தோழரும் கவிஞருமான இளங்கவி அருள் அவர்களின் “கிரீன் பப்பாயா” என்ற கவிதை நுாலுக்கு எழுதிய உரை. எதிர்வரும் சென்னைப் புத்தக காட்சிக்கு வெளிவர இருக்கின்றது.
தொடர்ச்சியான மாறுதலுக்குட்பட்டுக் கொண்டிருக்கும் சமூகங்களின் இன்றியமையாத பொருட்களில் கவிதையும் ஒன்று.
மேற்கில், நவீன கவிதை என்பது முதலாளித்துவ உற்பத்தி. அதாவது முதலாளித்துவத்தின் எழுச்சியோடு நிகழ்ந்த மாற்றத்தில் உருவான ஒன்று. கீழைத்தேய நாடுகளில் அப்படியல்ல. அதிலும் குறிப்பாகத் தமிழ் நவீன கவிதை முற்றிலும் புதிய அம்சங்களோடு பிறந்த ஒன்று.
அடிமைப்பட்டிருந்த மக்கள் கூட்டத்தின் சுதேச உணர்ச்சிகளால் வடிவமைக்கப்பட்டிருந்த, கூட்டுக் கற்பனைக்கும், கூட்டுப் பங்கேற்பிற்கும் அவசியமும் தேவையும் இருந்த காலகட்டத்தில் நவீன கவிதையின் சரடுகளை பாரதி முன்வைத்த போதும், அவரால் அதை மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியாதுபோன ஒன்று.
கவிதைக்கு ஒரு சமூகக் கடமை இருக்கிறது என்ற உணர்ச்சிப்பூர்வமான நிலைப்பாட்டை எடுத்து நின்ற காலத்தில், தனிமனித சுதந்திரமோ, விடுதலையோ இரண்டாம் பட்சமான ஒன்றாக ஆகி, தேசச் சுதந்திரம், கூட்டு விடுதலை போன்றவற்றை முக்கியப்படுத்த வேண்டிய நிலையில் இருந்த சமூகத் தேவையை நிறை வேற்றுவதற்கு கவிதையைக்கூட பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.
மனிதச் சுதந்திரம் என்பதற்கு அப்பால், குறித்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கான விடுதலையாகவும், அதுவே தமது பெருமையாகவும் உருவாக்கப்பட்ட கூட்டு உணர்வின் காலகட்டமது.
எனவே, கவிதையும் தனது பழைமையான நிலைப்பாட்டை அதாவது, மக்களின் கூட்டுக் கற்பனையாகவும் அதற்கு அவசியமான மரபுக் கவிதை (பாடல்) அமைப்பிலும் கவனத்திற்கொள்ளப்பட்டது.
இப்படியான ஒரு சூழலில், அருள் பெற்றவர் எனக் கருதப்பட்ட கவிஞர் என்பவர், கண்ணுக்குப் புலப்படாத சந்தைக்குப் பொருட்களை உற்பத்தி செய்யும் தன்நிலையாக மேற்கில் மாற்றமடைகிறான். தமிழில், சமூகத்தேவையை உணர்வெழுச்சியை நிறைவேற்ற நேந்துவிடப்பட்ட பொது மனிதனாக மாற்றமடைகிறார். சமூக உணர்ச்சியை வெளித்தள்ளும் கடமைப்பட்ட சேவகராக பொறுப்பேற்றுக்கொள்கிறார்.
இந்த நிலையில்தான், தமிழ் நவீன கவிதை சமூகத்தின் ஒன்றுதிரண்ட பேருணர்ச்சியின் அடியில் திரண்டிருக்கும் மதத்தன்மையையும், தனிமனித விடுதலை, சுதந்திரம் போன்ற முதலாளித்துவத்தின் உற்பத்திகளையும் இணைத்த நவீன கவிதையாக உருவாகிறது. இது ஒரு கலப்பினம். அதுவே அன்று நவீன கவிதை தமிழில் உருவாகுவதற்கான சூழலாக அமைகிறது.
கவிதையின் அமைப்பில் மாற்றங்கள் நிகழுகின்றன. ஆனால், சமூகப்பொது உணர்வாகத் திரண்டிருந்த மதம்சார்ந்த பெருமைகளும், உணர்வெழுச்சியும் நவீன கவிதைகளினுள்ளே இழை இழையாக பரவத்தொடங்குகின்றன.
