனரஞ்சக விருப்பத்தினதும் விருப்பத்துக்குரிய பிரதிநிதிகள் எனில், ரணில் மென்மையான முறையில் அதை ஆதரிப்பவர்தான். ஆனால், இன்று ஜனரஞ்சகவாதத்தை பொருட்படுத்தாமல் செயல்படும் ஒரு தேவை ரணிலுக்கு தற்போது இருக்கிறது. அது தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கானதாகவும் இருக்கலாம். காலப்போக்கில் ஜனரஞ்சக ஆதரவை எதிர்பார்த்துச் செயற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
ஆயினும், இலங்கையில் “ஜனரஞ்சகவாதம்” எப்போதும் பௌத்தத் தேசியவாதத்தின் விருப்பத்தை முன்னிறுத்தி ஒன்றிணையக்கூடிய கடந்தகால செழிப்பைப் பெற்ற ஒன்று.
ஒரு புறம் பிரதிநிதித்துவ ஜனநாயக முறைகளிடமிருந்து மக்கள் விருப்பங்கள், அதாவது அடிப்படைப் பொருளாதார நெருக்கடியின் நிமித்தம் ஏற்பட்ட முரண்பாடு, மறுபுறம் பௌத்தத் தேசிய ஜனரஞ்சகவாதத்தின் தீர்க்கமுடியாத பிடிவாதமான ஆசை. இரண்டிலும், தற்காலிகமாகப் பொருளாதார நெருக்கடி மேல் நிலைக்கு வந்திருக்கிறது. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய கதைகள் மேலெழும்போது, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கும்போது, ஜனரஞ்சகவாதம் என்பது, “பௌத்தநாடு” என்ற கருத்தில் ஒருங்கிணைந்து மேற்கிழம்பிவிடும்.
பெரியளவிலான இனமுரண்பாடுகளும், இனப்பிரச்சினைகளும் அற்ற நாடுகளில் ஜனரஞ்சகவாதம் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒன்றாக முன்னெடுப்பது சில வேளை பிரயோசனம் கூடிய ஒன்றாக அமைந்துவிடலாம். மேற்கு நாடுகளில் கூட ஜனரஞ்சகவாதம் என்பது, புலம்பெயர்வாளர்களை புறமொதுக்கிய வகையில் தீவிரமாக இருப்பதைப் பலர் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். வெள்ளை ஜனரஞ்சகவாதம் என்றெல்லாம் பேசுகின்றனர்.
ஜனரஞ்சகவாதம் என்பது, பெரும்பான்மையான மக்களின் ஆசை. விருப்பம் போன்றவற்றால் ( உருவாக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம். அனைத்தும் உருவாக்கப்பட உணர்வுகள்தான்) தற்காலிகமாகவும், நீண்ட காலமாகவும் கடைப்பிடிக்கப்படும் ஒன்று.
இலங்கையில் உருவாகியிருக்கும் மக்கள் எழுச்சி என்பது தற்காலிகத் தேவைகளின் நிமித்தம் உருவாகி அணிதிரண்ட ஜனரஞ்சகவாதம். அது அதிகாரத்தை வைத்திருக்கும் நபர்களைத்தான் தம் எதிரியாக வரையறுத்துக் கிளர்ந்தது. அதனால்தான் அதற்குக் கோட்டா கோகம என்று கூடப் பெயரிடப்பட்டது. அரசியல் அமைப்பையோ, பிரதிநிதித்துவ ஜனநாயகத்தையோ தமது எதிரியாக இந்த ஜனரஞ்சகவாதக் கிளர்ச்சி அடையாளப்படுத்தவில்லை.
பிரச்சினை பொருளாதார நெருக்கடியாகவும், எதிரி அதிகாரத்தை வைத்திருந்த நபர்களாகவும் வரையறுத்துக்கொண்டது. அதைக் கடந்து, பிரதிநிதித்துவ ஜனநாயகத்தையோ ( மக்களை வாக்காளர்களாக மாத்திரம் கருதும்) பௌத்தத் தேசியவாதத்தை ஆழமாகக் கரிசனை கொள்ளும் (பிற சமூகங்களைப் புறக்கணிக்கும்) அரசியலமைப்பையோ எதிரியாகக் கண்டுகொள்ளவில்லை.
பிரதிநிதித்துவ ஜனநாயகத்தினதும், ஜனரஞ்சகவாதத்தினதும் உள்ளீடுகளைக் கவனத்திற்கொண்ட அரசியல் வழிமுறைகள் இன்றையத் தேவை.
நவீன (இன்றைய) ஜனரஞ்சகவாதம் வெளிப்படுத்தப்படும் செயற்பாட்டை அதிகம் கவனம் கொள்கிறது. ஜனநாயகம் என்பதற்குள் என்ன இருக்கிறது என அறிந்து மன அமைதியடைவதையல்ல.
மக்களை மையப்படுத்திய அதிகார அமைப்பைக் கரிசனம் கொள்கிறது. அதிகாரம் கொண்ட தனித்த தலைவர்களையோ அப்படியான கட்சிகளையோ மையம் கொண்டதாக இருப்பதை எதிர்க்கிறது. இலங்கையிலுள்ள அநேகமான கட்சிகள் ஜனநாயகத் தன்மையற்ற சர்வாதிகார தலைமைத்துவங்களின் பிடியில்தான் இருக்கின்றன என்பது வேறு விசயம்.
எல்லாக் கருத்துநிலைகளைப்போலவும் ஜனரஞ்சகவாதமும் பன்மையானது. சிக்கலானது. வரையறுக்கக் கடினமானது. கருத்து நிலையற்ற கருத்தியல். அல்லது மிதக்கும் உள்ளடக்கத்தைக் கொண்ட கருத்தியல். என்றபோதும், சில பொதுப்பண்புகளை அடையாளம் கண்டு வெளிப்படுத்தியிருக்கின்றனர். இன்றைய இலங்கையின் அரசியல் சூழலைப் புரிந்துகொள்வதற்கும் “ஜனரஞ்சகவாதம்” populism மற்றும் Direct democracy பற்றிய உரையாடல்கள் அவசியமானவை. ஆனால், தமிழில் இது குறித்து அதிகம் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.
நான்குவகையான ஜனரஞ்சகவாதங்களை அடையாளம் கண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அனைத்து ஜனரஞ்சகவாதத்தினதும் பொதுவான தர்க்கம் “எங்களுக்கு எதிராக அவர்கள்” என்றும் அடையாளம் கண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இவை குறித்தும் வருங்காலங்களில் எழுதுகிறேன்.