இலங்கையின் கிழக்கில் முஸ்லிம்களின் மத்தியில் உருவாகி வளர்ந்த நாட்டார் பாடல்கள் சற்று வித்தியாசமானவைதான். அதிலும், கதைப்பாடல்கள் இன்னும் ஆச்சரியம் தருபவை.
நாட்டார் பாடல்களை இந்தப் பிராந்தியத்தில் ”கவி” என்றே அழைப்பார்கள். அனேகமாக அந்தப் பாடல்களை பாடியவர்கள் பெண்கள் என்றுதான் ஓரளவு ஊகிக்க முடிகிறது. ஆய்வாளர்களும் அந்த முடிவையே ஒத்துப்போகின்றனர்.
இந்தக் கவிகளில் உரையாடல் கவிகள் மச்சான் மச்சிகளுக்கிடையில் பாடப்பட்டதாகவே இருக்கின்றன. அதில் சுவாரஸ்யம் கூடுதலாகவும் இருக்கின்றது.
நீண்ட சில கதைப்பாடல்களை உரையாடலாகப் பாடிய இரண்டுபேரின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. அவர்கள் இருவரும் மச்சான், மச்சி முறைக்காரர்கள்.
மச்சான் ”அசனார்” என்றும் மச்சியின் பெயர் ”சவியா” என்றும் கூறுகிறது. எழுத்தில் பதிவு செய்யப்படாமல் செவியேறலாக கேட்டு மனனம் செய்து தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. இதில் வரும் சவியா என்ற பாத்திரம் தான் மிக அதிகமான கவிகளைப் பாடுகிறது.
இந்த சவியா பருவமடையாத ஆனால், மலர்தலை நெருங்கிய பருவப் பெண்ணாகப் பாடல்களில் உள்ள உரையாடல்கள் குறிப்பிடுகின்றன.
சவியாவின் கவிகளில் வெளிப்படும் ஒரு கதை காதல் கதையாக இருக்கிறது. அதுவும் இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையில் உருவான காதல்கதை.
அது உண்மைச் சம்பவம் என்றும் கூறுகிறார்கள். கிழக்கில் முஸ்லிம்களின் மத்தியில் இருக்கும் ஒரு குடி இந்தக் காதல் சம்பவங்களால் உருவானது என்ற கதைகளும் உண்டு. வண்ணாயக லெவ்வைக் குடி” அதாவது எலவைக்குடி என்பார்கள்.
நெடுநாட்களாக காட்டில் தவமிருந்த ஓர் இளம் பௌத்தத் துறவிக்குப் பசியைக் கட்டுப்படுத்த வழியற்றுப்போகிறது. காட்டிலிருந்த குளங்கள் வற்றிவிடுகின்றன. மரத்திலிருந்த பழங்கள் சட்டென்று மறைந்துவிடுகின்றன. வனத்தின் அருகிலிருக்கும் ஏதாவதொரு ஊருக்குள் நுழைந்து யாசகம் பெறலாமென்று தீர்மானிக்கிறார். வளைந்து செல்லும் ஒற்றையடிப் பாதை வழியே ஊருக்குள் நுழைகிறார்.
மரங்களும் கூடவே நடந்து வருகின்றன.
கிடுகளாலும், மட்டைகளாலும் அமைக்கப்பட்டிருந்த குடில்களைக் கொண்ட கிராமத்தின் தெருக்களில் தியான நடை நடந்து வருகிறார். காற்றில் மிதப்பதைப்போன்ற அந்த நடையையும், மழித்த தலையையும், உடம்பைச் சுற்றிய காவி உடையையும் கண்ட கிராமத்துப் பெண்கள் அந்நியர் ஒருவர் ஊருக்குள் வருகிறார் என உணர்ந்து, தம்முடைய வீடுகளுக்குள் ஒளிந்துகொள்கிறார்கள்.
கிடுகுகளால் நெய்யப்பட்ட (செய்யப்பட்ட) வாசல் கதவுகளையும் இறுக மூடிவிட்டனர். ஒவ்வொரு வீடாகத் தட்டிக்கொண்டு தெருவெங்கும் அலைந்து கொண்டிருக்கிறார் இளம் துறவி.
பூவலில் குளித்துவிட்டு வீடு நோக்கி நடந்து வந்த தேவதையைப் போன்ற செய்னம்பு நாச்சியார், எதிர்பாராமல் இளந்துறவியின் முன்னால் வந்துவிடுகிறார்.
அறை குறையாக உடுத்த ஆடைகளுடனும், கக்கத்தில் தண்ணீர்க்குடமும், உலராத நீர்த்துளிகள் சொட்டிக்கொண்டிருக்க, ஓடி மறைந்து கொள்ள இடமின்றிச் சுற்று முற்றும் பார்க்கிறார். குடிசைகளும், வாசல்களும் மூடப்பட்டிருக்கின்றன. செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.
தெருவிலுள்ள வீடுகளிலிருந்து வேலி இடுக்குகளால் கண்கள் இருவரையும் மொய்த்துக்கொண்டிருக்கின்றன. இளந்துறவி, தனது பாத்திரத்தை நீட்டி செய்னம்பு நாச்சியாரிடம் தண்ணீர் கேட்கிறார். அவளும் ஊற்றிக்கொடுக்கிறார்.
துறவி தண்ணீரை வயிற்றுக்குள் அனுப்புகிறார். ஆனால், அவருடைய தவம் மனதிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தது. செய்னம்பு ஓடிச்சென்று வீட்டின் ”சாப்புக்கதவை மூடி” அறைக்குள்ளே மறைந்துகொள்கிறாள்.