ஆயினும் என்ன, நவீன கவிதையின் அமைப்பு மாற்றத்தைக்கூடத் தமிழ் மார்க்சியவாதிகளே முதன்முதலாக எதிர்த்தனர். தொடர்ச்சியாகவும் மூர்க்கமாகவும் எதிர்த்தனர். இந்த எதிர்ப்புகளை மீறி நவீன கவிதையை அதன் சில பகுதிகளையாவது தமிழில் தக்க வைத்துக்கொள்ள அன்றிருந்த வழிமுறை என்பது, மதம் சார்ந்த பொது உணர்வைக் கவிதையினுள் இலேசாகப் படரவிடுவதுதான் என எடுத்துக்கொள்ளவும் விவாதிக்கவும் தேவையிருக்கிறது.
ஆக, நவீன கவிதை என்பது ஒரு முதலாளித்துவ உற்பத்தியாக மேற்கில் உருவானபோதும், தமிழில் அது மதத்தோடு இணைந்ததாகவே வெளிப்பட்டது.
நவீன கவிதை மேற்கில் மதத்திலிருந்து விடுபட்டும், விடுபட வேண்டியதுமான அவசியத்தின் பக்கம் நகரத்தொடங்கியதுடன், அந்நியமாதலின் தேவையும் கவனத்திற்கொண்டு வளரத்தொடங்கியது. ஆனால், தமிழ்ச் சூழலில் ஆரம்பக் கட்டத்தில் மதத்தோடு கூடிய கூட்டுக் கற்பனை மற்றும் கூட்டுத் தேசிய விடுதலை நோக்கிய கூட்டுச் செயற்பாடுகளை அக்கறைகொண்டு வளர்ந்தது/வளர்த்தது. ஆயினும், அதன் தொடர்ச்சி என்பது தமிழிலும் அந்நியமாதலை அக்கறைகொள்ளும் நிலைப்பாடுகளை எடுக்கத் தொடங்கின. ஆனால், மதத்தன்மையிலிருந்து விலகாமல் நகர்ந்தது.
தேசிய விடுதலையின் பின்னரும் மக்களின் கூட்டு உணர்வை அனுசரிக்க வேண்டிய தேவையை வலியுறுத்திச் சிந்திக்க வேண்டும் என்ற கருத்துக்கள் பலமாக இருந்தன. கூட்டுணர்வு என்பது பெரும்பான்மை மக்களின் ஆதரைவக்கொண்ட ஒரு நிலைப்பாட்டிற்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கி சமூகச் செயற்பாடுகள் மேலெழுந்தன. தனிநபர்களின் பிரச்சினைகளைக் கூட்டுணர்வின் அதாவது பொதுத்தன்மையிலிருந்து விலகிய ஒன்றாகவும், அவற்றுக்கான இடம் சமூகத்திற்கு எதிரான ஒன்றாகவும் பேசப்படத் தொடங்கின. ஆயினும் சிற்றிதழ்களின் வழியே மிகக் குறிப்பிட்ட வாசகர்களின் பங்கேற்பிலும் நவீன இலக்கியமும்,நவீன கவிதையும் தன்னை தக்கவைத்துக்கொள்ளக் கூடிய அடிப்படைகளைக் கொண்டிருந்தமையால், அங்கு செயற்பட்ட பார்ப்பனிய மதச் சார்புடையவர்கள் மதத்தன்னையுடன் கூடிய அந்நியமாதலை நவீன கவிதையின் உள்ளடுக்குகளிலும், புறச் செயற்பாடுகளிலும் படரவிட்டனர்.
70 களில் எழுந்த வானம்பாடிகள், மார்க்சியச் சமூகச் செயற்பாட்டாளர்கள், நவீன கவிதையை மக்களின் கூட்டுணர்வின் பக்கம் கலைத்துப்போட்டு, அதுவரை அந்நியமாதலை வரித்துக்கொண்டிருந்த நவீன கவிதையின் போக்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தினர். அதே நேரம், அலங்கார மொழியமைப்பும், இசை இழைந்தோடும் தமிழின் மரபான கவிதைகளின் இழைகளையும் எடுத்துக்கொண்டு கவிதையை மக்கள் மயப்படுத்தினர். இங்கு பெரும்பான்மையினரின் ஆதரவு மட்டுமே கவிதையைத் தீர்மானிக்கும் ஒன்றாக மாறத்தொடங்கியது. வெகுஜன இலக்கியத்தின் அனைத்துக் குறைபாடுகளையும், மக்கள் ஆதரவு என்ற வாசகத்தைப் பயன்படுத்திக்கொண்டு, கவிதை என்பது வளர்ச்சியடைந்து செல்லும் ஒரு கலை என்பதை மக்களும், வாசகர்களும், இலக்கியச் செயற்பாட்டாளர்களும் மறந்துவிடும் எல்லைக்குக் கவிதையை நகர்த்திக்கொண்டு போய்விட்டனர்.
