அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிஜோர்க் அவர்களின் உடோப்பியா என்ற ஆல்பத்திலிருக்கிறது இந்தப் பாடல். இன்றைய பரிசோதனை இசையின் முக்கியமான வடிவம் இது. இசையின் ஒழுங்கமைவுகளை சப்தங்காளல் தொந்தரவு செய்யும் அதே நேரம், புதிய அனுபவவெளியை நோக்கியும் அழைத்துச் செல்கிறது. தமிழில் கலக இசை என்பது பாடல் வரிகளால் அறைகூவல் விடுவதும், குரலால் கர்ஜனை செய்வதும் என்றாகிவிட்டது.
சப்தங்களாலாலும், இசைக்கருவிகளாலும் அவற்றை ஒழுங்கமைக்கும் அமைப்பு முறையாலும் நிகழ்த்தி, மனதின் உணர்வுகளோடு உரையாடுவதல்ல என்றாகிவிட்டது. மேல்தட்டு மக்களின் பொழுதுபோக்கு நேரத்தை குஷிப்படுத்துவதற்கும், தொழிலாளர்களின் களைப்பை நீக்குவதற்காகச் சொல்லி, அவர்களின் அரசியல் சார் உணர்வுகளை அமைதிப்படுத்தும் இசைகளும் கோலோச்சிய காலங்களின் மீட்சியாகவே இன்றும் இசையை புரிந்துகொள்ளும் நிலையே தொடர்கிறது. ஆனால், இதற்கு மாற்றமாக, இசையினது ஒழுங்கமைவையும், பாடல்வரிகளில் எதிர்ப்புணர்வினையும் ஏற்படுத்தும் இசை உலகில் உருவாகி மேலும் மேலும் மாறிக்கொண்டிருக்கின்றன.
நேர்த்தியான, இன்பம் தரக்கூடிய சப்தங்களையும், அதிகம் பழக்கப்பட்ட சப்த அலைவுகளால் மீண்டும் மீண்டும் உருவாக்கும் இசை என்பது பொதுமனதின் இசைக்கான பரப்புக்களை களையைப்போன்று ஆக்கிரமித்துவிட்டது. இந்த ஒழுங்கையும், பழக்கப்பட்டுப்போன மனநிலையையும் அசௌகரியப்படுத்துவதோடு, ஒழுங்கின்மையான இசைத்தீற்றுக்களையும், இசையற்றது என கருதப்பட்டுவந்த சப்பங்களையும் அதன் அலைவுகளையும்,இசைமனதின் பரப்புக்களில் பிய்த்து எறிந்து விடுகிறது. அந்தவகை பரிசோதனை இசையை அதிகமும் அக்கரைகொண்டு நிகழ்த்திக்கொண்டிருப்பவர்கள் அவான்காட் செயல்பாட்டாளர்கள்தான்.
இங்கு நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பாடல் பிஜோர்க் அவர்களின் மெல்லிசை. தமிழ் இசைக்கு பழக்கமற்ற மெல்லிசை வகையினம் இது. குறுக்கும் நெடுக்குமாக அலையும் இசைத்தீற்றுக்களால் அமைந்தது. ஒரு புறம் ஒரு ஒழுங்குபோல் தோன்றும் தீற்றுக்களின் இடையிடையே பொருத்தமற்றதுபோல் தோன்றும் சிதறிப்பரவும் இசைத்தீற்றுக்கள் நிறைந்தது. குரல், இசைக்கருவிகளின் அலைவுகள் பாடலின் உள்ளமைப்புக்களில் சிதறிக்கொண்டிருப்பதும், திடீர் திடீரென அலைவுகளின் அமைப்பை மாற்றிக்கொள்வதுமாக இசையின் புதிய அனுபவங்களைக் கிளர்த்துகின்றன. கேட்டுப்பாடுங்கள்.
தொடர்ந்து, இந்தவகை பரிசோதனை சார்ந்த இன்றைய இசையை உங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறேன். தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும் இதில் பாரிய பங்களிப்பைச் செலுத்துகிறது. இன்று இசை கொம்போசராக இருப்பது என்பது, இசையை மனதின் கற்பனைாயக கொண்டிருப்பவர் மாத்திரமாக இருக்க முடியாது. அந்த இசையில் பங்கேற்றும் அனைத்துச் செயல்பாட்டோடும் தொடர்புடைய தொழில்நுட்ப அறிவையும், சமூக அரசியலின் மாற்றுப்பார்வைகளையும் அறிந்த ஒருவராக இருக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கிவிட்டிருக்கிறது.
2010ம் ஆண்டுக்குப் பின்ன தமிழ் திரையிசையில் ஏதும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறதா? அவை எந்தவகை மாற்றங்கள் என்பதை நோக்கி சிந்திக்கும் தோழர் மிஹாத் அவர்களுடனான கடந்த ஒருவாரமாக உரையாடலில் இருக்கிறேன். அவரின் அவதானங்கள் மிக முக்கியமானது. அவை குறித்து விரிவாக எழுத இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
எனது இளவயதில் கேட்ட இசையோடு அதிக ஈடுபாடும், பழக்கமும் கொண்டிருந்த நான் எப்படி அதைக் கடந்து அனைத்து இசைகளின் பக்கமும் மனதை திறந்துவிட்டேன் என்பது தெரியவில்லை. ஆனால், இசை உணர்வுகளோடும், சிந்தனையோடும் உரையாடும் புதியவழிகளை ஆழமாக தழுவிக்கொள்ளும்படி மனம் தனது பரப்புக்களை சுதந்திரமாக திறந்துவிட்டிருக்கிறது. எந்தக் காலத்தின் இசை, எந்த நிலப்பரப்பின் இசை,எந்தக் கருத்தியலின் அடியான இசை என எதுவாக இருந்தாலும், அவற்றுக்கிடையேயான தொடர்பும், வேறுபாடும் அவசியமானது. அவற்றை அடையாளம் காணும் வகையில் உணர்வுப் பரப்பும், புரிதலும், சப்தங்களின் அலைவுகளும் நுழையும் வகையில் நமது மனதை தயார்படுத்துவதென்பதுதான் எந்தக் கலையோடும் நெருங்கி உறவாட அவசியம் என நம்புகிறேன்.
இனி இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள். உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும், கேள்விகளையும் முன்வையுங்கள்.