பிழையான தகவல்களும் விவாதங்களும் அறிவுசார் பொறுப்புக் கூறலும்
10.06.1946 என்பது, அக்கரைப்பற்று தேசியப் பாடசாலை ஆரம்பித்த தினமா?
”கேள்விகள், சிக்கல்கள், தரவுகள் கொண்ட ஆய்வுத் தொடரின் ஒரு பகுதி”
0000000000000000000
பவள விழாக் கொண்டாடப்பட்ட தேசியப் பாடசாலையின் “ஆரம்பத் தினம்” பற்றிய பதிவுகள் வேறு எங்கும் இல்லையா தோழர்?
(இதற்கு முன்பு ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதைப் படித்துவிட்டு ஒருவர் கேட்டிருந்த கேள்விதான் இது. இந்தக் கேள்வியைக் கேட்பதற்குக் காரணமாக இருந்த பதிவைக் கீழே இணைத்திருக்கிறேன்)
இப்படியொரு கேள்வி உள்பெட்டியில் வந்திருக்கிறது. உண்மையில் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அப்படி இருந்திருந்தால் வரலாற்றை எழுதுபவர்கள் அதைக் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால், பாடசாலையின் ஆரம்பம் குறித்த பதிவுகள் கட்டாயம் இருந்திருக்க வேண்டிய ஒரு இடம் இருக்கிறது. அந்த இடம் எது? அந்த இடத்தில் என்னதான் எழுதப்பட்டுள்ளது? என்பதைச் சற்று அலசுவோம்.
தேசியப் பாடசாலையின் பவுண்டர்களில் ஒருவராக நம்பப்படும் மர்ஹூம் எம்.ஐ.எம்.முகைதீன் என்பவர் எழுதி வைத்திருப்பதாகக் கூறப்படும் தகவல்களைத்தான் இன்றுவரை ஆதார மூலப்படிவமாகக் கருதுகின்றனர். அதிலிருந்து தகவல்களை எடுத்துத்தான் பாடசாலையின் வரலாறு தொடர்பான கட்டுரைகளை எழுதுகின்றனர். ஆயினும், உண்மையில் பாடசாலையின் ஆரம்பம் தொடர்பாக பதிவுகள் இருக்க வேண்டிய ஒரு இடம் பாடசாலையின் log book தான்.
ஆக. தேசியப் பாடசாலையின் log bookயைப் பார்வையிட வேண்டியது மிக அவசியம் என நினைக்கிறேன். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது கட்டாயம். அப்படியானால், தேசியப் பாடசாலையின் log book இல் முதலாவது பதிவாக, பாடசாலை உருவானதாக நம்பப்படும் திகதியைத் தலைப்பாகப் போட்டு ஒரு பதிவு உள்ளது. 10.06.46 என்று உள்ளது அந்தத் திகதி. அந்தத் திகதியில் உள்ள பதிவை எழுதியிருப்பவர் தலைமையாசிரியர் எஸ்.ஏ.ஹூஸைன் அவர்கள்.
உண்மையில், பாடசாலை ஆரம்பித்த தினமாக அதன் பவுண்டர்களில் ஒருவரான எம்.ஐ.எம்.முகைதீன் விதானையால் எழுதப்பட்ட தகவலின் படி, 10.06.46 அன்று பிற்பகல் 4 மணிக்குத்தான் பாடசாலை திறக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. எனவே, குறித்த தினத்தில் log book இல் அந்தப் பதிவை எழுதுவதற்கு வாய்ப்புகள் இல்லையென ஊகிக்கலாம். சில வேளை, அன்றைய தினம் பாடசாலை திறக்கப்படுவது ஏலவே தெரிந்திருப்பதால் குறித்த தினத்திலேயே குறிப்பை எழுதியிருக்கலாம் அதற்கு வாய்ப்பு உண்டு என லொஜிக்கலான ஒரு கேள்வியை யாரும் எழுப்ப வாய்ப்புண்டு. ஆனால், இரண்டு ஆசிரியர்களைக் கூட்டிக்கொண்டு, தருமரத்தினம் வன்னியனார் அன்றைய தினத்திலேயே வந்திருப்பதாகப் பவுண்டர் எம்.ஐ.எம்.முகைதீன் விதானையாரின் தகவல் இருப்பதால், அன்றைய தினம் பாடசாலை திறப்பு விழாவுக்கு முன்பு log book இல் குறிப்பை எழுத வாய்ப்பில்லை. எனவே, உங்களில் சிலர் ஊகிக்கக்கூடிய லொஜிக்கலான கேள்வி பிரயோசனமற்றது.
அதே நேரம், பாடசாலை திறந்த(ஆரம்பித்த) தினமும், log book இல் முதலாவது குறிப்பு எழுதிய தினமும் ஒன்றாக இருப்பதால், குறைந்த பட்சம், அந்த log book இல் அதே தினத்தில் முதலாவதாக எழுதப்பட்ட குறிப்பில், பாடசாலையின் ஆரம்பம் பற்றிய ஒரு செய்தி நிச்சயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் அந்தக் குறிப்பில் எதுவும் அப்படிப் பதிவு செய்யப்படவில்லை. பாடசாலை ஆரம்பித்த தினத்திலேயே பாடசாலையின் log புக் இல் எழுதப்பட்ட முதலாவது குறிப்பிலேயே - பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட தினம்குறித்து தகவலும், அந்த பாடசாலையைத் திறந்தவரின் குறிப்புக்களும் ஏன் பதிவு செய்யப்படவில்லை என்பது முக்கியமான ஒரு கேள்விதான் இல்லையா?
பாடசாலையின் log book இல் அதிபர்களை தவிர, வேறு எவரும் குறிப்புக்களை எழுத முடியாது என்றும் சிலர் கூறக்கூடும். ஆனால், அதிபர்கள் தவிர்ந்த வேறு நபர்களினதும், அந்தப் பாடசாலையை விசிட் பண்ணியவர்களினதும் பதிவுகளும் உண்டு. ஆனால், பாடசாலையை கொண்டுவந்ததாகச் சொல்லப்படும் தருமரத்தினம் வன்னியனாரினதோ, அல்லது நாடா வெட்டிப் பாடசாலையை திறந்ததாகச் சொல்லப்படும் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களினதோ குறிப்புகள் அந்த log book இல் இல்லை.
பாடசாலை ஆரம்பித்த தினமாகக் கருதப்படும் 10.06.46 இல் பாடசாலையின் log book இல் எழுதப்பட்டதாகக் கருதப்படும் அந்தக் குறிப்பை ஆழமாகக் கவனித்தால், உண்மையில் அந்தக் குறிப்பின் மேலே போடப்பட்டுள்ள திகதியான 10.06.46இல், அந்தக் குறிப்பு எழுதப்பட்டதாகக் கருத இடந்தரவில்லை. அந்தத் திகதியிலிருந்து சில நாட்களின் பின் எழுதப்பட்டதாகவே கருத இடந்தருகிறது.
