அன்பின் நுாலகர் அவர்களுக்கு,
உங்கள் அழைப்பிதழ் கிடைத்தது. அனுப்பியமைக்கு ஆழமான அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஸ்தாபக தினத்தை முன்னிட்டு இப்படியானதொரு சிறந்த நிகழ்வை நடத்துவது வாழ்த்தப்பட வேண்டியதே. முதலில் அதற்கெனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இந்தப் பிராந்தியத்தில் ஒரு பல்கலைக் கழகம் இருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்துகொள்வதற்கு இது வாய்ப்பைத் தருகிறது. அதேநேரம், பல்கலைக் கழகத்தினுள் என்னதான் நடக்கிறது என்பதை, மக்கள் அறிந்துகொள்ளவும் உதவும். இப்படி பொதுமக்களும் பங்குகொள்ளும் நிகழ்வொன்று நடைபெறுவது, பல்கலைக் கழக வரலாற்றில் முதல் முறை என்று நினைக்கிறேன்.
பல்கலைக் கழகம் என்றால் அது குறித்து உலகளவில் இருக்கும் அபிப்பிராயமும்,புரிதலும் மிகவும் பெறுமதியானது. அங்குதான் சமூகத்திற்குத் தேவையான அறிஞர்கள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது. இந்த நம்பிக்கைக்குத் தகுதியான இடத்தில் தென்கிழக்கு பல்கலைக் கழகம் இருக்கிறதா? அல்லது அதை நோக்கி தீவிரமாகப் பயணிக்கிறதா என்ற கேள்விகள் எழுவது தவறான ஒன்றல்ல என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள்.
அந்த வகையில்தான், பல்கலைக் கழகத்தின் ஸ்தாபக தினத்தை ஒட்டி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலைக் கவனித்தேன். அந்த நிகழ்ச்சி நிரல் கடுமையான ஏமாற்றத்தை தந்தது. நான்கு பிரதான நிகழ்வுகள் பற்றிய அழைப்பிதழ்,தென்கிழக்கு பல்கலைக் கழக நுாலகர் அவர்களால் அனுப்பப்பட்டிருந்தது.
அந்த நான்கு நிகழ்வுகளிலும் பிரதானமான உரைகளைத் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எந்தவொரு பேராசிரியர்களோ, விரிவுரையாளர்களோ நிகழ்த்தவில்லை. விதிவிலக்காகப் பேரா.கணேசராஜா மட்டுமே துருத்திக்கொண்டு முன்னுக்குத் தெரிந்தார்.
Book Talks எனத் தலைப்பிடப்பட்ட இந்தப் பிரதான அழைப்பிதழில், நான்கு நுால்களைப் பற்றிக் கதைக்கப் போகிறார்கள் என்பது மட்டும் தெரிந்தது. அந்த நுால்களை எந்தக் கோணத்திலிருந்து பேசப்போகின்றனர் என்ற தலைப்பு எதுவுமில்லாமல் இருந்தது ஆச்சரியத்தைத் தந்தது. அதையும் விட்டுவிடலாம். ஆயினும், குறித்த நான்கு புத்தகங்களைப் பற்றிய பிரதான உரைகள் எதுவும் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களினாலோ, விரிவுரையாளர்களினாலோ நிகழ்த்தப்படவில்லை என்பதை வைத்தே, தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் அறிவுசார் நிலையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். வெறுமனே புத்தகங்கள் குறித்த அறிமுகங்களை (வாழ்த்துரை, வரவேற்புரை,நன்றியுரைகள் என்பன)மாத்திரமே தென்கிழக்கு பல்கலைக் கழக புத்திஜீவிகள் நிகழ்த்துகிறார்கள்.
தேர்வு செய்த நான்கு புத்தகங்களும் இவைதான்.
1. "Seven Moons of Maali Almeida", By Shehan Karunathilake அவர்களுடையது. இது கடந்த ஆண்டின் புக்கர் விருதைப்பெற்ற புத்தகம்.
2. "Exploring Sri Lankan Muslims: Selected Writings of MM.Mahroof" Edited by Prof. M.L.A. Cader.
3. "சீறாப்புராணத்தில் உவமைக்கு ஓர் உமர்”
4. "சுவாமி விபுலானந்த அடிகளாரின் இலக்கியப் பணிகள்”
இந்த நான்கு புத்தக உரைகளிலும், 1உம், 2உம், ஓரளவு அவசியமானதுதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆயினும், எந்தக் கோணத்தில் இந்தப் புத்தகங்கள் குறித்த உரை அமைந்திருக்கப்போகிறது என்று தலைப்பிடப்படவில்லை. எழுந்த மானமாகப் பேசப்போகிறார்கள் என்பது புரிகிறது. ஒரு பல்கலைக் கழகத்தில் நிகழ்த்தப்படும் உரை என்னும்போது, அதைக் கருத்தியல் சார்ந்த ஒரு கோணத்திலிருந்து ஆய்வாக முன்வைப்பார்கள் என்றுதானே எதிர்பார்க்க முடியும். அப்படி எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமாகவே அமையும்.
17ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த உமறுப்புலவரின் சீறாப்புராணத்தை தொடர்புப்படுத்தி இன்றுவரை ஏகப்பட்ட ஆய்வுகளும், நுால்களும், உரைகளும் நடந்தேறிவிட்டன. அரைத்த மாவையே மீண்டும் அரைக்கும் பழமையான வழிமுறை இது.
