அவன் சாவதற்கு
இன்னும் சில நிமிடங்களே இருந்தன
”எப்படித் தெரியும்?”
செத்த பிறகுதான் எழுதுகிறேன்
பல வருடங்களின் பின்னர்தான்
செத்த தோழரும் நானும் சந்தித்தோம்
என்னசெய்வது?
பட்ட சாராயம் அடிப்பதற்குத்தான்
வசதிவாய்ப்பிருந்தது.
குடலைப் பிரட்டும் கசப்பும்
மூக்கைத் திணறச் செய்யும் நாற்றமும்
தொண்டையைத் தாண்டி
உள்ளிறங்கும் வரைத்தான் என்பதை
இதைப் படிக்கும் குடிகார வாசகர்கள்
இலகுவாகப் புரிந்துகொள்வர்.
குடித்த பிறகு என்னவொரு குதுாகலம்
இப்படியொரு தருணத்திற்காக
காத்திருந்ததைப்போலவே பழைய நினைவுகள்
சலசலத்துக் கொட்டத்தொடங்கின
போட்டி போட்டுக்கொண்டு காதலித்ததையும்
அதே வேகத்தில் தோற்றுப்போனதையும்
நினைக்க நினைக்க,
போத்தல்கள் காலியாகத் தொடங்கின
இரு தலைகளின் தண்டவாளத்தில்
எண்ணற்ற பெட்டிகளைக் கோர்த்துக்கொண்டு
நகரத்தொடங்கியது சுமையற்ற ரயில்
போராடக் கிளம்பியது பெருங்கதை.
ஆளுக்கொன்று எனத் தேர்வு செய்தது
காதலிப்பதற்கான நபரை மட்டுமல்ல
இயக்கத்தையும்தான்
என்பது தெரியுமா உங்களுக்கு?
இந்த இடத்தில்தான்,
நட்பைத் துாக்கி வீசிவிட்டு
ஆளையாள் சுடுவதற்குத்
தேடித் திரிந்த சம்பவம் வருகிறது.
வந்ததுதான் தாமதம்,
மனதுக்குள் கிடந்த இயக்க விசுவாசம்
சட்டென்று தலைக்குள் வந்து நின்றது
சுடுவதற்கு கையில்
துப்பாக்கி எதுவுமில்லை
சாராயப் போத்தலொன்றை உடைத்து
ஓரே குத்து
சரிந்து வீழ்ந்தான்.
ஒரு தேசத் துரோகி
செத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கவும்,
செத்துவிட்டதை உறுதி செய்யவும் முடிந்தது
முன்பென்றால், இது சாத்தியமே இல்லை
சுட்ட சத்தம் கேட்பதற்கு முன்பே
ஓடி ஒளிந்திருக்க வேண்டும்.
காலம் எவ்வளவு
மாறிப்போயிருக்கிறது பாருங்கள்
எது எப்படியோ
விடுதலைப் போராட்டத்திற்கான
எனது பங்குப் பணியை
நிறைவேற்றிவிட்டேன்
என்று சொன்ன கையோடு
எந்தச் சலனமுமற்று
நடக்கத் தொடங்கினான்
இவனின் வருகைக்காக
இன்னுமொரு தேசத் துரோகி
காத்துக்கொண்டிருக்கலாம்.
00 தனது சக போராளியும், கணவனுமான “லோன்ஸ் கார்புல் அன்செல்மோ” என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு, 1973ம் ஆண்டு கொல்லப்பட்ட பராகுவே நாட்டுப் பெண் போராளி ”சோலிடட்“( Soledad Barrett Viedma) அவர்களின் நினைவுக்கு.