இளம் துறவியோ ஞானம் பெற்றதைப் போலக் காட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். பாதணிகள் இல்லாத கால்களில் முதன் முதலாக நெருஞ்சி முட்கள் தைத்தன. சுடுமணல் எரித்தது.
காடு அனைத்துக் கதவுகளையும் மூடியிருந்தது. இடங்கள் அச்சுறுத்தின. நதிகள் துரத்தின.மெலிதாகத் தழுவும் காற்று சாட்டையைச் சுழற்றி உடலெங்கும் அடித்துக்கொண்டிருந்தது. துறவியை மட்டுமே பிடித்துக்கொள்ள வந்த பிசாசுபோல இருள் கோரமாக மாறிவிட்டது.
செய்னம்பு நாச்சி இரண்டு வாரங்கள் வரை அந்த அறையினில் சிறையிருந்தார். உணவு இல்லை.
துறவி மீண்டும் ஊருக்குள் திரும்பினார். இஸ்லாம் மதத்திற்கு மாறினார். செய்னம்பு நாசியைத் திருமணம் முடிக்கத் துாது அனுப்பினார். இதற்கும் மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன.
செய்னம்பு நாச்சியின் குடும்பமோ அச்சத்திலிருந்து. புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களை ”மௌலா (மஹ்லா) ” என்று அழைப்பார்களே, அவருக்குத் திருமணம் முடித்துக்கொடுத்தால் பரம்பரை பரம்பரையாக அந்தப் பெயர் தொடருமே என்ற அச்சமும் இருந்தது. ஆயினும், அந்நிய ஆண் அறை குறை ஆடையுடன் பார்த்த காரணத்தால் யாரும் செய்னம்பு நாச்சியை திருமணம் முடிக்க விரும்பவுமில்லை என்ற ஒரு யோசனையும் அவர்களுக்கு இருந்தது.
அந்த இளம் துறவி மதம்மாறி தன்னை பெண் கேட்டு அனுப்பினார் என்ற செய்தி செய்னம்பு நாச்சியின் காதுகளுக்கும் எட்டியது. அது அவரை இனம்புரியாத ஓர் ஆனந்தத்தில் ஆழ்த்தியது.
கதையில் வரும் இந்த இடத்தை மகாகவி சவியா விவரிக்கும்போது, எவ்வளவு கவித்துவமும், எவ்வளவு வெளிப்படைத் தன்மையும் நிறைந்திருக்கிறது என்பதைக் கவனிக்கலாம். அந்த வர்ணணைகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்காகவே இந்தக் கதையைக் கூடச் சொல்கிறேன்.
பின்னர் அவர்கள் இணைந்து வாழ்ந்தார்கள் என்பதும், அந்த இளம் துறவி 1707 ம் ஆண்டு கண்டியை ஆண்ட வீர நரேந்திர சிங்க என்பவனின் மகன் என்பதும் வரலாறு. இப்படித்தான் அந்த நாட்டார் கதை செவிவழியாகப் பரவி வாழ்கிறது. அந்தக் கதை வாய் மொழிப்பாடலாகவும் இருக்கிறது.
வனத்திலிருந்து காதலினால் ஞானம் பெற்றுத் திரும்பிய இளம் துறவி, தன்னை பெண்கேட்டு அனுப்பி வைத்த செய்தியை அறிந்த செய்னம்புவின் அந்தக் கணநேரத்து மனதின் நிலவரம் எப்படி இருந்தது..?
அதை நமது மகாகவி சவியா இப்படிப் பாடுகிறார்.
அப்துல் ரகுமான் லெவ்வை
அவவை நிக்காஹ் முடிக்கக் கேட்டு
மோதினார் வந்த கதை
அவவை என்னென்னமோ செய்தது
0 அப்துல் ரகுமான் - மதம்மாறிய இளந் துறவி
0 மோதினார் - பள்ளியில் தொழுகைக்காக அழைக்கும் பாங்கு சொல்பவர்.
மனதிலேதோ ஒன்று
புகுந்து ஏதேதோ செய்வதுபோல்
இருந்ததாம் செய்னம்புக்கு
என்னவென்று தெரியாதவக்கு
உடெம்பெல்லாம் சிலிர்க்கிறாப்போல்
உரோமங்கள் நிமிர்ந்து நின்று
நெஞ்சுயர்ந்து நின்று காம்பில்
நீர் கசியக் கண்டாவாம்
தொடை இடை வெட்டுக்குள்ளே
ஏதோ ஒன்று ஊர்வதைப்போல்
அவ அதைத் தொட முடியாதென்று
நாச்சியார் நன்றாய் கண்டார்
வானத்திலந்த இரண்டு
கண்களும் இருந்து அவவின்
கண்களை பார்த்து மனதை
தடவுவதாய் உணரக் கண்டார்
மினுமினுப்பாய் தேகமெல்லாம்
பூரித்து மாம்பழம் போலாகி
முந்திரிப் பூ வாடை ஒன்று
வீச அவர் முகந்தார்.
350 வருடங்களுக்கு முன்பு கிழக்கு முஸ்லிம்களின் மத்தியில் உருவான ஒரு கதைப்பாடல். அதுவும் பருவமடையாத ஒரு சிறுமி பாடும் கவித்துவமும், உணர்வெழுச்சியும் ஒருங்கே கலந்து வெளிப்படும் அற்புதமான கவி இது.