அப்படிக் கருத இடந்தருவதற்கு அந்தக் குறிப்பே சாட்சியமாக இருக்கிறது. அந்தக் குறிப்பு என்ன சொல்கிறது என்றால் (log book இல் உள்ள குறிப்பைப் புகைப்படம் எடுக்கவோ, வெளியில் போட்டோப் பிரதி எடுக்கவோ அனுமதியில்லை. ஆழமாகக் கவனித்து மனனம் செய்வது மட்டுமே சாத்தியம்.)
அந்தக் குறிப்பில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை இப்போது தருகிறேன்.
“திரு. சோமசுந்தரம் 12.6. 1946 முதல் இந்த அரசு ஆண்கள் பாடசாலையில் உதவி ஆசிரியராக (பணியில்) சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இன்று வருகை தந்துள்ளார். 13 ஆம் திகதி வியாழக்கிழமையும் 14 ஆம் திகதி வெள்ளிக் கிழமையும் அரசரின் பிறந்த தினம் மற்றும் பொசன் காரணமாக விடுமுறை நாட்களாகும்.”
இது ஆங்கிலத்தில் உள்ளது அதையும் கீழே தருகிறேன்.
10.6.46.
10th June 1946. Mr. Somasundaram asst. Tr. of the Govt J.B.S is attached to this school from 12.6.1946. He is present today …1946. Thursday 13th and Friday 14th inst. are holidays on account of King's Birthday & Poson.
(Signed)
SA Hussain
Head Master
BT/Akkaraipattu Govt School.
அதாவது, திரு. சோமசுந்தரம் என்பவர் உதவியாசிரியராக 12.06.46 இல் இருந்து இணைகிறார். ஆனால், அந்தப் பதவியேற்பை அதிபர் அவர்கள், சில நாட்களுக்குப் பின்னர்தான் ஏற்றுக்கொள்ள முடிகிறது. அதற்கான காரணமாக, அரசரின் பிறந்த தினம், மற்றும் பொசன் காரணமாக விடுமுறை தினங்களாக 13ம் திகதி வியாழக் கிழமையும், 14ம் திகதி வெள்ளிக் கிழமையும் இருந்ததாகக் கூறுகிறது. இலங்கையில் 46ம் ஆண்டு கலண்டரைப் பார்த்தால், 15ம் திகதி பொசன் என்பதை உறுதிப்படுத்தவும் முடிகிறது. கவனமாகவும், அன்றைய (1946) பதிவுகளை வாசிக்கும் மெதடொலோஜியில் வாசித்தால் இப்படியே பொருள் வரும்.
ஆயினும், Log book இல் உள்ளதைச் சாதாரணமாக வாசித்தால் கூட, 12.04.46ம் திகதி நடந்த ஒரு சம்பவத்தைப் பதிவு செய்ததைப் போல் உள்ளது. அப்படித்தான் இருந்ததாகக் கருதினாலும், குறித்த குறிப்பு எழுதப்பட்ட தினமாக அதிபரால் குறிப்பிட்டிருக்க வேண்டிய திகதி அதாவது தலைப்பு 12.04.46 என்றே குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவை எதற்கும் தொடர்பற்ற விதத்தில் 10.06.46 என்று தலைப்பிடப்பட்டிருப்பது பொருத்தமற்றது. சந்தேகத்திற்குரியது.
10.06.46 அன்று பாடசாலையைத் திறப்பதற்கு வருகைதந்திருந்தவர்களில் ஒருவரான அப்போதைய MSC (Member of State Council) தருமரத்தினம் வன்னியனாருடன் வந்த இரண்டு ஆசிரியர்களில் ஒருவரான எஸ்.ஏ.ஹூஸைன் அவர்களே, 10.06.46 என்று தலைப்பிட்டு, அந்தப் பாடசாலையின் Log book இந்தக் குறிப்பை எழுதியிருக்கிறார் என்கிறது தகவல். இதே தினத்தில், அதாவது 10.06.46 அன்று பின்னேரம் 4 மணிக்கே பாடசாலை திறக்கப்பட்டது என்கிறது, இதன் பவுண்டர்களில் ஒருவரான எம்.ஐ.எம். முகைதீன் என்பவரின் தகவல் குறிப்பு. 4 மணிக்குத் திறப்புவிழா ஆரம்பமானால், சில மணிநேரங்கள் திறப்புவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்றிருந்தால், அன்று இரவில்தான் Log book இல் அந்தக் குறிப்பு எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆக, அந்தப் பாடசாலையின் முக்கிய நிகழ்வே அதன் ஆரம்பம்தான். எனவே, அன்றைய தினத்தில் ஒரு குறிப்பை எழுதுவதாக இருந்தால் நிச்சயம், பாடசாலை இன்றுதான் ஆரம்பிக்கப்பட்டது என்றும், அதை ஆரம்பித்து வைத்தவர்கள் இன்னார் இன்னார்தான் என்றும் நிச்சயம் பதிவு செய்யப்பட்டிருக்கும். கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அது இந்தக் குறிப்பில் இல்லை.
முதலாவது அதிபராகக் கருதப்படும் எஸ்.ஏ.ஹூஸையின் அவர்கள், Log book இல் எழுதியிருக்கும் குறிப்பில், சில இலக்கங்களையும் தனது கையெழுத்தில் எழுதியிருக்கிறார். ஆண்டு மற்றும் திகதி போன்றவை அவரின் கையெழுத்தில் உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது. அப்படியானால், அந்தக் குறிப்பு எப்போது எழுதப்பட்டது என்று தலைப்பிட்டிருக்கும் ஆண்டையும் திகதியையும், அதிபரே எழுதியிருக்க வேண்டும். தலைப்பில் உள்ள ஆண்டு மற்றும் திகதியை எழுதிய எழுத்து முறை என்பது, இலக்கங்களை நேராக எழுதக்கூடிய ஒருவரின் எழுத்துமுறைபோல் இருக்கிறது. ஆனால், தலைப்பில் உள்ள திகதி மற்றும் ஆண்டைவிட்டு விட்டு, அதன் கீழே எழுதப்பட்டிருக்கும் குறிப்பிலும் ஆண்டு மற்றும் திகதிகளை எழுதியிருக்கிறார். அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இலக்கங்களின் எழுத்துமுறை, சாய்வாக இலக்கங்களை எழுதக்கூடியவர்களின் எழுத்து முறையில் அமைந்திருக்கிறது. எழுதப்பட்டிருக்கும் குறிப்பு வேறொருவருடையது போலவும், அதற்குத் தலைப்பாக இடப்பட்டுள்ள ஆண்டு மற்றும் திகதியினை எழுதியவர் வேறொருவர் போலவும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.