இணைய உலகம் அனைவருக்குமான எழுதும் சுதந்திரத்தை திறந்துவிட்ட போது, கலையாகவும், அது ஒரு விதமான முறையில் மாறுதலுக்கு உட்படக்கூடியது என்ற புறத்திலிருந்து சிந்திக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து எத்தனை லைக்குகள் வாங்குகிறது என்பதைக் கணக்கிடுவதன் மூலம் கவிதைகள் தீர்மானிக்கப்படும் நிலை உருவாகிவிட்டது. மக்கள் விரும்புவதைக் கொடுக்கும் நுகர்வுக் கலாச்சாரம் இலக்கிய வெளியையும் தாக்கிவிட்டது. அதிகம் பேர் விரும்புவது வன்முறையாகக் கூட இருந்தாலும் பரவாயில்லை என்ற சிந்தனையற்ற ஒரு புரிதல் மேலோங்கத் தொடங்கிவிட்டது.
அதிகம் எதை விரும்புகிறார்கள் என்பது தொடங்கி, அதிகம் பேரைக் குறித்த ஒன்றை விரும்பும்படி மாற்றியமைக்கும் முதலாளித்துவ விளம்பரம் மற்றும் பிரச்சார வழிமுறைகளும் இலக்கிய வெளிக்குள் நுழைந்து செல்வாக்கு செலுத்தத் தொடங்கிவிட்டது. சரியானது, வன்முறையற்றது, ஆபத்தற்றது, மற்றமைகளை மதிக்கக் கூடியது, போன்றவற்றைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக அதிகம் பேர் ஆதரவு செய்வது அநீதியாக இருந்தாலும், வன்முறையாக இருந்தாலும் அதுவே சிறந்தது என்ற மனநிலை படைப்பாளிகளிடமும், வாசகர்களிடமும் ஆழமாக நுழைந்துவிட்டது.
வாசகர்கள் வாக்காளர்கள் போலவும், இலக்கியவாதிகள் அதிகாரமிக்க சக்திகள் போலவும் மாறிவிட்டது. இலக்கியச் செயற்பாடு என்பது கட்சிகட்டி செயற்படுவதைப்போன்ற ஒரு சமூகச் சமாச்சாரமாக குறுகிப்போய்விட்டது. அதிகாரத்திலிருப்பவர்கள், அதிக ஆதரவுள்ளவர்கள், சிறிய வகைச் செயற்பாட்டாளர்களை அடித்து விரட்டும் அரசியல் செயற்பாடுகளைப்போல இலக்கிய வெளியும் மாறிப்போயிருக்கிறது. பன்மையான இலக்கிய மற்றும் கவிதைப் போக்குகளை ஏற்கும் மனம் இல்லை. புதிய திசைகளை நோக்கி நகர வேண்டியதும், மாற்றம் அடையக்கூடியதும், வளரக் கூடியதும் என்ற அம்சத்தின்மீதான அக்கறை என்பது வற்றிப்போய்விட்டது. சிந்தனைச் சோம்பேறிகளாக மாறிவிட்டனர். சிந்திக்கவேண்டிய அவசியமில்லை. அதிகமான ஆதரவை எந்தெந்த வழிகளில் திரட்டலாம் என்பதைத் தவிர வேறு சிந்தனைகள் இருப்பதாகத் தெரியவில்லை. நுாறு ஆண்டுகள் பழமையான கவிதையை இன்றும் “நவீன கவிதை” என்று சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில்தான் இருக்கிறோம். அந்தக் கவிதையைக் கடந்துவிடவோ,அல்லது அதிலிருந்து புதிய அம்சங்களினுாடு கவிதையில் மாற்றங்களை உருவாக்கவோ நாம் அதிகக் கவனத்தைச் செலுத்தவில்லை. சிறிதளவு கூட இதற்குக் கவனம் செலுத்துவதாகத் தோன்றவில்லை. இன்றைய தமிழின் நவீன கவிதைகளின் நிலையே அதுதான்.
