Poetry Fiction
வெள்ளைத்தாளில் சில சொற்களை ஒருங்கிணைத்து
சிறிய எதிர்ப்பாகத்தான் தொடங்கியது
தனது பாட்டுக்கு மாறிமாறி இணைந்த சொற்கள்
உருவாக்கிய அர்த்தங்கள் பெருகப் பெருக
பெரும் கலகமாக வெடித்தது
முதலில் கவிதைக்குள் தாவியதும்
ஒரேயிடத்தில் சொற்களை அமர்ந்திருக்கவிடாமல்
துரத்தும் ஆர்ப்பாட்டங்கள் அங்கு ஆரம்பிக்கப்பட்டன
எந்தச் சொற்களையும் புறக்கணிக்காமல்
கவிதைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற
கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
சிறுகதைகள் தொடங்கி எழுத்துப் பிரதிகளெங்கும்
வேகமாகப் பரவிக்கொண்டிருந்த கலகம்
நாவல்களைக் கைப்பற்றியபோதுதான்
இலக்கியப் புரட்சியென்று
உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
சகல மொழிகளிலுமுள்ள இலக்கியப் பிரதிகளினுள்ளும்
குண்டு வெடிப்புக்களும் கலவரங்களும் தீவிரமடைந்திருப்பதாக
கற்பனைகளுக்கிடையில் செயற்படும்
மாற்றுக் கருத்துக்களுக்கான தொடர்பு சாதனங்களினூடாக
செய்திகள் சமிக்ஞைகளாக வெளிவந்தவண்ணமிருக்கின்றன.
பல இலட்சம் கதைமனிதர்கள்
ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டிருப்பதாகவும்
பல கோடி கதைமனிதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாகவும்
பல கதை நகரங்கள் கைப்பற்றப்பட்டிருந்தபோதும்
அவை இருந்த இடமே தெரியாமல் அழிந்துவிட்டதாகவும்
நாவல்களுக்குள்ளிருந்து
அண்மையில் கிடைத்த செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
ஏற்கனவே சிறுகதைகளெல்லாம் சரணடைந்துவிட்டன.
கவிதைகளுக்குள் என்ன நடக்கிறதென்ற நிலவரத்தை அறிய
பலமுறை முயற்சி செய்தும்
அங்குள்ள எமது செய்தியாளர்கள் எவரையும்
தொடர்புகொள்ள முடியவில்லை.
தகவல் கிடைத்ததும் உடனடியாக அறியத்தரப்படும்.
இந்தப் புரட்சி
இன்னும் சில நாட்கள் நீடிக்குமானால்
புகைப்படம் மற்றும் அசையும் படங்களின் வெளிகளுக்கும்
பரவலாம் என நமது விமர்சன நிபுணர்கள்
கணித்துச் சொன்னபடியிருக்கின்றனர்
பிந்திக் கிடைத்த செய்திகள் சில.
புத்தகங்கள் எதையும் திறக்கக்கூடாது
மீறித் திறப்பவர்கள் கொல்லப்படவோ
சிறைபிடிக்கப்படவோ கூடும் எனவும்
பிரச்சினை உக்கிரமடைந்து
பிரதி உருவாவதற்கு முன்பிருந்த
கற்பனை நிலைக்குத் தாவியிருப்பதால்
அந்தக் கற்பனைக்குரிய எழுத்தாளர்களினூடாக
வெளியுலகத்திற்கும் ஆபத்து நேரக்கூடம் எனவும்
இலக்கியப் புரட்சி தனது எல்லையை
வெளியுலகிற்குள்ளும்
பரவலாக்கப் பார்க்கிறது எனவும்
கண்டுபிடித்த நமது விமர்சன நிபுணர்கள்
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதை அறியாதவர்களுக்காக
மீண்டும் அந்த அறிவிப்பு எச்சரிக்கையை இங்கே தருகிறோம்
தயவுசெய்து உடனடியாக எழுத்தாளர்களெல்லாம்
தத்தமது கற்பனைகளோடு இருக்கும் உறவுகளை
பகிரங்கமாக துண்டித்துக்கொள்ளுமாறு
வன்மையாக கட்டளையிடுகிறோம்.
என்ன செய்தும் துண்டித்துக்கொள்ள முடியாதவர்கள்
ஆளுக்கொரு தமிழ்க் கவிதையை மனனம் செய்தால்
கற்பனையுடனுள்ள கடினமான தொப்புள்கொடி உறவைக்கூட
இலகுவாக வேரோடு அறுத்துக்கொள்ளலாமென்பதால்
கண்ட நிண்ட இடமெல்லாம்
தற்காப்பிற்காக கவிதைகள் வழங்கப்பட்டபடியிருக்கின்றன.
நானும் கற்பனையுடனுள்ள தொடர்பை
துண்டித்துக்கொண்டதால்
இனி அவர்கள் பேசுவர்.
இவ்வளவு நேரமும் உங்களோடு பேசிக்கொண்டிருந்தானே
அவன்தான் இவை அனைத்திற்கும் காரணம்.
நான் மிக நிம்மதியாக ஒரு சிறுகதைக்குள்ளிருந்தேன்
இவனைப் பாருங்கள் கவிதையே ரொம்ப அழகு
அந்த அதியழகிய அற்புத உலகில் வசித்தவன்
நாவல் என்பது ஒரு உலகம் அல்லவா
அதற்கு இவள் ஒருத்தியே அரசியாக இருந்தாள்
இப்படி எங்களைப்போல செய்தித்தாள்கள் தொடங்கி
பல இடங்களிலிருந்து சிலரைக்கூட்டி வந்தான்
ஆசையூட்டினான்
புரட்சி என்றான்
புனிதப் போராட்டமென்றான்
தியாகம் செய்யாத வாழ்வு சபிக்கப்பட்டதென்றான்
விடுதலையே விமோசனம் என்றான்
கடைசியில் எல்லாமே அழிந்து முடிந்தன
எல்லாத் துயரங்களுக்கும் அவனே காரணம்.
சொந்த இடங்களில்போய்
குடியிருக்க ஏற்பாடுசெய்துதாருங்கள்
அவனைக் கண்டுபிடித்து தண்டனை வழங்குங்கள்
அவனைப் பிடிப்பது இலகுவான காரியமல்ல
கற்பனையென்றும் எழுத்தென்றும்
தனித்தனியே பிரிந்திருக்கும்போது மட்டும்தான்
அவனை அடையாளம் காணமுடியும்
இணைந்திருக்கும்போது சந்தித்தால்
அவன் என்ன சொன்னாலும் நீங்கள் கேட்பீர்கள்.