இத்தனை ஆழமாகவும், விரிவாகவும் ஏன் எழுதுகிறேன் என்றால், அக்கரைப்பற்று தேசியப் பாடசாலை ஆரம்பித்த தினமாக 10.06.46 ஆண்டு, இந்த மாதம், இந்த நாள் என்ற ஒரு தவறான விசயத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு வரலாறு எழுதப்பட்டுள்ளது என்பதை நிரூபிப்பதற்கான முன்னோட்டமாகத்தான் இவற்றை ஆராய்கிறேன். நான் ஆய்வு செய்து வைத்திருக்கும் முக்கியமான தகவல்களை வெளிப்படுத்துவதற்கு முன்பு, இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், அதிலுள்ள சிக்கல்கள் அறியப்பட வேண்டும் என்பதற்காகவுமே இதை எழுதுகிறேன். இதற்கு முன்பு எழுதிய ஒரு பதிவை இணைப்பாக இங்கே சேர்த்துவிடுகிறேன்.
00000000000000000000000000000000000000000000000
அக்கரைப்பற்று சென்றல் கொலேஜின் பவள விழா கடந்த 2021.06.10ம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கொண்டாடப்பட்டது. இது குத்துமதிப்பாகக் கணிப்பிட்ட ஒரு பவள விழாதான் என்று நான் பகிரங்கமாகவே அறிவித்திருந்தேன். அப்படி அறிவித்தால், பாடசாலையின் ஆரம்பம் குறித்துச் சொல்லப்படும் ஆண்டு தொடர்பான சிக்கல்களைத் தெளிவுபடுத்த வேண்டியது எனது கடமை.
இன்று ஊரில் உள்ள அனேகம் பேர், இப்பாடசாலையின் ஆரம்பம் குறித்து பொதுவான ஒரு தினத்தை நம்பிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். எனவே, அதன் சிக்கலான நம்பிக்கையை நான் கவனஈர்ப்பாக முன்வைக்க வேண்டும்.
ஒரு வரலாற்றுத் தகவலை நம்புவதெனில், அந்தத் தகவலின் ஆதார மூலப் படிவத்தை அடையாளம் காண வேண்டும். கே.எம். நஜிமுத்தின் சேர் அவர்களோ, தோழர் சிராஜ் மஷ்ஹூர் அவர்களோ பாடசாலையின் ஆரம்பம் குறித்த தகவலின் ஆதார மூலப்படிவமாக முன்வைப்பது, மர்ஹூம் எம்.ஐ.எம். முகைதீன் விதானை யாரின் கையெழுத்து படிவத்தைத்தான். இவர் இந்தப் பாடசாலையின் ஆரம்பக் கர்த்தாக்களில் ஒருவர் என்ற வகையில், அவரால் சொல்லப்பட்ட தகவல் உண்மையானது என்ற எடுகோளின் அடிப்படையிலிருந்து, பவளவிழா ஆண்டைக் கணித்திருக்கிறார்கள்.(இது வரலாற்றெழுதியலுக்கு தவறானதொரு முன்மாதிரி) ஆனால், அந்த மூல ஆதாரப் படிவம் பொதுவான ஒரு பதிவாகப் பிரசுரிக்கப்படவில்லை என்றே அறிகிறேன்.
அடுத்து ஒரு கேள்வி எழுகிறது, பாடசாலையின் உருவாக்கம் குறித்த பதிவுகள் வேறு ஏதாவது இடத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று தேடினால், ஆம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது ஏயாரெம் சலீம் சேர் அவர்கள் எழுதிய “அக்கரைப்பற்று வரலாறு” என்ற புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரின் அக்கரைப்பற்று வரலாறு என்பது அத்தனை நம்பிக்கையான தகவல்களைக் கொண்டதல்ல என்பதால் அதை விட்டுவிடுவோம்.
பாடசாலையின் பவுண்டர்களில் ஒருவராக நம்பப்படும் மர்ஹூம் எம்.ஐ.எம். முகைதீன் விதானையாரின் பதிவினை ஆதார மூலமாகக் கருதுவோம். அப்படிக் கருதினால், அந்த ஆதார மூலப் படிவம் எப்போது எழுதப்பட்டது என்பதை அறிவது மிக அவசியமான ஒன்று. அதுவும், இந்த ஆதார மூலப்படிவத்தின் நம்பகத்தன்மையை வலிமைப்படுத்த உதவக்கூடியது. அவரின் ஆதார மூலப்படிவத்தில் குறிப்பிட்டிருக்கும் தகவல்களைத் தோழர் சிராஜ் மஷ்ஹூர் அவர்கள் மத்தியக் கல்லுாரியின் பவளவிழா குறித்த கட்டுரையில், பதிவு செய்திருக்கிறார். அந்த மூலப்படிவ ஆதாரமாகக் கருதப்படும் எம்.ஐ.எம். முகைதீன் அவர்களின் பாடசாலையின் ஆரம்பம் குறித்துப் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் எத்தனையாம் ஆண்டு எழுதப்பட்டது என்ற குறிப்பு இல்லை. எனினும், அது 1977ம் ஆண்டின் பின்னரே எழுதப்பட்டது என்பதை தெளிவாக உணர்த்தும் சான்று உள்ளது.
1935ம் ஆண்டு அக்கரைப்பற்றுக்கு சுபைத் முகைதீன் என்ற ஒரு முஸ்லிம் DRO வருவதாகவும், அவரைச் சந்திக்க ஊரில் உள்ள நான்கு விதானைமார் போவதாகவும், அவருடைய உரையாடலின்போது, ஊரில் ஆங்கிலப்பாடசாலை இருக்கிறதா எனச் சுபைத் முகைதீன் விசாரிப்பதாகவும், அந்த விசாரிப்பின் காரணமாக ஆங்கிலப்பாடசாலை ஒன்றை ஊருக்குக் கொண்டுவருவதற்கான சபதங்களை நான்கு விதானைமாரும் எடுப்பதாகவும் தகவல்கள் சொல்கின்றன. அதை மர்ஹூம் எம்.ஐ.எம். முகைதீன் என்ற மத்திய மகாவித்தியாலய பவுண்டர்களில் ஒருவராக நம்பப்படுபவரின் வாக்குமூலத்தை இங்கு பார்ப்போம்.
"பின் DRO அவர்களுடனான சம்பாஷணைகள் முடிந்தவுடன், நாங்கள் நால்வரும் வீடு நோக்கினோம். அக்கரைப்பற்று மக்களால் ஓர் ஆங்கிலப் பாடசாலையை ஆரம்பிக்க இயலாத நிலை இருந்துள்ளதே என்றவாறான DRO அவர்களின் உறுத்தலான வசனங்களும், எங்கள் அனைவரினது மௌனமும் எமது நெஞ்சில் ஆழப்பதிந்த ஒன்றாயின. வரும் வழியில் இரவு எட்டரை மணியளவில், அருளானந்தரின் வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள நிழல் வாகை மரத்தடியில் நாங்கள் நால்வரும் ஒன்றுகூடி 'ஒரு ஆங்கிலப் பாடசாலையை அமைப்போம்' என்ற திடசங்கற்பத்தோடு வீடு திரும்பினோம்."