கவிதை குறித்து இப்படியானதொரு பார்வையை கொண்டிருக்கும் எனக்கு, கவிதை நுால்களுக்கு உரை எழுதுவதென்பது மிகச் சிக்கலான ஒன்றுதான். நவீனம் கடந்த கவிதைகள் பற்றிப் பேசவும், உரையாடவும் முயலும் ஒருவனால், நவீன கவிதைகளுக்கு எழுதுவதென்பது அத்தனை எளிதல்ல. ஆயினும், கவிஞன் என்பதற்கு அப்பால் மிக நேர்மையான, மற்றவர்களை மதிக்கும் அன்பு நிறைந்த தோழர் இளங்கவி அருள் அவர்களின் நுாலுக்கு ஓர் உரையை எழுதுவது எனக்கொன்றும் சங்கடமாகத் தோன்றவில்லை.
இளங்கவி அருள் பல கவிதை நூல்களைத் தந்திருக்கிறார். அநேகமாக அனைத்து நுால்களையும் வாசித்திருக்கிறேன் என்றே கூற வேண்டும். ஒரு சமூகத்தின் தனித்த ஒரு மனிதனாகத் தன்னை உணரும் மனநிலையின் தீவிரமான விமர்சனங்களும், எதிர்ப்புக்களும், இயலாமையின் கூக்குரல்களும், அன்பு இழையோடும் பார்வைகளும், அவற்றைக் கவிதையில் மொழியினுாடாக நம்மோடு உரையாடும் ஒரு மெல்லிய குரல் இவரின் கவிதை ஒவ்வொன்றிலும் மறைந்தும் தோன்றியும் பயணித்துக்கொண்டே இருக்கிறது.
அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், சின்னச்சின்ன சந்தோசங்கள், வெறுப்புக்கள், கோபங்கள் என ஒரு சாதாரணமான மனிதனில் தற்காலிகமான வாழ்வியல் தருணங்கள் அனைத்தையும், தான் விரும்பிய வகையில் பதிவுசெய்யத் தவறவில்லை. இணையவெளி நமக்கு வழங்கியிருக்கும் வரப்பிரசாதங்களைப்போலத் தொந்தரவுகளும் அதிகம். பல்லாயிரம் நண்பர்களைக்கொண்டிருக்கும் வாய்ப்பை ஏற்படுத்திய இணைய வெளியில், எப்படியாவது நாளுக்கொரு மரணச் செய்தியைச் சந்திக்காமல் கடந்து செல்ல முடியாது. அதை உணரும் தருணத்தை மிக எளிமையாகப் பதிவு செய்திருக்கிறார் ஒருகவிதையில்.
“தொடர்ந்து மரணச் செய்திகள்
உனக்கு எங்கே நேரம் ஒதுக்குவது”
இப்படி சின்னச் சின்ன இடைவெளிகளில் எத்தனையோ விசயங்களைப் பதிவு செய்தபடியே செல்கிறது இவரின் கவிதைகள். அப்படியான சில வரிகளை இங்கு உதாரணங்களாகத் தருகிறேன்.
“என் எதிரிகளை
துண்டு துண்டாய்க் கிழிப்பதற்காக
நான் காகங்களுக்கு உணவிடுகிறேன் !
எங்களூரில்
சிகப்பு தொப்பி அணிந்த சேவல்கள்
தன் வயிற்றை நிரப்பிக்கொண்டு
வெகுதூரம் பறக்க முடியாமல்
காலைப்பின்னிக்கொண்டு
நொண்டி அடிக்கின்றன !”
“என்னை
ஏற்றுக் கொள்ளாமல் போனவர்களால்
எந்த நஷ்டமும் கிடையாது
நான் வாய்விட்டுச் சிரிப்பவன் !