19ம் நூற்றாண்டில் தொடங்கி 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முன்பே மரணித்துவிட்ட விபுலானந்தரின் எழுத்துப் பணி தொடர்பானது அடுத்த உரை. விபுலானந்தரைப் பற்றியும் ஏகப்பட்ட ஆய்வுகள், புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. இவர்களின் எழுத்துக்களை எந்தக் கோணத்தில் முன்வைக்கப்போகிறார்கள் என்ற தகவல்களும் தலைப்புக்களில் இல்லை. வெறுமனே இவர்களைப் பற்றிய தகவல்களை மாத்திரம் சேகரித்துச் சொல்லப்போகிறார்களோ என்று தோன்றுகிறது. டேட்டா சேகரிப்பாளர்களின் பணியைவிட வேறு ஒன்றும் இவற்றில் இருக்காது. ஆக, தென்கிழக்கு பல்கலைக் கழகமும், அதிலுள்ள கலாநிதிகள், பேராசிரியர்களின் அறிதல் நிலை எத்தனை பின்தங்கியது என்பதை இவை மேலோட்டமாக வெளிப்படுத்தினாலும். இந்தப் பின்தங்கிய செயல்முறைகளில்கூட பங்கேற்கும் ஆற்றலற்றவர்களாக இருப்பதைத் தெளிவாக்குகிறது.
சுமார் 30 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில், அவர்களினாலேயே நடத்தப்படும் ஒரு நிகழ்வில், அதுவும் புத்தகம் குறித்த உரைகளில் கூட பங்குபற்றும் ஆற்றலற்றவர்களாக இருப்பது அவமானத்திற்குரியது. புத்தக உரைகளை நிகழ்த்துவதற்குக் கூட வேறெங்கோ இருந்து, கூலிக்கு ஆட்களைப் பிடிக்கும் நிலையில்தான் தென்கிழக்கு பல்கலைக் கழகம் இருக்கிறது. பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களைவிடச் சற்றும் அப்டேற் அற்றவர்கள். விரிவான வாசிப்பும், உரையாடல் திறனுமற்றவர்கள். இப்படித்தான் இதன் வளர்ச்சியைப் பார்க்க வேண்டியுள்ளது.
சுயமாக,பேராசிரியர்கள், கலாநிதிகள், விரிவுரையாளர்கள் எனத் தங்கள் பல்கலைக் கழகத்திலுள்ளவர்களால் மாத்திரமே ஒரு நிகழ்வை நடத்தும் துணிச்சலும், ஆற்றலும் எப்போது முகிழ்ந்து வருகிறதோ அன்றுதான் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தை ஓரளவு கரிசனைகொள்ள முடியும். அது மட்டுமன்றி, உலகளவில் தற்காலத்தில் வளர்ந்துவரும் கருத்தியல்கள் பற்றிய அறிதல்களையும் இந்தப் பல்கலைக் கழகத்திலுள்ள ஆசாமிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களின் தெரிவும், விருப்பங்களும் தனிப்பட்ட முறையில் ஏதோவொரு கருத்தியல் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால், மாணவர்களுக்கு அனைத்துக் கருத்தியல் சார்ந்த அறிவையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதானே சரியான நடைமுறை. பல்கலைக் கழகம் என்பது என்ன, பழையசாமான்களை விற்கும் “நாடான் கடை” மட்டுமாக சுருங்கிக்கொள்ள முடியுமா என்ன?
தமது பெயர்களுக்கு முன்னால் பேராசிரியர்கள், கலாநிதிகள் எனப்போட்டுக் கொள்வதினூடாக அறிஞர்களாக ஆக்கிவிட முடியாது. இவற்றை வாங்குவது மிக எளிதும் கூட. உங்கள் அறிதல், பன்முக வாசிப்பு, கருத்தியல் சார்ந்த அப்டேற் என வளர வேண்டிய பகுதி மிஸ்ஸிங். இதனைத் தென்கிழக்கு பல்கலைக் கழகம் கவனத்திற்கொள்ளும் என நம்பலாம். அண்மைக்காலங்களில் ஓதப்பள்ளிக்கூடங்கள் கூட வளர்ச்சியடைந்துவிட்டன. தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு என்னதான் நடந்துவிட்டது? இதற்கான காரணங்கள்தான் என்ன? இந்த தென்கிழக்கு பல்கலைக் கழக பேராசிரியர்கள், கலாநிதிகள், விரிவுரையாளர்கள் போன்றவர்களோடு ஒரு திறந்த அதுவும் ஆழமான உரையாடலைச் செய்ய வேண்டும். அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். அவர்கள் தயாராகுவார்களா? ஆமைபோல் தலையை உள்ளிழுத்துக்கொண்டு சுருங்கிப்போயுள்ள ஒரு பல்கலைக் கழகத்தை, ரகசியமாகவே (மக்களுடனான உரையாடலற்ற) அனைத்துச் செயல்பாடுகளையும் நடத்திக்கொண்டிருக்கின்ற ஒரு பல்கலைக் கழகம் விரிவான உரையாடல்களை மேற்கொள்ளாமல் வளர்ச்சியை நோக்கிச் செல்லுதல் சாத்தியமல்ல.
பெயருக்கு முன் ஒருபட்டம், வாழ்வாதாரத்திற்கான சம்பளம், எனக் குறுகிய எல்லைக்குள் எத்தனை காலம்தான் மறைந்து வாழ முடியும்? இவர்கள் எப்போது தங்களை வளர்த்துக்கொள்ளப் போகிறார்கள்? தங்களின் மேலதிக ஈகோக்களை கைவிட்டு சுதந்திரமான உரையாடலுக்கு எப்போது தயாராகப் போகின்றனர்? இவை காலாகாலத்திற்குமான கேள்விகளாக மட்டுமே இருந்துவிடப்போகிறதா? தொடர்ந்தும் இவற்றை விமர்சித்துக்கொண்டும், கவனஈர்பைச் செய்து கொண்டும்தான் இருக்க வேண்டிய நிலை தொடரப்போகிறதா? ஒன்றுமே புரியல.