இந்த மூல ஆதாரப் பதிவில், “அருளானந்தரின் வைத்தியசாலைக்கு முன்னால் இருந்த வாகை மரத்தின் கீழிருந்து பாடசாலை உருவாக்குவதற்கான சபதத்தை எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆக, இந்த ஆதார மூலப்படிவத்தின் படி, அருளானந்தரின் வைத்தியசாலை கட்டப்பட்டதன் பின்னரே, குறித்த ஆதார மூலப்படிவம் எழுதப்பட்டதாக உறுதிப்படுத்தப்படுகிறது.
அருளானந்தர் ஒரு வைத்தியர், அவர் பிறந்ததே 1950ம் ஆண்டுதான். பல பாடசாலைகளில் படித்தாலும் பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்து வைத்தியராக வெளியேறியது, 1975 என நினைக்கிறேன். அவர் தனியார் வைத்தியசாலையை அக்கரைப்பற்றில் கட்டியது 1977ம் ஆண்டு. எனவே, மத்தியப் பாடசாலையின் உருவாக்கம் குறித்த மூல ஆதாரம் என்ற தகவல் எழுதப்பட்டது 1977ம் ஆண்டுக்குப் பிறகு என்பதை உறுதியாகக் கூற முடியும். இது முதலாவது விசயம். நாம் இப்போது தெளிவானதொரு தகவலைக் கண்டடைந்திருக்கிறோம்.
அக்கரைப்பற்று மத்தியப் பாடசாலையின் உருவாக்கம் குறித்து தற்போது உள்ள மூல ஆதாரம், 1977ம் ஆண்டுக்குப் பின்னர் எழுதப்பட்டதே. எழுதப்பட்ட காலத்தை உறுதியாக அறிந்துகொண்டபின் செய்ய வேண்டியது என்ன? அந்த மூல ஆதாரப் படிவத்தில் உள்ள தகவல்கள் எப்படியானவை? அவை உண்மைதானா? என்பதை அலசி ஆராய்வதுதான். அதைத்தான் இனி செய்ய வேண்டும். இந்தப் பதிவில் சந்தேகம் ஏதும் இருந்தால், அல்லது கேள்விகள் ஏதும் இருந்தால் அதை அறியத்தாருங்கள். அவற்றைத் தெளிவு படுத்திவிட்டு அடுத்த கட்டத்திற்குச் செல்வோம்.
பிற்குறிப்பு – அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் வரலாற்றை அண்மையில் தேசியப் பத்திரிகையிலும், தனது முகநுால் பக்கத்திலும் எழுதிப் பதிவு செய்தவர் எனது மனதுக்கு நெருக்கமான, நான் மிகவும் மதிக்கின்ற தோழர் சிராஜ் மஷ்ஹூர் அவர்கள்தான். அவரிடம் அவசரமாக ஒரு கட்டுரை கேட்கப்பட்டதற்காக ஏலவே உள்ள ஆதாரங்களை, மூல ஆதாரங்களையும் வைத்து அவற்றிலிருந்து தகவல்களை எடுத்து அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். என்னிடமும் அதைக் கூறியிருந்தார். அவர் எழுதி தேசியப் பத்திரிகையில் வெளிவந்த பின்னர்தான் இந்தப் பாடசாலையின் வரலாறு தொடர்பில் கவனத்தைக் குவித்தேன். அதற்குக் காரணம், பாடசாலை உருவாக்கம் தொடர்பாக எனது பாட்டனார் வழியிலிருந்து வாய்மொழியாக நான் அறிந்து வைத்திருந்த தகவல்கள்தான். அவை பதிவுகளாக இருக்கவில்லை. ஆனால், தற்போது பாடசாலையின் வரலாறாகச் சொல்லப்படும் கதைகளையும், அதிலுள்ள தவறுகளையும் ஆதாரத்துடன் நிரூபித்தால் மட்டுமே, வாய்வழியாக அறிந்து வைத்திருக்கும் கதைகளை என்னால் எழுத முடியும். ஆகவே, எழுதப்பட்டிருக்கும் வரலாற்றிலுள்ள தவறுகளை கண்டுபிடிக்கும் ஆய்வில் இறங்கி அவைகளைக் கண்டடைந்திருக்கிறேன். அவற்றையே உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். இது அதில் சிறியதொரு பகுதிதான்.
தேசியப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது 1946ம் ஆண்டு அல்ல என்பதை ஆதாரங்களோடு நிரூபிக்கும் ஆய்வின் இறுதிப்பகுதி
0000000000000000000000000000000000000000
அக்கரைப்பற்று தேசியப் பாடசாலை 1946ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பதில் ஊரிலுள்ள அனைவரும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அதனால்தான், இந்த ஆண்டு (2021) பவளவிழா கொண்டாடப்பட்டது. ஆனால், உண்மையில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது 1946ம் ஆண்டு அல்ல என நான் சொல்லியிருந்தேன். அதை நிரூபிக்கும் ஆய்வில் இறங்கியிருந்தேன். அதன் நிமித்தமாக இதற்கு முன்பு வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் இரண்டு முக்கியமான விசயங்களை முன்வைத்து எனது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தேன்.
- அக்கரைப்பற்று தேசியப் பாடசாலையின் வரலாற்றை, அதன் பவுண்டர்களில் ஒருவராக நம்பப்படும் மர்ஹூம் எம்.ஐ.எம்.முகைதீன் விதானையார் பதிவு செய்து வைத்திருக்கும் ஆதார மூலப்படிவம் எப்போது எழுதப்பட்டது என்பதைத் தெளிவாக விளங்கப்படுத்தியிருந்தேன்.
- அக்கரைப்பற்று தேசியப் பாடசாலையின் ஆரம்பம் குறித்த பதிவு உண்மையில் குறித்துவைக்கப்பட்டிருக்க வேண்டிய இடம், அந்தப் பாடசாலையின் Log Book என்றும், அதில் பாடசாலையின் ஆரம்பம் குறித்த தகவல்கள் இல்லை என்பதையும் குறித்து விரிவாக விளக்கங்களுடன் முன்வைத்திருந்தேன்.
