இன்று ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருக்கும்போது, புதிய வாசிப்புமுறை கோரிய தமிழ் நாவல் எது என்று ஒரு நாவலைச் சுட்டிக்காட்டினேன். அதன் பிறகே அந்த நாவல் குறித்து அதிகம் சிந்திக்கத் தொடங்கினேன். உண்மையில் இது தற்செயலாக மனதிலிருந்து வந்திருக்க முடியாது என்பதை அறிவேன்.
ஆனால், அந்த நாவலும் நாவலாசிரியரும் புனைவு சார்ந்த வெளியில் அதிகம் பேசப்படாதவர். ஆனால், ஒரு சிலரினால் பேசப்பட்டாலும் அந்த நாவலை முன்வைத்து தமிழின் வாசிப்பு முறைமைகளைப் புரிந்து கொள்ள முயன்றிருக்கவில்லை.
அந்த நாவல் எழுத்துமுறையைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர் அவரேதான். கருத்தியல் சார்ந்தும், புனைவு வகைமை சார்ந்தும், பன்மையான கதையாடல்களையும், இரண்டு கதைசொல்லிகளை ஒரு நாவல் எழுத்துக்குள் உலவவிட்டது என எத்தனையோ விவாதங்களையும், புதிய வாசிப்பு முறைமைகளையும் அந்த நாவல் தன்னுள் கொண்டிருந்தாலும், அது தமிழ் மொழி வெளிக்கு அந்நியமான புனைவுலகு என்று பரவலாகப் பேசப்பட்டது.
நானோ அதனால்தான் அது முக்கியமானது எனக் கருதுகிறேன். அந்த நாவல் 85களில் வெளிவந்தது என்றுதான் ஞாபகம். சுயம், அடையாளம், மறுத்தோடிகள், துரத்தப்படுபவர்கள், புலம் நீங்குபவர்கள் என அனைத்து மனவெளிகளும் - எண்ணற்ற அடையாளங்களை உட்செரித்து வடிவம் பெறும் அகமியினாலும், ஒரு வகைக் கலப்பு நினைவுகளாலும் உருப்பெற்றிருக்கும் இன்றைய தமிழ் மனவெளியில், உடனடியாக மீள்வாசிப்புச் செய்து தமிழ் தனது புனைவு வெளியை நகர்த்திச் செல்லுவதற்கு உண்மையில் அந்த நாவலிலிருந்துதான் தொடங்க வேண்டும்.
தாக்கமுறாத தனித்த தமிழ் அகமி என்பது எப்போதோ அழிந்து போயிற்று. அல்லது எப்போதும் இந்த தனித்த அகமியும், பொது நினைவுப்பரப்பும் இருந்ததில்லை. இந்தப் பிரக்ஞை மேலோங்கியிருக்கும் இன்றைய நிலையில் புனைவெழுத்தின் ஒரு தொடர்ச்சியை விவாதிக்க வேண்டியிருக்கிறது. அத்தோடு, உலகளாவியத் தன்மை எனக் கருதத்தக்க ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை தமிழ் இலக்கியத்திற்கும் இருக்கிறது. அல்லது, உலகத் தன்மை என்று பொதுவான ஒன்றை அனைத்து மொழி இலக்கியங்களையும் உள்ளடக்கிக் கண்டடைய முடியாது என்பதை அறிவேன். ஆனால், பிராந்திய நிறம் அல்லது கலாச்சாரப் பெருமிதம் உண்மைபோல முன்வைக்கப்படும் விளையாட்டு தமிழில் அழுத்தமாக முன்மொழியப்படுகிறது.
தமிழ் மொழி தேசமற்றது. ஆக, கற்பனைத் தேசத்தைப் புனைவுகளினூடாக கடத்திச் செல்ல வேண்டியதும், கற்பனையான மனவெளியைத் தேசமாக உருவாக்கிக் கொண்டிருப்பதற்குமான அவசியமிருக்கிறது.