கதவுகள் முடப்பட்டிருந்தாலும்
கடந்து செல்லும் வழிகள் தெரியும்”
“நீ நிலவைப் பார்த்து ஊளையிட்டு விட்டு
பழியை நாய்களின் மேல் போட்டவன்“
இப்படி ஏராளமான வரிகளை நாம் சந்திக்கலாம். கவிதைகள் எங்கும் கோபங்களும், எதிர்க் குரல்களும் சிதறிக்கிடக்கின்றன. வாழ்வு என்பது எப்படிப் பன்மையான அம்சங்களால் கலந்து கிடக்கும் ஒன்றோ அதைப்போலவே கவிதைகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கும் இந்த வரிகளில் நாம் கவிதைகளைத் தரிசித்துவிடலாம். வானம்பாடிகளின் சொல் முறையும், நவீன கவிதையின் அந்நியமாதலும் கலந்து கவிதைகளை நிறைத்திருக்கின்றன. இதற்கு முன்பு வெளிவந்த “சொற்கள் பூக்கும் மரம்” என்ற தொகுப்போடு இணைத்து வாசிக்கும்போது இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் போதாமைகளைச் சந்திக்க வேண்டி வருகிறது என்பது உண்மை. ஆனால், இவருடைய அனைத்துத் தொகுப்புக்களையும் ஒரு சேரப்படித்த எவரும், இளங்கவி அருளுடைய கவிதைகளில் இழைந்தோடும் அன்பையும், சமூக அக்கறையால் மேலெழும் கோபங்களையும், அவற்றிலுள்ள நியாயங்களையும் எதிர்கொள்ளாமல் கடந்து சென்றுவிட முடியாது.
நவீன கவிதையின் உள்ளடக்கத்தில் இன்று ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும், அந்தக் கவிதையை எடுத்துரைக்கும் முறையில் உருவாகியிருக்கும் அமைப்பு முறைகளும் இளங்கவி அருளின் இந்தத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மனிதர்களின் மீதான அன்பைத் தனக்குக் கைதேர்ந்த முறைகளினுாடாக வெளிப்படுத்தத் தவறவில்லை. கவிதையின் பன்மையான போக்குகளை ஏற்கும் எவருக்கும் இளங்கவி அருளின் கவிதைகளோடு உறவாடுவதென்பது சிக்கலான ஒன்றல்ல. கவிதை உருவாக்கத்தின் தொழில் நுட்பங்கள், எடுத்துரைப்பின் பன்மையான சாத்தியங்கள், உள்ளடக்கத்தின் பன்மையான கவனக் குவிப்புகள் என்ற அம்சங்களைத்தாண்டி, சாதாரண மக்களுக்கும் ஒரு வாழ்விருக்கிறது. அது அவர்களின் புரிதலினடியாக உருவாகும் ஒன்று. அந்த வாழ்விலிருந்து பெற்றவற்றை, இன்பங்கள், வெறுப்புக்கள், அன்புசார் எதிர்பார்ப்புகள், சமூகம் மீதான அவர்களின் விமர்சனங்கள் என அனைத்தும் கவனிக்கப்பட வேண்டும்.
அவற்றைத் தமது கவிதைகளினுாடாக வெளிப்படுத்தும் உரிமையுண்டு. அவற்றையும் காதுகொடுத்து நின்று கேட்க வேண்டும் என நம்பும் அனைவரும் இளங்கவி அருள் அவர்களுடைய கவிதைகளிலும் கண்டுகொள்ளும் வாய்ப்பு உள்ளது. அன்பும், கிடைத்த வாழ்வை எப்படிக் கடந்து முடிப்பது என்ற அவாவில் ஏற்படும் அனைத்துச் சிக்கல்களும், சமூகப் பார்வைகளும் இவருடைய கவிதைகளில் பரவலாகப் பதிந்து கிடக்கின்றன. கவிதையை ஒரு கலை என்றும், தீர்க்கமான அரசியல் செயற்பாட்டுடன் கூடிய ஒன்று மட்டுமே எனக் கருதும் கருத்துநிலை சார்ந்தவர்களுக்கு இளங்கவி அருளின் கவிதைகளிடம் எந்த வேலையுமில்லை.
ஆனால், கவிதையைக் கலையாகவும், சாதாரண மக்களின் உணர்வு சார்ந்ததாகவும் தனித்தனியே பிரிக்காமல் இரண்டையும் இணைத்துப் புரிந்துகொள்ளும் திசைகளைப் பற்றிய சிந்தனைமுறையின் தேவை இன்று அதிகமுள்ளது என்பதையே நமக்கு நவீன கவிதை வலிமையாக உணர்த்தி நிற்கின்றன.