எனவே, இப்போது ஆய்வு செய்ய வேண்டி இருக்கின்ற விசயங்கள் எவை என்பதை நான் தெளிவுபடுத்திவிடுகிறேன். பாடசாலையின் பவுண்டர்களில் ஒருவராக நம்பப்படும் மர்ஹூம் எம்.ஐ.எம்.முகைதீன் விதானையவர்கள் எழுதிவைத்திருக்கும் ஆதார மூலப்படிவத்தில் உள்ள தகவல்களை ஆய்வு செய்ய வேண்டும். அதுபோல், பாடசாலை பற்றி கூறப்படும் சில தகவல்களையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் முக்கியமானவையாக இருப்பது, கனிஷ்ட ஆங்கில அரசாங்க பாடசாலையின் பழைய மாணவரும், அதே பாடசாலை மத்திய மகா வித்தியாலயமாக ஆன பிறகு, அதிகக் காலம் அதிபராக இருந்தவருமான உதுமாலெப்பை அதிபரின் வாக்கு மூலங்கள். மற்றும் இந்தப் பாடசாலையின் வரலாறு தொடர்பில் நீண்டகாலமாக அக்கறைகொண்டுவரும், முன்னாள் கல்விப்பணிப்பாளர் (உதவி) கே.எம்.நஜிமுதீன் சேர் அவர்களின் தகவல்களுமாகும். ஆனாலும், இவர்கள் அனைவரும் பாடசாலை ஆரம்பிக்கப்பட தினம் குறித்து ஒத்த கருத்துடையவர்களாகவே இருக்கின்றனர்.
அக்கரைப்பற்றிலிருந்து இயங்கும் யூத் தொலைக்காட்சி தமிழில், முன்னாள் அதிபர் உதுமாலெப்பை சேர் அவர்கள், பவளவிழா நினைவாண்டை முன்னிட்டு அவருடைய அனுபவங்களையும், சில தகவல்களையும் பேசியிருந்தார். அதில் அவர் குறிப்பிட்ட முக்கியமான ஒரு விசயத்தை இங்கு எடுத்துக்கொள்வோம். “அக்கரைப்பற்றில் முதலாவதாக உருவாக்கப்பட்ட பாடசாலையான மெடிஸ்த மிஷன் பாடசாலையில் (தற்போதைய அஸ்-ஸாஹிரா வித்தியாலயம்) ஆரம்பக் கல்வியைக் கற்றதாகவும், பெற்றோரின் விருப்பத்தினால் 1949ம் ஆண்டு, கனிஷ்ட ஆங்கிலப் பாடசாலையில் (தற்போதைய தேசிய பாடசாலை) 5ம் வகுப்பில் சேர்ந்ததாகவும் கூறியிருந்தார்”
இது முக்கியமான தகவல் என நினைக்கிறேன். 1949ம் ஆண்டு கனிஷ்ட ஆங்கிலப்பாடசாலையில் 5ம் வகுப்பு இருப்பதை இது உறுதி செய்கிறது. 1946ம் ஆண்டு தொடங்கிய பாடசாலையில் 49ம் ஆண்டு மூன்றாம் வகுப்புதான் இருக்க வேண்டும் என்பது ஒரு எடுகோள். ஆனால், 5ம் வகுப்பு 49ம் ஆண்டே இருப்பதாக இருந்தால், உண்மையில் குறித்த கனிஷ்ட ஆங்கிலப்பாடசாலை 46ம் ஆண்டுக்கு முன்பே ஆரம்பித்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர வாய்ப்பிருக்கிறது. எனினும், லொஜிக்கலாக யோசிப்பவர்களுக்கு வேறு ஒரு சாத்தியத்தையும் இது தரக்கூடியதாக இருக்கிறது. 1946ம் ஆண்டே பாடசாலை ஆரம்பிக்கும்போதே, 1 தொடக்கம் 5ம் வகுப்புவரை ஆரம்பிக்கப்பட்டிருந்தால் 49ம் ஆண்டும் 5ம் வகுப்பு இருக்க வாய்ப்புள்ளதே எனக் கூறமுடியும். புதிதாக ஒரு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பதற்காக, அனைத்துப் பிற பாடசாலைகளிலிருந்தும் மாணவர்களைக்கொண்டுவந்து சேர்த்திருப்பார்கள் என்பது சந்தேகத்திற்குரியது. எனினும், இந்த லொஜிக்கலான கேள்வியிலும் ஒரு சிக்கல் உள்ளது. பாடசாலை ஆரம்பித்த 46ம் ஆண்டிலேயே 1 தொடக்கம் 5ம் ஆண்டுவரை வகுப்புகள் இருந்திருந்தால்,ஐம்பதாம் ஆண்டு முதலாவது எஸ்.எஸ்.ஸி பரீட்சை எழுதப்பட்டிருக்க வேண்டும். எனில், அதற்கான ஆதாரங்கள் இருக்க வேண்டுமல்லவா? எது எப்படி இருப்பினும், உதுமாலெப்பை அதிபரின் வாக்கு மூலம் இரண்டுவகையான கோணத்தில் சிந்திப்பதற்கு வாய்ப்பைத் தருவதால், 1946ம் ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கப்படவில்லை என்பதை நிறுவுவதற்குப் போதுமானதல்ல என்பதால், சரியான ஆதாரங்கள் ஏதும் கிடைக்காத பட்சத்தில் விரிவாக ஆய்வு செய்வோம். தற்போது, வேறு ஆதாரங்கள் இருக்கிறதா என்பதைத் தேடிப்பார்ப்போம்.
அடுத்து தோழர் சிராஜ் மஷ்ஹூர் அவர்களின் பவளவிழா குறித்த கட்டுரையில் குறிப்பிடப்படும் பிறிதோர் செய்தியை எடுத்துக்கொள்வோம்.
“1958 இன் அரச கல்விக் கொள்கை, சிரேஷ்டப் பாடசாலைகளின் விஞ்ஞானக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியது. இதன் அடிப்படையில் சிரேஷ்டப் பாடசாலைத் தராதரப் பத்திர பரீட்சையில் (Senior School Certificate - SSC) சிறந்த அடைவுகளைப் பெற்ற பாடசாலைகளே, விஞ்ஞான ஆய்வுக் கூடங்களைப் பெற்றுக் கொள்ள தகுதியானவையாகக் கருதப்பட்டன.
1954 இற்குப் பின்னுள்ள பருவங்களில் குறித்த இப்பரீட்சைகளில் முதலாம் தர- இரண்டாம் தரப் பிரிவுகளில், இப் பாடசாலையிலிருந்து அதிக எண்ணிக்கையான மாணவர்கள் சித்தியடைந்தனர்.
இதனால் ஊர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, விஞ்ஞான ஆய்வுக் கூடமொன்றை அமைக்க அப்போதைய அரசு அனுமதியளித்திருந்தது.”