ஆக, தமிழ் மொழியின் பிரதானச் செயலாகப் புனைவுகளும், மிகை புனைவுகளும், அதீதக் கற்பனை உலவும் வெளியாகவுமே அமைந்திருக்க வேண்டும். ஆனால், சொந்த நாட்டைக் கொண்டிருக்கும் மொழியைப்போல, மஹா உன்னதமான உண்மையைப் பேசுவதாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. உண்மையற்றதற்கும், உண்மை என நம்பப் படுவதற்கும் சாய்வுள்ளதான ஒரு கற்பனைப் புனைவு வெளி தமிழ் மொழியில் உருவாக வேண்டும். உண்மையைப் பேசுவது அரசுகளினதும், அதிகார நிலைகளினதும் வேலை. ஆனால், இலக்கியம் அதைப் பொறுப்பெடுத்துக்கொள்ளக் கூடாது. இந்தச் சிறு சமூகங்கள் தனக்கென கற்பனையான பல வரலாறுகளை எழுதி எழுதி அழிக்க வேண்டியது மிக முக்கியமானது. கற்பனையான இந்த வரலாறுகளிலும், தேசங்களிலும் நினைவுகளும் சிந்தனைகளும் வசிக்க ஏதுவான உத்திகளையும் நிலவரங்களையும் மேலும் பெருக்க வேண்டும்.
தமிழ் மொழி, வரலாற்றில் தன்னால் இழக்கப்பட்ட தேசத்தை நினைவுகளில் தேடிக்கொண்டிருக்கிறது. இது பலநூற்றாண்டுகளின் மாபெரும் தமிழ் நினைவின் வாதை. கற்பனைகளின் அசாத்தியங்களைக் கொண்டே இந்த வாதையை ஆற்றுப்படுத்த முடியும். உலகின் எந்த மொழி இலக்கியத்தைத் தமிழ் நினைவு சந்தித்தாலும், அதற்குள் கற்பனையின் அசாத்தியங்களையும், அதீதப் புனைவையும்தான் தன்னோடு எடுத்துக்கொள்ள விரும்பும். இதற்கு மாற்றமாக எதையும் உள்ளே வர அனுமதிக்காது. ஆக, இந்த நிலையில் தமிழ் மொழியின் புனைவுகளில் உலகத் தன்மையை உருவாக்குவதென்றால், அது கற்பனையை எல்லையற்ற புனைவுகளால் வடிவமைப்பதினூடாகவே சாத்தியமானது. அதற்குத்தான் தமிழ் நினைவு முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும். தனது நினைவின் வரலாற்றை அது கைவிட்டுவிடாது. அப்படிக் கைவிடுவதென்பது அந்த மொழி நினைவை அழிப்பதாகும்.
மொழி எப்போதும் தனது நினைவை அழிக்காது. பெருக்கவே செய்யும். சரி, தமிழ் இலக்கியம் அதை இன்று சந்தித்திருக்கும் கருத்து நிலைகள், தமிழ் நினைவுகளின் இயங்கு வெளி, கதையாடல் புனைவுகள் என ஒருங்கிணைத்து ஒரு தத்துவார்த்தக் கதையாடலை உருவாக்க வேண்டிய தேவை மிகமுக்கியமானது. அந்த முயற்சியை நோக்கிச் செய்யப்படும் கற்பனைகளால்தான் தமிழ் இலக்கியத்தை வெளியே இருந்து கவனிக்கச் செய்ய முடியும்.
முதலில் தமிழில் நம்பப்படும் நவீன இலக்கியம் என்ற கதைகளைச் சங்கடப்படுத்திய புனைவுகள் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றோ, அதைத் தொடர்ந்து இந்தவகை புதிய வாசிப்புக்களைக் கோரும் புனைவுகள் என நாம் தொடர்ந்து விவாதிக்க வேண்டியிருக்கிறது. 80களிலும் 90களிலும் மிகத்தீவிரமாக இயங்கியவர்கள் இன்று வயதானவர்களாக ஆகிவிட்டார்கள். அவர்கள் இன்று விவாதங்களுக்கும் உரையாடல்களுக்கும் அதிகம் சிந்திப்பதே இல்லை. ஏன், இலக்கியம் குறித்து இன்று அதிகம் சர்ச்சிக்கப்படுவதே இல்லை. அந்த எழுத்தாளர் தொடர்ந்து எழுதுவதும் விவாதிப்பதுமாக இருக்கிறாரே என்று நீங்கள் கேட்டால், அவர் மிகவும் பிற்போக்கான புனைகதையாளர். ஆபத்தான விமர்சகர். எதற்கும் ஓர் உப விளைவு இருக்கிறது. நவீன இலக்கியத்தின் ஓர் உப விளைவுதான் அவரின் புனைவுகளும் விமர்சனங்களும். ஆமாம், ஜெயமோகனைத்தான் சொல்கிறேன்.
நிற்க, ஒருதரம் - வாசித்தவர்கள் மீண்டும் ஒரு தரம் தமிழவனின் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலைப் படித்துவிட்டு வந்தால் இன்னும் பேசலாம்.