இந்தக் கூற்றும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. எஸ்.எஸ்.சி தரத்தில் சிறந்த அடைவுகளைப் பெற்ற பாடசாலைக்கு, 1958ம் ஆண்டின் அரச கல்விக்கொள்கையின்படி விஞ்ஞானக் கூடத்தை அரசு வழங்கியது. அதன் அடிப்படையில் கனிஷ்ட ஆங்கிலப்பாடசாலைக்கும் விஞ்ஞானக் கூடம் வழங்கப்பட்டது. அதே நேரம், 1954 இற்குப் பின்னுள்ள பருவங்களில் அப்படியான சிறந்த பெறுபேறுகளைப் பாடசாலை வழங்கியதன் காரணமாகவே விஞ்ஞானக் கூடம் கிடைக்கப்பெற்றதாகவும் கூறுகிறது. இந்தக் கூற்றின்படி 54ம் ஆண்டு எஸ்.எஸ்.சி தரா தரப்பரீட்சை எழுதப்படுவதாக இருந்தால், 46ம் ஆண்டுக்கு முன்பு இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற ஒரு விசயத்தையும் சிந்திக்கத் துாண்டுகிறது. அதுபோல், 46ம் ஆண்டு ஆறாம் மாதம் பாடசாலை தொடங்கப்பட்டதாக இருந்தால், குறித்த ஆண்டில் அரைப்பகுதிதான் கல்வி கற்ற நாட்களாக இருக்கும். எனவே, அது ஒரு ஆண்டாக கணிப்பிட முடியுமாக இருக்குமா என்ற சந்தேகம் உண்டு. எனவே, 47ம் ஆண்டைத்தான் இந்தப் பாடசாலையின் உத்தியோக பூர்வக் கல்வியாண்டாகக் கணிக்க முடியும். அப்படிக் கணித்தால், அதிலிருந்து ஒன்பது ஆண்டுகளின் பின்னர்தான் எஸ்.எஸ்.சி தாராதரப் பரீட்சை சாத்தியமாகும். அல்லது முதல் அரையாண்டையும் முழுமையான கல்வி ஆண்டாகக் கணித்தால் 55ம் ஆண்டே முதலாவது எஸ்.எஸ்.சி பரீட்சையை இந்தப்பாடசாலை சந்தித்திருக்க வேண்டும். சரி, இதுவும் பல சாத்தியமான சந்தேகங்களையும் முடிவுகளையும் தருவதால், 46ம் ஆண்டு பாடசாலை நிறுவப்படவில்லை என்பதை நிரூபிப்பதற்குத் தகுந்த ஆதாரமாகக் கொள்ள முடியாது. எனவே இதையும் ஒரு பக்கம் வைத்துவிடுவோம்.
இப்போது, தேசிய பாடசாலையின் பவுண்டர்களில் ஒருவராக நம்பப்படும் மர்ஹூம்.எம்.ஐ.எம். முகைதீன் விதானையார் எழுதியதும், இன்றுவரை பாடசாலையின் வரலாறு தொடர்பில் இருப்பதாகக் கருதப்படும் ஆதார மூலப்படிவத்திலுள்ள சம்பவங்கள் குறித்து ஆராய்வோம். அதுதான் கடைசி அஸ்திரம். அதிலாவது, 46ம் ஆண்டு இந்தப் பாடசாலை தொடங்கப்படவில்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் இருக்கின்றனவா எனத் தேடிப்பார்ப்போம்.
சம்பவம் – 01
"இத் திறப்பு விழாவுக்கு உயர்திரு தருமரெத்தினம் MSC அவர்களுடன் அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களும் வந்திருந்தார். இவ்விருவரும் இரு யானைகளில் ஊர்வலம் வந்த காட்சி, அக்கரைப்பற்று என்றுமே கண்டிராத ஒரு புதுமையாகும். இதிற் குறிப்பிடத்தக்கதொரு விடயம் யாதெனில், MSC அவர்கள் ஊர் வரும்போது அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தார்.
கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி அதிபராக இருந்த மர்ஹூம் அஸீஸ் அவர்களைக் கொண்டே பாடசாலையைத் திறக்கப் பண்ணினார். MSC அவர்களின் தனி விருப்பம் இது."
பாடசாலையை நாடா வெட்டித் திறந்தவர் ஏ.எம்.ஏ.அஸீஸ் எனக் கூறுகிறது. அவரைக் கொண்டே பாடசாலையைத் திறக்க வேண்டும் என்பது தருமரத்தினம் வன்னியனாரின் (எம்.எஸ்.சி) விருப்பம் என்றும் கூறுகிறது. அதற்குக் காரணம் “கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின்” அதிபராக இருந்தமைதான் என வலியுறுத்துகிறது. ஆக, ஒரு பெரும் பாடசாலையின் அதிபரைக் கொண்டு கனிஷ்ட ஆங்கிலப்பாடசாலையை திறக்கச் செய்தது பெருமையான விசயம் போல், இந்தச் சம்பவம் குறிப்பிடுகிறது.
மூல ஆதாரப்படிவத்தில் உள்ள இந்தச் சம்பவம் உண்மையானால், ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்கள், கனிஷ்ட ஆங்கிலப் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்பு, கொழும்பு ஸாஹிரா கல்லூரியிலோ அல்லது வேறு ஏதாவது பாடசாலையிலோ அதிபராகக் கடமை புரிந்திருக்க வேண்டும் என்பதை ஊகித்துவிடலாம். அப்படி எனில், அதைத் தேடிப்பார்ப்பது அவசியமானது. எனவே, நானும் தேடத்தொடங்கினேன். ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்கள் அதிபராக இருந்திருக்கிறார். அவர் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராக 1948ம் ஆண்டில்தான் பதவி ஏற்கிறார். அதற்கு முன் வேறு எந்தப் பாடசாலையிலும் அவர் அதிபராக இருந்திருக்கவில்லை. எனவே, மூல ஆதாரப்படிவத்திலுள்ள சம்பவம் பிழையானது என்று நிரூபிக்க முடியும்.
ஆயினும், தேசியப் பாடசாலை ஆரம்பித்த வரலாற்றை மிகப் பிந்தியே எழுதியதால், அவர் அதிபராக இருந்ததைக் காரணமாக வைத்து, பின்னர் அவரை விளங்கிக்கொள்வதற்காக ஒரு உயர்வு நவிற்சிக்காகக் கூறப்பட்டிருக்கலாம் என ஒரு கருத்தைச் சொல்ல முடியுமாக இருக்கும். என்று சிலர் சொல்லக்கூடும். எனினும் “கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி அதிபராக இருந்த மர்ஹூம் அஸீஸ் அவர்களைக் கொண்டே பாடசாலையைத் திறக்கப் பண்ணினார். MSC அவர்களின் தனி விருப்பம் இது." “அதிபராக இருந்த” என்ற வாக்கியம் அதை நிராகரிக்கும் தொனியில் இருக்கிறது. ஏற்கனவே, அதிபராக இருந்த ஒருவரைக்கொண்டு தர்மரத்தினம் வன்னியனார் பாடசாலையை விரும்பித் திறந்துவைத்தார் என்ற பொருளைத்தான் நெருக்கமாக உணர்த்துகிறது. எனவே, 46ம் ஆண்டு தேசிய பாடசாலை ஆரம்பிக்கப்படவில்லை என்பதை இது ஓரளவு நிரூபணம் செய்கிறது. இருந்தும் இது போதுமானதாக இல்லாத மாதிரி ஒரு உணர்வைத் தருகிறது இல்லையா? சரி ஆதார மூலப்படிவத்திலுள்ள மற்றுமொரு சம்பவத்தைப் பார்க்கலாம்.
சம்பவம் – 02
“அப்போது அரசாங்க சபையில் மட்டக்களப்பு தெற்குத் தொகுதி அங்கத்தவராக இருந்த (Member of State Council - MSC) திருவாளர் எஸ். தருமரெத்தினம் வன்னியானாரை, மர்ஹூம்களான எம்.ஐ.எம். மொகிதீன் (4 ஆம் குறிச்சி விதானை), நாடாளுமன்ற உறுப்பினர். முகம்மதுத் தம்பி ஆசிரியர் ஆகியோர் சந்தித்தனர்.
ஹிதாயத்துல் இஸ்லாம் சபையின் அங்கத்தவர்களான இவ்விருவரும், அக்கரைப்பற்றில் ஓர் ஆங்கில கனிஷ்ட பாடசாலையை அமைத்துத் தருமாறு தருமரெத்தினம் வன்னியனாரிடம் கோரிக்கை விடுத்தனர். தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு இவ்வாறான ஆங்கிலப் பாடசாலையொன்று அவசியம் என்பதை மனங்கொண்ட தருமரெத்தினம் வன்னியனார் விரைந்து செயலாற்றத் தொடங்கினார்.
ஏறத்தாழ ஒரு வாரக் காலத்தின் பின்னர், ஹிதாயத்துல் இஸ்லாம் சபையின் உப செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது தம்பி ஆசிரியருக்கு, அவர் தந்தியொன்றை அனுப்பினார் . அதில் "உப்புக் குதம் அமைந்திருக்கும் இடத்தில் ஆங்கிலக் கல்லூரி தொடங்குவதற்கு இரு ஆங்கில ஆசிரியர்களுடன் 10.06.1946 ஆம் திகதி வருகிறேன். திறப்பு விழாவிற்கு உரிய ஆயத்த வேலைகளைச் செய்யுங்கள்"
சம்பவம் – 03
"இத் திறப்பு விழாவுக்கு உயர்திரு தருமரெத்தினம் MSC அவர்களுடன் அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களும் வந்திருந்தார். இவ்விருவரும் இரு யானைகளில் ஊர்வலம் வந்த காட்சி, அக்கரைப்பற்று என்றுமே கண்டிராத ஒரு புதுமையாகும்.”
ஆதார மூலப்படிவத்திலுள்ள சம்பவம் 02யும், சம்பவம் -03யும் தொகுத்து இப்படிச் சுருக்கிக்கொள்ளலாம்.
1946ம் ஆண்டு தருமரத்தினம் வன்னியனார் அரசாங்க சபை அங்கத்தவராக இருந்தார். (Member of State Council - MSC)
ஆகவே, எம்.ஐ.எம்.முகைதீன் விதானையாரும், முஹம்மது தம்பி ஆசிரியரும் தர்மரத்தினம் வன்னியனாரைச் சந்தித்து, ஒரு கனிஷ்ட ஆங்கிலப் பாடசாலை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
அவர் அதிகாரத்திலிருந்தபடியால், விரைந்து நடவடிக்கை எடுத்தார். ஒரு வாரத்திற்குள் பாடசாலை அமைவதற்குக் காரணமாக மாறிவிட்டது. ஆகவே, தருமரத்தினம் வன்னியனார் தீர்மானித்த தினமான 10.06.1946இல் உப்புக் குதம் இருந்த கட்டடத்தில் பாடசாலை திறக்கப்பட்டது. அந்தத் திறப்பு விழாவுக்கு ஏ.எம்.ஏ.அஸீசும், தர்மரத்தினம் வன்னியனாரும் வந்திருந்தனர். யானைகளில் ஏற்றி ஊர்வலம் கூடப் போயினர்.
இதுதான் பாடசாலையின் வரலாறு தொடர்பான ஆதார மூலப்படிவத்தில் இருக்கிறது. எனவே, நம்முன் எழும் கேள்வி முக்கியமானது. தருமரத்தினம் வன்னியனார் இங்கே குறிப்பிடும் காலத்தில் அரசாங்க சபை அங்கத்தவராக இருந்தாரா என்பதுதான். (Member of State Council - MSC) நிச்சயமாக இருந்திருக்க வேண்டும். ஏன் எனில், அவர் அதிகாரத்தில் இருந்ததன் காரணமாகவே பாடசாலைகூட ஆரம்பிக்கப்பட்டது இல்லையா?
எனவே, தருமரத்தினம் வன்னியனாரின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம். 1936 ம் ஆண்டு நடந்த இலங்கையின் இரண்டாவது அரசாங்க சபைத் தேர்தலில் (state council election ) மட்டக்களப்பு தெற்கு தொகுதியில் களமிறங்கி எஸ்.ஓ.கனகரட்னம் என்பவர் வெற்றிபெறுகிறார். அவர் செப்டம்பர் 1938ம் ஆண்டு மரணித்துவிடுகிறார். அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு 1938ம் ஆண்டு ஒரு இடைத்தேர்தல் மட்டக்களப்பு தெற்கு தொகுதிக்கு நடைபெறுகிறது. அதில், எஸ்.தருமரத்தினம் வன்னியனார் வெற்றி பெறுகிறார். ஆயினும், அவரால் பதவிக்காலம் முழுமையும் நீடிக்க முடியவில்லை. உடல் நலக்குறைவு எனக் காரணம் சொல்லி, 1943ம் ஆண்டு நவம்பர் மாதம், 20ம் திகதி தனது அரச சபைப் பதவியை இராஜினாமாச் செய்கிறார். ஆனால், உண்மையில் அவர் உடல் நலக் குறைவாக இருக்கவில்லை. உள்ளநலக் குறைவாக இருந்தார் எனத் தகவல்கள் இருக்கின்றன. அவரின் தனிப்பட்ட குடும்பப் பிரச்சினையே இதற்குப் பின்னால் காரணமாக இருந்தது. அதை இங்கு குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.
ஆக, தேசியப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லும் ஆண்டில், அதைக் கொண்டுவந்ததாகச் சொல்லும் அரசாங்க சபைப் பிரதிநிதி பதவியில் தருமரத்தினம் வன்னியனார் இல்லை. ஆனால், பாடசாலையின் ஆரம்பம் குறித்த ஆதார மூலப்பிரதியில், 1946ம் ஆண்டு சந்தித்து பாடசாலை வேண்டும் என்று கேட்டதற்கு ஒருவாரத்திற்குள் விரைந்து நடவடிக்கை எடுத்ததாகவும், அவரே வந்து திறந்துவைத்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மாபெரும் வரலாற்றுப் பொய். சில வேளை, அவர் பதவியிலிருந்த காலத்தில் இந்தப் பாடசாலையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளைச் செய்திருக்கலாம், பின்னர் பாடசாலை திறக்கப்படும் 1946களில் அதன் திறப்பு விழாவுக்கு வந்திருக்கலாம் என லொஜிக்கலாக கேட்பதாக நினைத்துக்கொண்டு சிலர் கேட்கவும் கூடும். ஆனால், அதுவும் சாத்தியமில்லை. பதவியை ராஜினாமா செய்த அதே ஆண்டில், காட்டுக்குள் நுழைந்த தர்மரட்னம் வன்னியனாரை பல நாட்களுக்குப் பிறகுதான் கண்டுபிடித்தனர். அப்போது, அவர் உடல் மற்றும் உள நோயுற்றவராக இருந்தார். 1952ம் ஆண்டு மரணித்தார். அதுவரை, அவர் அப்படியேதான் இருந்தார். அவர் இப்படியாக ஆவதற்கு அவரின் தனிப்பட்ட குடும்ப பிரச்சனையே காரணமாக இருந்தன. எனவே, எந்தவகையிலும் தருமரத்தினம் வன்னியனார் அவர்கள், 1946ம் ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் தினத்தில், வருகை தந்திருக்க முடியாது. அதே நேரம் அவர் பதவியிலிருந்த காலமும் அது அல்ல. இதைவிட ஆதாரம் வேறு என்ன வேண்டும்?
ஆகவே, பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட தினம் குறித்த தகவல் பிழையானது. குறித்த பாடசாலையை தருமரத்தினம் வன்னியனாரிடமிருந்து 1946ம் ஆண்டு, பேசி வாங்கி வந்து ஆரம்பித்தது என்பதும் பொய்யானது. பாடசாலையின் பவுண்டர்களுக்கு எது மறந்துபோனாலும், பாடசாலை ஆரம்பித்த மாதம் தேதிகள் மறந்தாலும் ஆண்டு மறப்பதற்குச் சாத்தியமில்லை. எனவே, அந்த விசயத்தில் கூட பிழையான தகவல்களைத் தருவதாக இருந்தால், இந்தப் பாடசாலை உருவாக்கத்தோடு அவர்களுக்கிருந்த உறவு என்பது மூன்றாம் தரப்பானது. அல்லது உண்மையான பவுண்டர்களை மறைக்க வேண்டிய தேவை இருந்திருக்க வேண்டும். இரண்டில் எது?
எனவே, உண்மையில் இந்தப் பாடசாலையின் பவுண்டர்கள் யார்? எப்போது இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது? இந்தப் பாடசாலையின் ஆரம்பம் குறித்த தகவல்கள் ஏன் மறைக்கப்பட்டன? ஏன் பொய்யான ஒரு வரலாறு எழுதப்பட்டு, அதையே மக்கள் நம்பும்படி செய்கின்றனர்? இதற்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சிகள் என்ன? இப்படி ஏகப்பட்ட சந்தேகங்கள் உங்களுக்கு ஏற்படலாம். அவை குறித்து விரிவாக உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்றைய காலத்தில் நமதுாரின் பிரதான முரணப்பாடுகளும், சமூகரீதியிலான போட்டிகளும் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அவற்றை முன்வைத்துத்தான் இந்த வரலாற்றை எழுத வேண்டும். அதுவே சரியானதொரு வரலாற்றுக் கண்ணோட்டமாக இருக்கும்.
தேசியப் பாடசாலை 1946ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அனைத்து ஆதாரங்களினதும் பிழைகளை எடுத்துக்காட்டி, அந்த தகவலைப் பொய் என்று நிரூபித்திருக்கிறேன். எனவே, உங்களிடம் சந்தேகங்கள், கேள்விகள், மற்றும் மேலும் வேறு ஆதாரங்கள் ஏதும் இருக்குமானால் அதை வெளிப்படுத்துங்கள். அது குறித்தும் பேசுவதற்குத் தயாராக இருக்கிறேன். இனிமேல், இதுவரை கூறப்பட்ட பாடசாலையின் ஆரம்பம் குறித்த பொய்யான தகவல்களைப் பாடசாலையோடு தொடர்புடைய மலர்களிலோ, நால்களிலோ பதிவு செய்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.இப்போது ஒரு முக்கியமான தேவை இருக்கிறது. அது என்னவெனில், பாடசாலையின் வரலாற்றை எழுதுவதுதான். எனவே, முன்பு வரலாற்றை எழுதியவர்கள், பழைய மாணவர்களாக இருந்து தற்போதும் உயிருடன் இருக்கும் மூத்த பிரஜைகள், ஆய்வாளர்கள், என அனைவரையும் ஒரு சபையாக உருவாக்கி, அதிலிருந்துதான் வரலாற்றை எழுத வேண்டும். அதற்குப் பங்களிப்புச் செய்ய நான் தயாராகவே இருக்கிறேன்.
இத்தோடு தர்மரத்தினம் வன்னியனாரின் புகைப்படத்தையும் இணைத்திருக்கிறேன்.
எந்த ஆதாரங்களுமற்ற ஒரு பிழையான வரலாற்றை மக்கள் மத்தியில் பரப்ப காரணமாக இருந்த பலரில் தோழர் சிராஜ் மஷ்ஹூரும் ஒருவர். தேசிய பத்திரிகையிலும் இந்த பிழையான வரலாற்றை பதிவு செய்து வைத்திருக்கிறார். இது குற்றச்சாட்டு அல்ல. அறிவுசார்ந்த பொறுப்புக் கூறுதலுக்கான நேர்மையை கோருவதாகும். இன்றுவரை அது தொடர்பாக எந்தவிதமான பொறுப்புக் கூறலையும் தோழர் சிராஜ் தேசிய பத்திரிகையிலோ அல்லது தனது பக்கத்திலோ பதிவு செய்யவில்லை. பிழையான வரலாற்றை எழுதுவதற்கு துணைபோவது அத்தனை நேர்மையானதல்ல. அறிவு சார்ந்த பொறுப்புக் கூறுதலுக்கு தயங்கும் தோழர் சிராஜ் மஷூர் அவர்கள், ஊரின் வரலாறு மற்றும் சமூகத்தின் வரலாறு பற்றி அக்கறை கொள்வது எந்தவகை நேர்மையான சமூகச் செயல்? அவரின் செயல்பாடுகளின் மீது எனக்கு எப்போதும் மரியாதையுண்டு. அதுபோல் தனிப்பட்ட முறையிலும் மரியாதையும் அன்பும் உண்டு. நாம் அதிகம் நேசிப்பவர்கள் அறிவுசார்ந்த பொறுப்புக் கூறலில் இருந்து நழுவிச் செல்வதை காணும்போது, சமூகச் செயல்பாட்டாளர்களின் மீது அவநம்பிக்கையும் ஒருவகை சோர்வும் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றேன்.